டெல்லி: 2008-ம் ஆண்டுகளில் 55 பில்லியன் டாலர் மதிப்போடு உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அனில் அம்பானி இன்று ஒரு கடன்காரனின் கடனைக் கூட அடைக்க வழி இல்லாமல் தவித்து வருகிறார்.
2008-ம் ஆண்டில் சுமார் 55 பில்லியன் டாலர் சொத்து வைத்திருந்த அதே அனில் அம்பானியின் சொத்து இன்று வெறும் 300 மில்லியன் டாலராக சரிந்திருக்கிறது.
அனில் அம்பானி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த 550 கோடி ரூபாயும் எரிக்ஸன் நிறுவனம், ஆர்காம் நிறுவனத்துக்கு வழங்கிய பராமரிப்பு சேவைகளுக்கான காசு தான். ஆனால் இன்று வரை வழங்க முடியாமல் தவித்து வருகிறார் அனில் அம்பானி.
கடனாளி பணம்
அனில் அம்பானி தான் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாகச் சொல்லி பல முறை கால அவகாசம் கேட்டும் ஒழுங்காக பணத்தைக் கொடுக்கவில்லை என்பதால் நீதிமன்றப் படியேறியது எரிக்ஸன் நிறுவனம்.
கண்டனம்
ஒரு பக்கம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காததற்காக மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். மறு பக்கம் தனக்கு வர வேண்டிய வருமான வரிச் சலுகைத் தொகைகள் மற்றும் ரீஃபண்டுகளை, கடன் கொடுத்த நிறுவனங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
வேண்டாம்
கடன் கொடுத்த நிறுவனங்கள் எடுத்துக் கொண்ட 2600 கோடி ரூபாய் தொகையை ஆர்காம் நிறுவனத்துக்கு மீண்டும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என கீழ் நீதிமன்றங்கள் தீர்பளித்திருக்கிறார்கள்.
ஜெயில்
இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, நாளைக்குள் சொன்ன படி 550 கோடி ரூபாயை எரிக்ஸன் நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்றால் அனில் அம்பானி ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.
அனிலுக்கு வீழ்ச்சி
ஒரு பக்கம் முகேஷ் அம்பானி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தால், அனில் அம்பானிக்கோ தன் கடன் காரர்களை சமாளிக்கவே திண்டாடிக் கொண்டிருக்கிறார்.