சென்னை: காதம் திருமணம் செய்த தம்பதிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு தனி ரேசன் கார்டு வழங்க தமிழ்நாடு அரசு பொது விநியோக பாதுகாப்புத் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு புது ரேசன் கார்டுகள் வழங்கப்படுவதால் அவர்களின் பெற்றோருடன் வைத்துள்ள குடும்ப ரேசன் கார்டுகளில் இருந்து காதல் திருமணம் செய்தவர்களின் பெயர்கள் உடனடியாக நீக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.
குடும்ப ரேசன் கார்டுகளில் இருந்து காதல் திருமணம் செய்தவர்களின் பெயர்கள் மற்றும் ஆதார் விவரங்கள் நீக்கப்படுவதால் போலி ரேசன் கார்டுகள் மற்றும் 2 ரேசன் கார்டுகளையும் பயன்படுத்தி பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்கள் பெறுவது முற்றிலும் தடுக்கப்படும்.
காதல் திருமண வாழ்க்கை
பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஒடிவந்து காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் ஆரம்பத்தில் அடிப்படை பொருளாதார நிதிச் சிக்கல்களை சந்திப்பது வாடிக்கை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் கைவிட்டு விடுவதால் திடீர் நிதிச் சிக்கலை சந்திக்க நேர்வதால் அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் விரிசல் விழ அதிக வாய்ப்புகள் உள்ளன.
மறந்து போன சான்றிதழ்கள்
காதல் கண்ணை மறைக்கும் என்பதால் பெரும்பாலான காதலர்கள் வீட்டை விட்டு ஓடிவரும்போது வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் தங்களின் கல்விச் சான்றிதழ்களைக் கூட எடுக்க மறந்துவிட்டு ஓடி வந்துவிடுகின்றனர். திருமணம் முடிந்த உடன்தான் காதலர்கள் சுயநினைவுக்கே வருகின்றனர். அப்பொழுது அவர்களின் மர மண்டைக்கு உறைக்கும் தங்களின் நிதிச் சிக்கல்கள் மற்றும் பிற்கால வாழ்க்கைக்கு முக்கியமான கல்விச் சான்றிதழ்களின் நினைப்பு. இந்த நினைவு வந்த உடனே அவர்களின் முகங்களில் இருள் சூழ ஆரம்பித்துவிடும்.
கவுரவப் பிரச்சனை
பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்களின் மகனோ அல்லது மகளோ காதல் திருமணம் செய்வது அவர்களின் கவுரப் பிரச்சனையாக நினைப்பதால் தங்கள் வாரிசுகளின் அனைத்து சான்றிதழ்களை குப்பையில் போட்டு எரித்துவிடுவதும் உண்டு. இதுவும் காதல் திருமணம் செய்தவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடுவது வாடிக்கை.
இ-ரேசன் கார்டு வில்லன்
காதல் திருமணம் செய்தவர்கள் வேறு வழி இல்லாமல் தங்களுக்கு புது ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முயன்றால் அங்கேயும் இ-ரேசன் கார்டு என்ற வில்லன் குறுக்கே நிற்பான். இப்போது அனைத்து ரேசன் கார்டுகளும் இ-ரேசன் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இவர்களின் பெயர் மற்றும் ஆதார் விவரங்கள் அனைத்தும் பெற்றோர் வசம் உள்ள இ-ரேசன் கார்டுகளில் இருக்கும். பெற்றோர்களும் காதல் திருமணம் செய்த தங்கள் வாரிசுகளின் பெயர்களை ரேசன் கார்டுகளில் இருந்து வேண்டு மென்றே நீக்காமல் விட்டு விடுவதும் உண்டு. இதனால் காதல் திருமணம் செய்த தம்பதிகள், தங்கள் பெற்றோர் வீட்டில் உள்ள ரேஷன் கார்டிலிருந்து பெயரை நீக்க முடியாமலும், பொது விநியோக மானிய நன்மைகளை பெற முடியாமலும் நெருக்கடிக்கு ஆளாவது தொடர் கதையாக உள்ளது.
புது ரேசன் கார்டு
காதல் திருமணம் செய்தவர்களின் இக்கட்டான சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட தமிழக அரசின் பொது விநியோகத் துறை அவர்களின் கவலையைப் போக்க முன்வந்துள்ளது. இதன்படி காதல் தம்பதிகள் பயனடையும் வகையில் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரேசன் கார்டு பெறுவது எப்படி
பொதுவிநியோகத் துறையின் உத்தரவை அடுத்து காதல் திருமணம் செய்தவர்கள் தங்களுக்கு புதிய இ-ரேசன் கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக காதல் திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் ரூ.100 மதிப்பிலான முத்திரைத்தாளில் (Stamp Paper) தங்களது பெயரை விட்டில் உள்ள ரேஷன் கார்டுகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்குத் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் ஆகும்.
தமிழ்நாடு அரசு பொது விநியோக பாதுகாப்புத் துறை
பொது விநியோகத் துறையிடம் கோரிக்கை மனு அளித்த சில நாட்களில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களின் பெயர் மற்றும் ஆதார் விவரங்கள் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டு புதிய கார்டை பெற முடியும் என்று தமிழ்நாடு அரசு பொது விநியோக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.