டெல்லி: ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பிளாட்பாம்களான அமேசான் பிரைம், சன்நெக்ஸ்ட், ஜியோ டிவி போன்றவைகளின் வருகையால் 80 சதவிகித மக்கள் டிவியை மறந்து வருகின்றனர். வீட்டில் டிவி இருந்தாலும் ஆன்லைனில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதில் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
முட்டாள் பெட்டி என்ற பெயர் இருந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் சீரியல்களில் இருந்த ஆர்வம் அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. இதனை அறிந்தே 24 மணிநேரம் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. காலையில் 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை டிவி சீரியல்களை அசராமல் பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். குறைந்த பட்சம் 10 மணிநேரமாவது டிவி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கின்றனர். டிவி நிகழ்ச்சிகளை விட அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட் போன்ற ஆப்களின் வருகையால் டிவி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இனிவரும் காலங்களில் 80 சதவிகித மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை விட்டுவிட்டு இணையதள வாடிக்கையாளர்களாக மாறப்போவதாக வெலாசிட்டி (Velocity) நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மக்கள் தற்போது தொலைக்காட்சியைப் பார்க்கும் சராசரி நேரம் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. தொலைக்காட்சியில் அழுது வடியும் சீரியல் தொடர்களை பார்ப்பதை தவிர்த்து ஆன்லைனில் பொழுதை செலவிடும் நேரம் கணிசமாக கூடி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தூர்தர்சன் மட்டுமே
1980ஆம் ஆண்டுகளில் மக்களின் பொழுது போக்கிற்கு உபயோகமாக இருந்தவை தூர்தர்சன் மற்றும் தேசிய ஒளிபரப்பு மட்டுமே. வேறு வழி இல்லாததால் மக்களும் பொறுமையாக உட்கார்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து வந்தனர்.
தனியார் தொலைக்காட்சிகள்
1990ஆம் ஆண்டுகளில் பிற நாடுகளில் உள்ளது போல், தனியார் துறையினரும் தொலைக்காட்சியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் தனியார் துறையினர் தங்கள் விருப்பப்படி தொலைக்காட்சிகளை ஆரம்பித்தனர்.
அழுது வடியும் நெடுந்தொடர்கள்
2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த பெரும்பாலான தொலைக்காட்சி உரிமையாளர்கள் பார்வையாளர்களை கவர்வதற்காக போட்டி போட்டு அருவருக்கத் தக்க நிகழ்ச்சிகளையும் அழுது வடியும் நெடுந்தொடர்களையும் ஒளிபரப்புத் தொடங்கினர். இதையும் ஒளிபரப்பான தொடக்கத்தில் சகித்துக்கொண்ட பொதுமக்கள், பின்னர் படிப்படியாக அந்த மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்க்கத் தொடங்கினர்.
விளம்பர வருவாய்
பல புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக தொலைக்காட்சி உரிமையாளர்கள் அதற்காக கூடுதலாக கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கினர். அதே சமயத்தில் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு விளம்பர வருவாயும் அதிகரிக்கத் தொடங்கியது. நாளடைவில் தகவல் தொடர்புத் துறை வேகமான வளர்ச்சி அடைந்ததால் நாடு முழுவதும் புற்றீசல் போல் பல தனியார் நிறுவனங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தும் உரிமத்தைப் பெற்று நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தனர்.
கூடுதல் கட்டணம்
ஒரு பக்கம் புற்றீசல் போல் புதிது புதிதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்து கொண்டு இருந்தாலும், அதற்கான கட்டணங்களும் அதிகமாக வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்க்க ஆரம்பித்தனர்.
ஸ்மார்ட் போன்களின் வருகை
இந்நிலையில் தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியால் ஸ்மார்ட் ஃபோன்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு புதிய மாடலில் ஸ்மார்ட் ஃபோன் வருகையும், இணையதள வசதியும் பெருக ஆரம்பித்தது.
விருப்பமான நிகழ்ச்சிகள்
இணையதள வசதி பெருக ஆரம்பித்ததால், இது நாள் வரையிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுமையாக பார்த்து வந்த பெரும்பாலான மக்கள் அதைத் தவிர்த்து கையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் தங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பார்க்க ஆரம்பித்தனர்.
ஜியோ வருகை
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இணையதள சேவையால், நாட்டின் இணையதள உபயோகம் அதிகமாகிவிட்டது. அதுவும் குறைவான விலையில் கூடுதல் வேகத்தில் இணையதள சேவை கிடைப்பதால் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூட ஆரம்பித்தது.
ட்ராய்
இணையதள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மற்றொரு காரணம், சமீபத்தில் ட்ராய்(TRAI) அமைப்பு தொலைக்காட்சி கேபிள் கட்டணத்தை உயர்த்திவிட்டது. இதுதான் சமயம் என்று வாடிக்கையாளர்களும் தொலைக்காட்சி இணைப்பை துண்டித்துவிட்டு இணையதளத்தின் மூலம் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இணையதள வாடிக்கையாளர்கள்
இனிவரும் காலங்களில் கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை விட்டுவிட்டு இணையதள வாடிக்கையாளர்களாக மாறப்போவதாக வெலாசிட்டி (Velocity) நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும 2010 பேர்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் சினிமா, சீரியல்
நாட்டின் பெரும்பகுதி மக்கள் தொலைக்காட்சி பார்வையாளர்களாக இருந்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் இணையதள பார்வையாளர்களாக மாறப்போவதாக வெலாசிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜஷல் ஷா கூறினார். சமீபத்தில் டிராய் நிறுவனம் தொலைக்காட்சி கேபிள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அத்துடன் ஜியோவின் வருகைக்குப் பின் நாட்டில் இணையதள உபயோகம் முன்பைவிட குறைந்த விலையில் எளிமையாகக் கிடைப்பதால் ஆன்லைனில் சினிமா, சீரியல் பார்க்கும் வாடிக்கையாளர்கள் வேகமாக அதிகரித்து வருகின்றனர் என்றும் ஜஷல் ஷா கூறினார்.
ஆன்லைன் பொழுதுபோக்கு தளம்
மக்கள் தற்போது தொலைக்காட்சியைப் பார்க்கும் சராசரி நேரம் நாளொன்றுக்கு 2 மணிநேரத்துக்கும் குறைவாக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. அதே நேரத்தில் ஆன்லைனில் பொழுதைச் செலவிடும் நேரம் கணிசமாக உயர்ந்துள்ளதை ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
ஆன்லைன் ஸ்டீரிமிங் பிளாட்பார்ம்
தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்வுகளை ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், ஜியோடிவி போன்ற மொபைல் ஆப்ஸ்களில் பார்க்கத் தொடங்கியுள்ளதால் தொலைக்காட்சியின் தேவையும் மோகமும் சரியத் தொடங்கியுள்ளது. எனவே இனி வரும் ஆண்டுகளில் சுமார் 80 சதவீத தொலைக்காட்சி பார்வையாளர்கள் ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்குவார்கள் என்று தகவல் வெளியிட்டுள்ளது. ரேடியோ போய் டிவி வந்தது இனி டிவியும் வீடுகளில் காட்சிப்பொருளாக மாறும் நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை.