மும்பை: கடந்த ஒரு மாத காலமாக HUL பங்கு விலை வெறும் 2.2% மட்டுமே அதிகரித்திருக்கிறது. ஆனால் நிஃப்டி 500 இண்டெக்ஸ் அதே ஒரு மாத காலத்தில் சுமாராக 9.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இப்போது இந்தியாவின் பொருளாதாரம் மந்தமடையத் தொடங்கி இருக்கிறது. இந்த நேரத்தில் HUL நிறுவன பங்குகளின் வால்யூம்கள் அதிகரித்து சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என HUL நிறுவனமே கவலையில் ஆழ்ந்து இருக்கிறது.
HUL நிறுவனம் கடந்த ஐந்து காலாண்டுகளாக இரண்டு இலக்க வால்யூம் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அதுவும் இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் தான் என HUL நிறுவனமே சொல்கிறது. அதோடு கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் HUL நிறுவனத்தின் வால்யூம்கள் கடந்த டிசம்பர் 2017-ஐ விட 10% வால்யூம் அதிகரித்திருந்தது.
அறிக்கை
உலகின் புகழ் பெற்ற சி.எல்.எஸ்.ஏ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் கூட HUL-ன் துறையில் இருக்கும் தேவைகள் கொஞ்சம் குறைந்து வருவதையும் சொல்லி இருக்கிறது. இந்த தேவை குறைவு முழுக்க முழுக்க பலவீனமான மேக்ரோ பொருளாதார காரணிகளால் என்பதையும் சொல்லி இருக்கிறது.
லாப மார்ஜின்
இனி வரும் காலங்களில் HUL அதிக லாப மார்ஜின்களைக் கொண்ட பொருட்களை விற்கும் வேலையில் இறங்கி இருக்கிறதாம். அதோடு தன் செலவுகளையும் மறு சீரமைக்க உள்ளதாம். ஏற்கனவே HUL நிறுவனம் இந்தியாவின் புகழ் பெற்ற ஹார்லிக்ஸ் பானத்தைக் தயாரிக்கும் க்ளாக்ஸோ ஸ்மித் க்ளின் (GSK) நிறுவனத்தை தன்னோடு இணைத்துக் கொள்ளும் வேலையில் இறங்கி இருக்கிறது.
HUL - ஜிஎஸ்கே இணைப்பு
இந்த HUL - GSK இணைப்பு டிசம்பர் 2019-க்குப் பிறகு தான் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் HUL பங்குகளின் விலை 29.8% அதிகரித்திருக்கிறது. HUL நிறுவன பங்குகளின் மதிப்பீடுகளும் உச்சத்தில் தான் இருக்கின்றன. ஆனால் இப்போது HUL நிறுவன பங்குகளின் விலையை உச்சத்தில் கொண்டு செல்லும் ட்ரிக்கர் செய்திகள் தான் இல்லை.
ட்ரிக்கர் தேவை
HUL நிறுவன பங்குகளின் விலையைக் கூட்டும் ரீதியிலான செய்திகள் வரும் பட்சத்தில் அந்த செய்திகள் தான் ட்ரிக்கர்களாக செயல்பட்டு HUL நிறுவன பங்கின் விலையை மேலே எடுத்துச் செல்லும். வரும் காலாண்டு முடிவுகள் HUL நிறுவனத்துக்கு மிக முக்கியமானது. இந்த காலாண்டிலும் வால்யூம்களை அதிகரிப்பது மற்றும் மார்ஜின்களும் அதே நிலையில் இருப்பது அவசியமாகிறது.