சின்சொலி: Centre for Monitoring Indian Economy - CMIE என ஒரு தனியார் பொருளாதார கணிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு கோடி பேர் தங்கள் வேலைகளை இழந்திருப்பதாகச் சொல்கிறது.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்த 1 கோடி வேலை இழப்பில் 90 லட்சம் வேலைகளை இழந்தது பெண்கள் தானாம். அதுவும் குறிப்பாக அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றும் பெண்கள் தான் அதிகம் வேலை இழந்திருக்கிறார்களாம்.
சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த மார்ச் ஏப்ரல் காலத்தில், வெறுங்காலோடு கோதுமை வயல்களில் இறங்கி கதிர் அறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது பெண்கள் சில நாட்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை ஒரு பெரிய பச்சை இயந்திரம் சில மணி நேரங்களில் செய்து முடித்துவிடுகிறது.
செலவு மிச்சம்
இந்த கதிர் அறுக்கும் இயந்திரத்தினால் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெரும்பாலான விவசாயிகளுக்கு நிறைய பணமும், நேரமும் மிச்சமாகிறதாம். அதோடு விரைவாக கோதுமையை விற்கவும் முடிவதாகச் சொல்கிறார்கள்.
எல்லாம் இயந்திரங்கள்
இப்படி கிராம புறப் பெண்கள் மட்டுமே அதிகம் உடல் உழைப்பு கொடுத்து செய்யும் பணிகளை எல்லாம் இன்று இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கிறது. வெறும் அரிசி, கோதுமை பயிர்களுக்கு கதிர் அறுப்பது போய் இப்போது, கரும்பு, வெங்காயம் வரை அனைத்து வயல்களிலும் இந்த கதிர் அறுக்கும் இயந்திரம் தன் கைவரிசையைக் காட்டுகிறதாம்.
கிராம வாசி
இதனால் தங்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக சாயா கராதே என்கிற பெண் சொல்கிறார். இவரின் சொந்த ஊர் சின்சொலி (Chincholi) கிராமம், மும்பையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இப்போது எல்லாம் எங்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் காலம். ஆனால் இப்போது ஏதாவது வேலை கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
8 வருடத்தில் 8% சரிவு
சமீபத்தில் லீக்கான வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அரசு அறிக்கையில், வேலை பார்க்கும் பெண்களின் பங்கு 2017 - 18-ம் ஆண்டில் 23.3 சதவிகிதமாக குறைந்து இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த 23.3% என்பது 2011 - 12-ல் இருந்ததை விட 8 சதவிகிதம் குறைவு.
ஆண்களைப் போன்ற வாய்ப்புகள் இல்லை
ஏற்கனவே இந்தியாவில் பெண்களால் எல்லா துறைகளில் எளிதாக வேலை பார்க்க முடிவதில்லை. ஆண்களுக்கு இருக்கும் வேலை வாய்ப்புகளைப் போல பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. கிடைத்தாலும் குடும்பத்தை மையமாக வைத்திருக்கும் இந்திய பெண்களால் திருமணத்துக்குப் பின் வேலைக்கு போக முடிவதில்லை என்பதையும் இந்த CMIE அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.