சென்னை: திராவிடர் முன்னேற்றக் கழகமோ அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ இரண்டுமே கல்விக் கடன் தள்ளுபடி பற்றி தங்கள் தேர்தல் அறிக்கைகளில் பேசி வருகின்றன.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா..? இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கல்விக் கடன் வாங்கி தங்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கிறார்கள். அதே போல் கல்விக் கடனை திருப்பிக் கட்டாமல் இருப்பவர்களும் தமிழகத்தில் தான் அதிகமாம்.
மொத்த இந்தியாவில் 100 கல்விக் கடன்கள் வாராக் கடன்களாக இருக்கிறது என்றால் 17 கடன்கள் தமிழகத்தைச் சேர்ந்ததாக இருக்கின்றன. அதே போல் இன்று வரை இந்தியாவில் 100 கல்விக் கடன்கள் தரப்படுகிறது என்றால் 20 கல்விக் கடன்கள் தமிழகத்தில் மட்டும் தரப்படுகின்றன.
வாக்குகள்
தமிழகத்தில் மொத்தம் 3.84 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இந்த மக்களவைத் தேர்தலில் மட்டும் சுமார் 9 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் முதல் முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்யப் போகிறார்கள்.
530 கல்லூரிகள்
ஒவ்வொரு ஆண்டிலும் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் பொறியாளர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இத்தனை பட்டதாரிகளை உருவாக்க தமிழகத்தில் மட்டும் சுமார் 530 பொறியியல் கல்லூரிகள் திறந்து கிடக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமாராக 20,000 கோடி ரூபாயை தமிழக கல்விக் கடன்களுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.
சாத்தியமே இல்லை
கல்விக்கடன் டாஸ்க் ஃபோர்சில் இருக்கும் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் "திராவிடக் கட்சிகள் சொல்வது போல தமிழக மாணவர்களின் கல்விக் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்யவே முடியாது. அப்படி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் முதலில் மத்திய அரசும், ஆர்பிஐ-ம் ஒப்புக் கொள்ள வேண்டும். அதன் பின் கடன் கொடுத்த வங்கிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். இது இரண்டுமே நடக்காதது.
கல்லூரிக் கட்டணங்கள்
இப்படி கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, கல்லூரிக் கட்டணங்களை குறைக்கச் சொல்லலாம். பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளை அரசியல் பிரமுகர்கள் தான் நடத்துகிறார்கள். எனவே கல்லூரி கட்டணங்களை குறைக்கச் சொல்வதே தமிழக மாணவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கு நல்லதாக இருக்கும். அதோடு வட்டி இல்லா கல்விக் கடன், அதிக ஊக்கத் தொகை மற்றும் ஸ்கார்லர்ஷிப்களை அறிவிக்கும் படியும் சொல்கிறார்.
மாணவர்களுக்கு எச்சரிக்கை
தயவு செய்து கல்லூரி மாணவர்கள் குறிப்பாக கல்விக் கடன் வாங்கி விட்டு திரும்ப கட்டிக் கொண்டிருப்பவர்கள், இந்த தேர்தல் அறிக்கைகளில் சொல்லி இருப்பதை நம்பாமல் ஒழுங்காக தங்கள் கடன்களை அடைத்து வரவும். அப்போது தான் எதிர்காலத்தில் மீண்டும் வங்கிகளில் கடன் என்று போனால் கடன் கிடைக்கும். அரசியல் கட்சிகள் சொல்வதைக் கேட்டு கடன்களை திருப்பிக் கட்டவில்லை என்றால் சிபில் ஸ்கோர் சரிந்து விடும். சிபில் ஸ்கோர் சரிந்தால் கடன் கிடைக்காது. எனவே தயவு செய்து கடனை ஒழுங்காக கட்டச் சொல்கிறார்.
புழுகும் திராவிடக் கட்சிகள்..! கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..!