விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று ஒரு சுயேட்சை வேட்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அவர் பெயர் அரசன். பாண்டூரை சேர்ந்த விவசாயி, வயது 57.
தேர்தலில் நிற்க வேட்பு மணுவோடு 12,000 ரூபாயை டெபாசிட் தொகையாகச் செலுத்த வேண்டும். வேட்பு மனுவை கலெக்டரிம் கொடுத்துவிட்டு, டெபாசிட் பணத்தை கொடுக்க எண்ணிப் பார்த்த போது 12 ஆயிரம் ரூபாய்க்கு 500 ரூபாய் குறைவாக இருந்திருக்கிறது.
உடனே அருகில் அவரை முன் மொழியவும், வழி மொழிபவர்களிடமும் பணம் உள்ளதா எனக் கேட்காமல், அவர் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார். அவர் மனைவியும் "ஆம் நான் தான் காய்கறி வாங்க 500 ரூபாய் எடுத்துக் கொண்டேன்" என பதில் சொல்லி இருக்கிறார்.
அதன் பின் தான் தன்னுடன் வேட்பு மனுவை முன்மொழிய அழைத்து வந்தவர்களிடம் பணம் இருக்கிறதா என கேட்டுப் பார்த்திருக்கிறார். யாரிடமும் அவ்வலவு பெரிய தொகை இல்லை. அங்கிருந்த பலரிடம் நாளை பணத்தை தந்துவிடுவதாகச் சொல்லி பணம் கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் இன்று தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசன் இதற்கு முன்பே விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளாராம். அதோடு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியிலும் இரு முறை போட்டியிட்டுள்ளாராம். உள்ளாட்சி தேர்தலிலும் இரண்டு முறை போட்டியிட்டுள்ளாராம். இந்த முறை மூன்றாவதாக போட்டி இட இந்த 500 ரூபாய் தான் பிரச்னையா..? நாளை பணத்தோடு வந்து மனுதாக்கல் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்.