பெல்ஜியம்: பந்தயத்தில் அதிக தூரம் பறந்து சாதனை புரிந்த அர்மாண்டோ புறாவை ஏலம் விட்டதில் சுமார் ரூ.10 கோடி கொடுத்து ஒருவர் வாங்கி பார்வையாளர்கள் அனைவைரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இதற்கு முன்பு ஏலம் விடப்பட்ட புறாக்களில் அதிக விலைக்கு போனது சுமார் ரூ.3 கோடிக்கு மட்டுமே. அந்த சாதனையை அர்மாண்டோ புறா முறியடித்துவிட்டது என்று சொன்னால் மிகையில்லை.
ஏலம் தொடங்கும் போது அர்மாண்டோ புறா சுமார் ரூ.3.50 கோடி வரை மட்டுமே ஏலம் போகும் என்று நினைத்தோம். ஆனால் போட்டி கடுமையாக இருந்ததால் நாங்கள் எதிர்பார்த்த தொகைக்கு மாறாக அதிக விலைக்கு ஏலம் போனது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
புறா விடு தூது
சங்க காலம் தொட்டு 1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு நாட்டு மன்னர்கள் ரகசியங்களை பரிமாறிக்கொள்வதற்கும், காதலனும் காதலியும் ரகசியமாக தங்கள் காதலை பரிமாறிக்கொள்வதற்கும் தூதுவனாக இருந்தது புறா. ஓலையில் எழுதி ஒற்றர்கள் மூலம் கொடுத்தனுப்பினால் ரகசியம் கசிந்துவிடும் என்பதால் பெரும்பாலும் புறாக்கள் மூலமே தூது அனுப்பப்பட்டு வந்தன.
சிபிச் சக்கரவர்த்தி
சங்க காலத்தில் சிபிச் சக்கர்வர்த்தி வேட்டைக்கு சென்ற இடத்தில் அடிபட்டுக்கிடந்த ஒரு புறாவுக்கு தன்னுடைய தொடையில் இருந்து சதையை பிய்த்து எடுத்து அதற்கு தந்து உதவினார் என்று நாம் பள்ளிப்பாடத்தில் படித்தது நம் ஞாபகத்திற்கு வரும்.
புறா 65
சில மன்னர்கள் பொழுது போக்குவதற்காகவும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுத்துவதற்காகவும் புறாக்களை வளர்த்து வந்தனர். பந்தயங்களில் தோற்றுவிட்டால் நாட்டை எழுதிக்கொடுத்த வரலாறம் உண்டு. தூது அனுப்பிய புறாவை புறா 65 ஆக்கி சாப்பிட்டு விட்டால் உடனே அந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வென்று வருவதும் உண்டு.
பந்தயப் புறாக்கள்
நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் வெறும் பொழுதுபோக்கிற்காகவும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காகவும் மட்டும் புறாக்களை வளர்த்து வருகின்றனர். வெகு சிலர் மட்டுமே போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வைப்பதற்கும் புறாக்களை வளர்த்து வருகின்றனர்.
அர்மாண்டோ புறா
புறாக்களை பந்தயங்களில் கலந்து கொள்ளவைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. புறாக்களுக்காகவே ஆண்டு தோறும் ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறும் புறாக்கள் கோடிக்கணக்கில் விலை போவதும் உண்டு. அப்படித்தான் அர்மாண்டோ என்ற புறாவும் பெல்ஜியத்தில் நடைபெற்ற புறாக்கள் பங்குகொள்ளும் உலக சேம்ப்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று நீண்ட தூரம் பறந்து வெற்றிபெற்றது.
ரூ.17கோடி ரூபாய்
பந்தயத்தில் வெற்றிபெற்ற அர்மாண்டோ புறா கடந்த மார்ச் 17ஆம் தேதி ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்பத்தில் சுமார் ரூ.4.12 கோடி வரை ஏலம் கேட்கப்படும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஏனெனில் இதற்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் புறாக்கள் அதிக பட்சமாக ரூ.3.50 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆனால் இரு சீன வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தொகையை உயர்த்தியதால் விலை கூடியது. ஒட்டுமொத்தமாக அர்மாண்டோ மற்றும் அதன் 7 குஞ்சுகளுடன் சேர்த்து சுமார் ரூ.17 கோடிக்கு ஏலம் போனது.
ஊதாரித்தனம்
அர்மாண்டோ புறா ரூ.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது பற்றி ஏல நிறுவனத்தினர் கூறும்போது, ஒரு சாதாரண புறாவை யாராவது இவ்வளவு கூடுதல் தொகைக்கு வாங்குவார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. பணத்தை பெரிதாக மதிக்காதவர்கள், ஊதாரித்தனமாக செலவழிப்பவர்கள் மட்டுமே இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். அர்மாண்டோ புறா இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் போனது எங்கள் ஏல நிறுவனத்திற்கு மறக்க முடியாக அனுபவமாகும். இருந்தாலும் எங்களுக்கு இது நம்புவதற்கு சற்று கடினம்தான் என்றனர்.
5 வயசுதான்
5 வயதே ஆன அர்மாண்டோ புறா தற்போது ஓய்வு பெறும் வயதை எட்டியுள்ளது. தினமும் 12 மணி நேரம் பறந்து பயிற்சி எடுக்கும். அதன் கூர்மையான அறிவுத்திறனும் வலுவான சிறகுகளும் இன்னும் அதிக தூரம் வரை பறக்கும் ஆற்றலுடன் உள்ளதைக் காட்டுகிறது என்றார் ஏல நிறுவனத்தின் அதிகாரியான ஜோயல் வெர்சூட்.