டெல்லி: இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கான தேதி கடந்த மார்ச் 10-ம் தேதி தான் அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது.
மார்ச் 10, 2019-க்குப் பிறகு இன்று வரை மார்ச் 26, 2019 வரையான 15 நாட்களில் மட்டும் சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் நாடு முழுவதும் நடத்திய சோதனையில் பல்வேறு பொருட்களைப் பிடித்திருக்கிறார்களாம்.
பொருட்கள்
இந்திய ரூபாயில் பணம், வெளிநாட்டு கரன்ஸிகளான அமெரிக்க டாலர் சிங்கப்பூர் இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங் ஆஸ்திரேலிய டாலர் போன்ற கரன்ஸிகளில் பணம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மதுபான பாட்டில்கள், விலை உயர்ந்த பீர்கள், பிரியாணி போன்ற உணவுப் பொருட்கள், தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மற்றும் ஆபரணங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், ஆடைகள் என பல வகைகளில் 550 கோடி ரூபாய் மதிப்பிலானவைகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
தமிழகம் முதலிடம்
இதில் வருத்தமான மற்றும் எதிர்பார்த்த விஷயம் என்னவென்றால், இந்த 550 கோடி ரூபாயை மாநில வாரியாக பிரித்தால் தமிழகத்துக்கு தான் முதலிடமாம். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்திருக்கிறார்களாம்.
அடுத்த 2 இடங்கள்
நம் தமிழகத்துக்கு அடுத்த படியாக யோகி ஆதித்யநாத்தின் உத்தரபிரதேசத்தில் 104 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருக்கிறார்களாம். மூன்றாவது இடத்தில் தான் சந்திர பாபு நாயுடுவின் ஆந்திரப் பிரதேசம் வருகிறது. ஆந்திராவில் இருந்து 103 கோடி ரூபாய் மதிப்பிலானவைகளை பறிமுதல் செய்திருக்கிறார்களாம்.
திருமங்களம் ஃபார்முலா
மே 2009 திருமங்களம் இடைத் தேர்தல் வழியாக உலகுக்கே திருமங்களம் ஃபார்முலாவை சொல்லிக் கொடுத்த தமிழகத்திடமா மோத முடியும்..? அதுவும் தேர்தல் நேரத்தில் பணப் புழக்கம் மற்றும் பணப் பட்டுவாடா விஷயங்களில் மோத முடியுமா என்ன..? அது தான் வழக்கம் போல பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்திருக்கிறது. சரியாக கணக்கில் வந்தது தான் இவ்வளவு என்றால் கணக்கில் வராதது எத்தனை ஆயிரம் கோடிகள் தேறும் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.