டெல்லி: ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் செயல்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் 6000 ரூபாய் திட்டம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாடும் மக்களுக்கு மட்டுமே என்பதால் இதை நிச்சயம் செயல்படுத்த முடியும் என்று ரகுராம் ராஜன் கூறினார்.
குடும்பத்தலைவியின் வங்கிக் கணக்கில் மட்டுமே நேரடியாக வரவு வைக்கப்படும் குடும்ப பட்ஜெட்டை ஈடுசெய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நியாய் திட்டம்
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தயாரித்த தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாடும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதை அறிந்த ஆளுங்கட்சியான பாஜக, இது சாத்தியமில்லாதது, நாங்கள் சொல்வதை காப்பியடித்து மாற்றி சொல்கிறார் என்று குற்றம் சாட்டியது.
தேர்தல் அறிக்கை
பெரும்பாலான அரசியல் நோக்கர்களும் ராகுலின் "நியாய்" திட்டத்தை செயல்படுத்த முடியாதது என்றும் ஓட்டுக்காக செய்யும் அரசியல் தந்திரம் என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் இதை மறுத்த ராகுல் காந்தி, இத்திட்டத்தை நிச்சயம் செயல்படுத்த முடியும் என்றும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனை கலந்தாலோசித்த பின்பே தேர்தல் அறிக்கையில் அதை வெளியிட்டோம் என்று தெரிவித்தார்.
உன்னத திட்டம்
ராகுல் காந்தி இப்படி உறுதியாக தெரிவித்ததால் ஆளுங்கட்சியான பாஜக அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில் டெல்லியில் நடந்த தனது "மூன்றாவது தூண்" (The Third Pillar) புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரகுராம் ராஜன், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். ரகுராம் ராஜன் தனது பேட்டியில், ராகுல் காந்தி அறிவித்த "நியாய்" என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடும் மக்களுக்காகவே தயாரிக்கப்பட்ட உன்னதமான திட்டம் என்றும், இது நிச்சயம் சாத்தியமானது என்றும் உறுதியாகக் கூறினார்.
பொருளாதார சூழ்நிலை
தற்போதைய நிலையில் இந்தியாவால் இவ்வளவு பெரிய தொகையை செலவிட முடியாது. "நியாய்" திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் நம்முடைய உண்மையான நிதி நிலைமையையும் பொருளாதார சூழ்நிலையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டியது மிக முக்கியம். சரியான முறையில் திட்டமிட்டு "நியாய்" திட்டத்தை செயல்படுத்தினால் வெற்றிகரமான திட்டமாக அமையும். இல்லாவிட்டால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்று ரகுராம் ராஜன் எச்சரித்தார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ்
இதே போல ராகுல் காந்தியின், நியாய் (NYAY) யாருக்கு இந்த குறைந்த பட்ச வருவாய் போகும் என்பதை அரசியல் நிபுணர் நரேன் ராஜகோபாலன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். வறுமைக் கோட்டுக்கு (Abject Poverty) கீழே இருப்பவர்களுக்கு மட்டும் தான் இது. எல்லோருக்குமானதல்ல (No Universal Basic Income) மத்திய அரசு புள்ளி விவரங்களின் படி வறுமைக் கோட்டுக்கு கீழ் சுமார் 25 கோடி பேர்கள் உள்ளனர். அதில் சுமார் 20 சதவிகிதம் அதாவது 5 கோடி குடும்பங்களுக்கு இந்த நிதி போகும் (Only 20% of BPL families)
குறைந்த பட்ச தேவை
அந்த பணமும், குடும்ப தலைவருக்கு போகாமல், குடும்ப தலைவியின் கணக்கிற்கு தான் போகும் (Women Empowerment) 5 கோடி குடும்பங்களுக்கான குறைந்த பட்ச தேவை ஒரு மாதத்திற்கு சுமார் 12000 ரூபாய். ஆனால் அவர்களால் 6000 ரூபாய் மட்டுமே ஈட்ட முடிகிறது. நியாய்-யின் 6000 மீதமுள்ள பற்றாக்குறையை ஈடு கட்டும். (Not a dole, but a balance bridge to lead a dignified life)
5) நிதி ஒழுங்கு முறைமைகளின் கீழ் (Fiscal Discipline Goals) வரும் பற்றாற்குறையை மீறாமல் இது செய்யப்படும். (Under the fiscal discipline deficit management of 2.5%)
ஓசி காசு இல்லை
இது ஒன்றும் ஒசி காசு கிடையாது. குடும்ப பட்ஜெட் பற்றாக்குறையை நீக்குவது தான் நோக்கமே தவிர, ஒசி காசு கொடுத்து சோம்பேறியாக்குவது அல்ல. பெண்களுடைய கணக்கிலிருந்து ரேஷனோ, இன்னபிற அத்தியாவசிய தேவைகளுக்கோ நேரடியாக கழித்துக்கொள்ள (deductions) புது சேவைகள் எழலாம். வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு இது வரப் பிரசாதம் தான்.