டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் நடப்பு பொருளாதார சூழ்நிலைகளை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியிடும் முன்னரே நிதி அமைச்சருடனான இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நிதிக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் 6 பேர் அடங்கிய குழு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஜனநாயகத் திருவிழா
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிந்து அடுத்து ஏதாவது ஒரு கட்சி மத்தியில் ஆட்சியமைத்த பின்பே அடுத்த நிதியாண்டுக்கான நிதிக் கொள்கை மற்றும் நிதிநிலை அறிக்கை போன்றவை தாக்கல் செய்யப்படும்.
6 பேர் கொண்ட குழு
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி நிதிக்கொள்கை குறித்து விவாதித்து முடிவெடுக்கும் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட குழு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பின்பு ஏப்ரல் 4ஆம் தேதியன்று மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியாக உள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிதிக் கொள்கையில் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக பிப்ரவரி மாத பணவீக்க விகிதமும் 2,57 சதவிகிதமாகக் குறைந்தது. ஆனால் பணவீக்கம் 4 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்ததும் வட்டிக் குறைப்புக்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டது.
பலன் கிடையாது
அதே சமயம் தொழில்துறை வளர்ச்சி 1.7 சதவிகிதமாக இருந்தது. ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுத்த போதும் வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்து அதன் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்று பொருளாதார நிபுணர்களால் விமர்சிக்கப்பட்டது.
ஜெட்லி, ஆளுநர் சந்திப்பு
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நிதிக் கொள்கை வெளியாவதற்கு முன்பாக மத்திய நிதி அமைச்சருடனான சந்திப்பு வழக்கமான ஒன்று என்று செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். நிதி அமைச்சருடனான இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை உள்ளிட்ட விவரங்களை நிதி அமைச்சரிடம் விளக்கியதாக தெரிவித்தார்.
நிதிக்கொள்கை
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அதற்கு ஒரு வாரம் முன்னதாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியாவதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வங்கித் துறையில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து நேரில் கேட்டறிய அனைத்து பொதுத்துறை வங்கித் தலைவர்களை இந்த வாரம் சந்திக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
வங்கிகளின் தலைவர்களுடன் சந்திப்பு
பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டுறவு வங்கிகள், வங்கியல்லாத பிற நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நபர்களை சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். மேலும் இம்முறை பேமென்ட் வங்கிகளின் தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.