மும்பை: ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனம் தன் பயணிகளுக்கு ஐபிஎல் ஸ்கோர்களை தொடர்ந்து அப்டேட் செய்யுமாறு தங்களின் விமானிகளிடம் சொல்லி இருக்கிறது.
அவ்வப் போது ஐபிஎல் போட்டிகளின் ஸ்கோர்களைச் சொல்ல வேண்டும் என்கிற அழுத்தம் இருந்தால், தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியவில்லை என்கிறார்கள் விமானிகள்.
ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்துவது தங்களோடு பயணிக்கும் நூற்றுக் கணக்கான விமானப் பயணிகளின் பாதுகாப்பே பெரிய கேள்விக் குறியாகிவிடும் எனவும் தங்கள் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள் ஸ்பைஸ் ஜெட் விமானிகள்.
உத்தரவு
கடந்த மார்ச் 26-ம் தேதி ஸ்பைஸ் ஜெட்டின் இணை முதன்மை விமானி ரஜ்னேஷ் பல்லா ஒரு மின்னஞ்சலை தன் விமானிகளுக்கு அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலில் மாலை 4 மணி முதல் 8 மணி வரையான விமான பயணங்களில் ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகளைச் செய்யும் படி சொல்லி இருக்கிறார்.
கட்டுப்பாடுகள்
ஒவ்வொரு விமானத்தின் கேப்டன் தான் இந்த ஐபிஎல் அறிவிப்புகளுக்கு பொறுப் பேர்க வேண்டுமாம். மொத்த விமான பயண நேரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டுமாம். அதோடு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறையாவது ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகளை மேற்கொள்ள வேண்டுமாம்.
எத்தனை விமானங்கள்
மே 05-ம் தேதி வரை மாலை 4 - 8 மணி வரை ஸ்பைஸ் ஜெட்டில் மொத்தம் 134 விமானங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறதாம். இந்த அனைத்து விமானங்களிலும் ஐபிஎல் தொடர்பான அறிவிப்புகளை செய்யச் சொல்லி இருக்கிறார்களாம்.
விமானிகள் தரப்பு
ஸ்பைஸ் ஜெட் விமானி ஒருவர் "என் நிறுவனத்துக்கு ஐபிஎல் போட்டிகளில் விருப்பம் இருக்கிறது என்பதற்காக, எங்களை ஐபிஎல் ஸ்கோர்களைச் சொல்லச் சொல்லி படுத்துகிறார்கள்" என்கிறார்.
கட்டாயப் படுத்த வேண்டாமே
இன்னொரு ஏர் இந்தியா விமானி "பொதுவாகவே விமானிகளுக்கு காக் பிட்டில் கடுமையான அழுத்தம் இருக்கும். அதுவும் குறிப்பாக உள்நாட்டிலேயே பறக்கும் குறைந்த தூரமுள்ள விமானங்களை ஓட்டும் போது அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். விமானிகளுக்கு நேரம் கிடைத்தால் ஸ்கோர்களைச் சொல்லலாம். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது" என்கிறார்.
ஸ்பைச் ஜெட் தரப்பு
"பொதுவாகவே விமானம் பறக்கும் போது உலகின் முக்கியமான விளையாட்டு நிகழ்வுகளைப் பற்றிய அப்டேட்களைக் கொடுப்பது வழக்கம். இந்த சின்ன வேலைக்கு போய் வேலைப் பழு கூடும், பயணிகளின் பாதுகாப்புக்கு சிக்கல் எழும் என்பதெல்லாம் அர்த்தமற்றது" என அசால்டாக டீல் செய்திருக்கிறது ஸ்பைஸ் ஜெட் ந்ரிவாகம்.
முன்னாள் விமானி
சென்னையைச் சேர்ந்த கேப்டன் மோகன் ரங்கநாதன் முன்னாள் விமானி "நாங்கள் விமானிகளாக இருந்த போது இப்படி கிரிக்கெட் ஸ்கோர்களைச் சொல்லி இருக்கிறோம். அது விமானப் பயணிகளை உற்சாகப்படுத்தும். இப்படி ஒரு சில அறிவிப்புகளுக்கு பயணிகளின் பாதுகாப்பை காரணம் சொல்லத் தேவை இல்லை என்பது என் கருத்து" என்கிறார். இப்படி உலகம் முழுக்கவும் விமானிகள் மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து மாறி மாறிப் பேசி வருகிறார்கள்.