மும்பை: மீண்டும் கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ். மார்ச் 28, 2019-க்குள் ஹெச்எஸ்பிசி வங்கிக்கு செலுத்த வேண்டிய 109 மில்லியன் டாலர் கடன் தொகையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செலுத்தவில்லையாம்.
2014-ம் ஆண்டில் மார்ச் 2019-க்குள் கடனை திருப்பி தருவதாகச் சொல்லி 140 மில்லியன் டாலர் கடன் வாங்கி இருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
அந்த 140 மில்லியன் டாலர் தொகையை மார்ச் 11, 2019 அன்று 31 மில்லியன் டாலரும், மார்ச் 28, 2019-க்குள் 109 மில்லியன் டாலரும் செலுத்த வேண்டி இருந்ததாம். தற்போது இந்த இரண்டு தவணைகளிலும் பணத்தை செலுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தவறி விட்டதாம்.
கடன் குறையவில்லை
கடந்த ஜனவரி 2019-ல் தான் இந்த நிறுவனத்துக்கான மதிப்பீட்டை Default கடனை திருப்பி செலுத்த இயலாதவன் என கடன் மதிப்பீடு கொடுத்தார்கள். ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்கு விமானங்கள் பறக்காமல் தரையில் தேங்கி நிற்கிறது. இதில் கடன் வேறு அதிகரித்துக் கொண்டே தான் போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை.
23000 பேர் வாழ்கை
ஜெட் ஏர்வேஸை காப்பாற்ற இந்திய அரசு தன்னால் ஆனதை செய்து கொண்டிருக்கிறது. எகாரணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சரிந்தால் சுமார் 23,000 பேரின் வேலை பரிபோகும். ஏற்கனவே வேலைவாய்ப்பு பிரச்னைகளில் மக்கள் பாஜக அரசை துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இந்த பிரச்னையும் அதோடு சேர்ந்தால் மோடியின் பெயரை மேலும் அடிவாங்கும் என்கிற கணக்கில் அரசு ஜெட் ஏர்வேஸை மீட்க முயன்று கொண்டிருக்கிறது.
முதலீடு
சமீபத்தில் தான் நரேஷ் கோயல் பதவி விலகியதும் 1500 கோடி ரூபாயை முதலீடு செய்ய முன் வந்திருக்கிறார்கள் ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள். இதற்கிடையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பங்குச் சந்தைகளிடம் ஹெச்எஸ்பிசி வங்கிக்கு கடன் கொடுக்க முடியாமல் தவிப்பதையும் தெரிவித்திருக்கிறதாம்.
8500 கோடி வேண்டும்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தான் இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 50% பங்குகளை வைத்திருக்கிறார்களாம். மீண்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பழைய படி ஓட வைக்க சுமாராக 8500 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறதாம். இந்த நிலையிலேயே மேலும் மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் கொடுக்க முடியாமல் போய் கொண்டிருப்பதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கமிட்டிக்கு பெரிய தலைவலியாக இருக்கிறதாம்.
மே 2019 வரை
இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கமிட்டிக்கு எஸ்பிஐ வங்கி தலைமை தாங்கி வழி நடத்தி வருகிறது. இந்த கமிட்டி தலைவர் என்கிற முறையில் வரும் மே 2019-க்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க ஒரு நல்ல முதலீட்டாளர் கிடைப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது எஸ்பிஐ.