டெல்லி: மோடி டிமானிட்டைசேஷன் வழியாகச் செய்த தவறான விஷயங்களை எல்லாம் எங்களின் NYAY - Nyuntam Aay Yojana மூலம் சரி செய்வோம் எனச் சொல்லி இருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
அதோடு காங்கிரஸின் NYAY - Nyuntam Aay Yojana திட்டத்தால் பாரதிய ஜனதா கட்சியே மொத்தமாக பெரிய ஆட்டம் கண்டிருப்பதாகவும் சொல்லி மோடியை நேரடியாக வம்பிழுத்திருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்திருக்கிறார்..? என்கிற கேள்விக்கு ஒரே பதில் தான் விடையாக வருகிறது. இந்திய பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருந்த பணத்தை எல்லாம் பணமதிப்பிழப்பு (Demonetization) மற்றும் ஜிஎஸ்டி (Goods and Service Tax) மூலம் அழித்து ஒழித்திருக்கிறார். இப்போது இந்தியப் பொருளாதாரத்தில் புழங்க சுத்தமாக காசு இல்லை. மக்கள் தவிக்கிறார்கள்.
பிடுங்கிவிட்டார்
மேலும் தொடர்ந்த ராகுல் காந்தி "இந்தியாவில் இருக்கும் அமைப்பு சாரா துறைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரச்னைகளை சரி செய்யத் தான் காங்கிரஸ் NYAY - Nyuntam Aay Yojana கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தில் இரண்டு முக்கிய விஷயங்களைச் செய்யப் போகிறோம்.
என்ன விஷயங்கள்
1. இந்த NYAY - Nyuntam Aay Yojana திட்டத்தின் பெயரில் இந்தியாவில் உள்ள 20 சதவிகித ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு குறைந்தபட்ச மாதாந்திர ஊதியத்தை கொடுக்க வேண்டும்.
2. இந்திய பொருளாதாரத்தில் பணத்தைப் பாய்ச்ச வேண்டும். குறிப்பாக மோடி காலி செய்த இந்திய பொருளாதாரப் பணத்தை மீண்டும் பொருளாதாரத்திலேயே பாய்ச்ச வேண்டும்.
திருப்பி கொடுப்போம்
மோடி விவசாயிகளிடம் இருந்து எடுத்துக் கொண்ட பணத்தை, சிறு குறு தொழில் செய்து பிழைத்து வந்த தொழில்முனைவோர்களின் முதல் பணத்தை, இந்திய தாய்மார்கள் தங்கள் சமையல் சாமான் டப்பாக்களில் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த சேமிப்பு பணத்தை, NYAY - Nyuntam Aay Yojana திட்டத்தின் மூலம் திருப்பிக் கொடுக்க இருக்கிறோம். மோடியின் தவறுகளை சரி செய்யப் போகிறோம் என கொந்தளித்திருக்கிறார்.
காசு எங்கே
மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி "பலரும் NYAY - Nyuntam Aay Yojana திட்டத்துக்கு தேவையான 3.6 லட்சம் கோடிக்கு எங்கே போவது என கேட்கிறார்கள். இந்த பெரும் தொகை இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை அதிகப்படுத்தி விடாதா எனவும் கேட்கிறார்கள். நம்மிடம் இருக்கும் நிதியை வைத்தே செய்ய முடியும்" என்றார்.
ஆலோசனைகள்
அதோடு "இந்த NYAY - Nyuntam Aay Yojana திட்டத்துக்காக பல பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடம் கலந்து பேசி இருக்கிறோம். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்திருக்கிறோம். இதை எங்கள் மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளில் சேர்ப்பதற்கு முன்பே ஒரு பெரிய நிதி மாதிரிகளைக் கூட செய்து பார்த்துவிட்டோம். ஆகையால் தான் இந்த திட்டத்தை நிச்சயம் கொண்டு வர முடியும்" என்கிறார் ராகுல் காந்தி
பாபுலிஸ்ட் நடவடிக்கைகளா..?
அதோடு இந்த NYAY - Nyuntam Aay Yojana திட்டத்தை ஒரு பாபுலிஸ்டான (வாக்குகளை சேகரிப்பதற்கான) அறிவிப்பா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இந்திய அரசின் திட்டங்களாலும், கொள்கைகளாலும் மோடியின் தனியார் முதலாளிகள் மட்டுமே அதிகம் நன்மை அடைய வேண்டுமா..? நான் நீதி, நேர்மையைத் தான் கேட்கிறேன். NYAY - Nyuntam Aay Yojana திட்டத்தை இந்திய ஏழைகளுக்காக கேட்கிறேன். எனவே இதை ஒரு வாக்கு சேகரிப்பு திட்டம் எனச் சொல்ல எதுவும் இல்லை" என்கிறார் ராகுல்.
ஒரு சாம்பிள்
எப்போது இந்தியா ஏழைகள் அற்ற நாடாக மாறும்..? எப்போது NYAY - Nyuntam Aay Yojana திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி தவறுகள் திருத்தப்படும்..? NYAY - Nyuntam Aay Yojana முதலில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தான் இந்த சோதனை மேற்கொள்ளப்படுமா..? என பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு "பொருளாதார நிபுணர்கள் தான் எங்கு நியாய் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என முடிவு செய்வார்கள்" என ஒரு வரியில் முடித்துவிட்டார் ராகுல்.