டெல்லி: 2018 - 19-ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார ஜிடிபி 7.2 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருக்கிறது மத்திய புள்ளியியல் அலுவலகம்.
ஆனால் இந்த 2018 - 19 நிதி ஆண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பு ஜிடிபி வளர்ச்சியி பாதி மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பதாக சில தனியார் நிறுவனங்கள் சொல்கின்றன.
உண்மையில் தேசிய மாதிரி சர்வே அமைப்பு (NSSO) கூட தன் அறிக்கையில் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறதே ஒழிய கூடவில்லை எனச் சொல்லி வருகிறது. குறிப்பாக சுமார் 4 கோடி பேர் தங்கள் வேலைகளை இழந்து தவிப்பதாகத் தான் சொல்கிறார்கள்.
கேள்வி
காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் தொடங்கி முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் வரை இந்த இடைவெளியை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு Care மதிப்பீட்டு நிறுவனத்தின் முதன்மை பொருளாதார வல்லுநர் மதன் சட்நவிஸ் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இனி அவர் மொழியில்.
நெருங்கிய தொடர்பு
"இதுவரை இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஆனால் தற்போது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்குமான தொடர்பு தொடர்ந்து வலு விழந்து கொண்டே வருகிறது.
5 ஆண்டுகளில்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு அளவிலோ மாநில அரசுகள் அளவிலோ வேலைவாய்ப்ப்புகள் உருவாக்கத்தை தீவிரமாக முன்னெடுத்து செய்ததாகச் சொல்ல ஒரு விஷயம் வில்லை. குறிப்பாக தற்போதைய இந்திய பொருளாதார வளர்ச்சியின் குறியீடாக சொல்லப்படும் ஜிடிபி 7%-த்துடன் வேலைவாய்ப்பு உற்பத்தி ஒத்துப் போகாமல் இருக்கிறது.
கேர் கணிப்பு
2018 - 19 நிதி ஆண்டுக்கு கேர் மதிப்பீட்டு நிறுவனம் இந்திய வேலைவாய்ப்பு வளர்ச்சி தொடர்பாக செய்த ஆராய்ச்சிகளில் இந்திய வேலைவாய்ப்பு சுமார் 3 - 4 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருப்பதாகச் சொல்கிறது. ஆனால் அரசு நிறுவனமே வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை குறைந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள்.
ஒத்துப் போகும்
இதற்கு முந்தைய காலங்களில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 8 - 9 சதவிகிதம் வளர்ச்சி கண்டால், வேலைவாய்ப்புகளும் அதை ஒத்து இருக்கும் அல்லது ஜிடிபி அளவை விட கொஞ்சம் குறைவாக இருக்கும். இதை உலக அளவில் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மோடி ஆட்சிக் காலத்துக்கு முன் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவிகிதம் என்றால், வேலைவாய்ப்பு உற்பத்தி வளர்ச்சி 6 - 7 சதவிகிதமாக இருக்கும்.
சந்தேகம் இல்லை
எங்களைப் பொறுத்த வரை மத்திய புள்ளியியல் ஆணையம் கொடுத்த ஜிடிபி தரவுகளில் சந்தேகம் இல்லை. காரணம் கேர் மதிப்பிட்டு நிறுவனமும் 2018 - 19 நிதி ஆண்டுக்கு 6.9 சதவிகிதம் தான் கணித்திருக்கிறது. இந்திய அரசு சொல்லும் 7.2 என்பது எங்கள் கணிப்பை விட 0.3% அதிகம் என்றாலும் வித்தியாசம் என்பது அத்தனை பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை எனச் சொல்கிறார் மதன்.
முக்கிய காரணிகள்
அதோடு இந்தியாவில் உள்ளவர்களுக்கு அதிகம் வேலை வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் ஐடி, ரீடெயில், கட்டுமானம், நிதி சேவைகள் போன்ற துறைகளில் இப்போது ஒரு பலவீனமான வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்த வளர்ச்சி ஒரு நிலையான வளர்ச்சியாக பார்க்க முடியாது பார்க்கவும் கூடாது. அதோடு உலக பொருளாதாரத்தில் இருக்கும் சிக்கல்கள், உள்நாட்டுத் தேவை சரிவு, கடன் பிரச்னைகள் என பல்வேறு பிரச்னைகளும் இந்திய வேலைவாய்ப்பு வளர்ச்சியை தடுப்பதாகச் சொல்கிறார் மதன்.