மும்பை: இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பது அவைகளை கணக்கு வைத்து பராமரிப்பது எல்லாமே இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தான்.
இப்போது சமீப காலமாக சில ரூபாய் நோட்டுக்களை வங்கிகளே வாங்கிக் கொள்ள மறுப்பதாக சில புகார்கள் ஆர்பிஐக்குச் சென்றிருக்கிறது.
இந்த புகாருக்கு பதிலளிக்கும் விதத்தில் என்ன மாதிரியான நோட்டுக்களை எல்லாம் மக்களிடம் இருந்து வங்கிகள் வாங்கிக் கொள்ளலாம் என ஒரு விரிவான சுற்றறிக்கையே கொடுத்திருக்கிறதாம் ஆர்பிஐ.
எந்த நோட்டுக்களை எல்லாம் வாங்கலாம்
சாயம் படிந்த நோட்டுக்கள் (colour notes), எழுதிய கிறுக்கிய நோட்டுக்கள் (scribbled notes), அழுக்கடைந்து இருக்கும் நோட்டுக்கள் (notes with dirt settled on them), கிட்ட தட்ட அழுகியது போல பழையமை அடைந்திருக்கும் பழைய நோட்டுக்கள் (limpness), ரூபாய் நோட்டுக்களின் ஓரங்கள் மோசமாக இருக்கும் நோட்டுக்கள் (corner folds), கிழிந்திருக்கும் நோட்டுக்கள் (tears), ஸ்டாப்ளர் பின்கள் அடித்து ஓட்டை இருக்கும் நோட்டுக்கள் (holes), ஏதாவது கறை படிந்துள்ள நோட்டுக்கள் (stains), ஓவியங்கள் வரைந்திருக்கும் நோட்டுக்கள் (graffiti), பொடிப் பொடியாக கொட்டும் நிலையில் இருக்கும் நோட்டுக்கள் (crumples), வெளுத்துப் போன நோட்டுக்கள் (de-colouration), அதிகம் மடித்து மடித்து மடிப்புக்கள் தெரியும் அளவுக்கு இருக்கும் நோட்டுக்கள் (folds)... மேலும் இது போன்ற இந்திய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளிடம் கொடுத்த மாற்றலாம் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
பொதுக் கருத்து
மேலே சொன்னது போல இருக்கும் நோட்டுக்கள் பொதுவெளியில் செல்லாது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால் பெரும்பாலான கடைகளில் வியாபாரிகள் இது போன்ற நோட்டுக்களை வாங்குவதில்லை. வியாபாரிகளே வாங்குவதில்லை என்றால் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகளை எல்லாம் சொல்ல வேண்டுமா என்ன..? அவ்வளவு ஏன் வங்கிகளில் கூட வாங்குவதில்லை எனச் சொல்கிறார்கள்.
ஆர்பிஐ கருத்து
ஒரு நோட்டு நல்ல நோட்டாக, உண்மையான இந்திய ரூபாய் நோட்டாக இருந்தால் போதும், நோட்டுக்களில் அது இந்திய ரூபாய் நோட்டுக்கள் தான் என நிரூபிக்க முடிகின்ற அளவுக்கு ஏதாவது ஒரு விஷயம் இருந்தால் கூட இந்திய அரசு வங்கிகள் அந்த ரூபாய் நோட்டுக்களை கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறது ஆர்பிஐ. ஆனால் மதத்தின் பெயர்களோ அல்லது அரசியல் கட்சிகளின் பெயர்களோ, அரசியல் வாக்கியங்களையோ எழுதி இருந்தால் அவைகள் வாங்கிக் கொள்ளப்படாது எனச் சொல்கிறார்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில்
எனவே ஆர்பிஐயே எல்லா வங்கிகளுக்கும் ரூபாய் நோட்டில் பின் அடிக்க வேண்டாம் என வழிகாட்டி இருக்கிறார்கள். அதோடு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒரு சில கேஷ் செஸ்ட் (3 முதல் 6 வங்கிக் கிளைகளின் பணம் ஒரு வங்கிக் கிளையிடம் தான் இருக்கும். அது தான் கேஷ் செஸ்ட் வங்கிக் கிளை என்பார்கள்) உள்ள வங்கிக் கிளைகளில் மேலே சொன்ன பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுக்கவும் ஆர்பிஐ வசதி செய்யப் போகிறார்களாம்.
எப்படி மாற்றுவது
பழைய, கிழிந்த, நைய்ந்த நோட்டுக்களை... எல்லா பொதுத் துறை வங்கிக் கிளைகளிலும் மாற்றலாம். தனியார் வங்கிகளில் கேஷ் செஸ்ட் கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம். அப்படியும் இல்லை என்றால் எந்த ஆர்பிஐ கிளையில் வேண்டுமானாலும் பழைய கிழிந்த நோட்டுக்களை மாற்றலாமாம். அவ்வளவு ஏன் பகுதி எரிந்த நோட்டுக்களைக் கூட ஆர்பிஐ அலுவலகத்தில் சொல்லி மாற்றலாமாம். இந்த நோட்டுக்களை மாற்ற எந்த ஒரு படிவத்தையும் நிரப்பத் தேவை இல்லையாம்.