லண்டன்: எம்மா அர்புத்நட் என்பவர் தான் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். இவர் தான் கிங்ஃபிஷ்ஷர் புகழ் விஜய் மல்லையாவை இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தவர்.
இப்போது இதே நீதிமன்றத்தில் தான் நம் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் புகழ் நீரவ் மோடியின் வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது. நீரவ் மோடியையும் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது இந்திய அரசு.
இதில் வேடிக்கையான இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் அந்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அதே எம்மா அர்புத்நட் நீதிபதி முன்னிலையில் தான் நீரவ் மோடியின் வழக்கையும் விசாரித்து வருகிறார்கள்.
ஜாமீன் தள்ளுபடி
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29, 2019) தான் நீரவ் மோடி தரப்பில் ஜாமீன் வழங்குமாறு வெஸ்மின்ஸ்டர் நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறார்கள். நீரவ் மோடியின் வாதங்களையும் இந்திய அரசின் சார்பாக பிரதி வாதங்களையும் கேட்ட பின் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும், அடுத்த விசாரணை வரும் ஏப்ரல் 26, 2019-ம் தேதி நடைபெறும் என்றும் சொல்லி இருக்கிறார் எம்மா அர்புத்நட்.
தேஜா வூ
வழக்கை விசாரிக்கத் தொடங்கும் முன்பே நீதிபதி அர்புத்நட் எனக்கு தேஜாவூ போல இருக்கிறது என கொஞ்சம் தன்னைத் தானே ட்ரோல் செய்து கொண்டார். காரணம் அதே நீதிமன்றத்தில் அதே போல சில மாதங்களுக்கு முன் தான் ஒரு இந்திய பிசினஸ் மேனை (மல்லையாவை) நாடு கடத்த உத்தரவிட்டது அவருக்கு நினைவில் வந்திருக்கிறது.
ஆர்தர் ரோட் சிறை தானா..?
அதன் பின் நீரவ் மோடியை இந்தியாவின் எந்த பகுதி காவல் துறை நாடு கடத்தச் சொல்லி கேட்டிருக்கிறது என இந்திய தரப்பு வழக்கறிஞர்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு "நீரவ் மோடியை இந்திய அரசாங்கமே தான் நாடு கடத்தச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். அதனால் இவரையும் விஜய் மல்லையாவை அடைக்கப் போகும் மும்பை ஆர்தர் ரோட் சிறையில் தான் அடைக்கப்படுவார் எனச் சொல்லி இருக்கிறார்கள்".
இடம் இருக்கிறது
நான் ஏற்கனவே வீடியோவில் பார்த்த அதே சிறை அறை என்றால் கூட பரவாயில்லை. அதே சிறை அறையில் நிறைய இடம் இருக்கிறது என மீண்டும் நக்கலாக ஓட்டி இருக்கிறார்.
அந்த வீடியோ
மல்லையாவை நாடு கடத்த வேண்ட கோள் வைத்த போது மும்பை சிறையில் இருக்கும் வசதிகள் மற்றும் சுகாதாரம் போன்றவைகளை காரணம் காட்டி வழக்கௌ இழுத்தடித்தார் மல்லையா. இதனால் இங்கிலாந்து அரசுக்கு இந்திய சிறைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்த சில வீடியோ பதிவுகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ பதிவுகள் படி மும்பை ஆர்தர் ரோட் சிறையில் உட் பகுதியில் மல்லையாவுக்கு என்றே பிரத்யேகமாக ஒரு இரண்டு அடுக்கு உயர் பாதுகாப்பு சிறையை தயார் படுத்தி இருப்பதாகவும், அந்த சிறையில் தான் மல்லையாவை சிறை வைக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே பெஸ்ட்
இந்தியாவின் உள் துறை அமைச்சக அதிகாரிகளில் ஒருவர் கூட சமீபத்தில் "இந்தியாவிலேயே சிறந்த சிறை என்றால் அது மும்பையில் இருக்கும் ஆர்தர் ரோட் சிறை தான்" எனச் சொல்லி இருக்கிறார். அவ்வளவு ஏன் அஜ்மல் கசாபைக் கூட இந்திய அரசு மும்பை ஆர்தர் ரோட் சிறையில் தான் வைத்திருந்தார்களாம்.
மருத்துவ வசதிகள்
மல்லையா இந்தியாவுக்கு வரமாட்டேன் என்பதற்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்கள் சரியான பின், மருத்துவ வசதிகளைக் காரணம் காட்டினார். அப்போது மீண்டும் மும்பை ஆர்தர் ரோட் சிறையில் சிறந்த மருத்துவ வசதிகள், சர்வதேச அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்துமே சர்வதேச தரத்தில் இருப்பதையும் இங்கிலாந்து அரசிடம் குறிப்பிட்டு விலக்கி இருந்தது இந்திய அரசு. அதன் பின் தான் மல்லையாவை நாடு கடத்த சம்மதித்தது இங்கிலாந்து அரசு. இப்போது இங்கிலாந்து உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு நடந்து கொண்டிருக்கிறதாம்.
எது எப்படியோ மல்லையாவுக்கு காட்டிய வீடியோ பதிவுகள், நீரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கும் உதவியாக இருந்ததை நினைத்து கொஞ்சம் இந்திய தரப்பு அதிகாரிகள் பெருமூச்சு விட்டிருக்கிறார்களாம்.