மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்களின் சம்பள பாக்கிகளோடு, தாமதமாக கொடுப்பதற்கு வட்டியும் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அதோடு இனி வரும் மாதங்களில் சம்பளத்தை சரியான நேரத்தில் கொடுக்கும் படியும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இதுவரை ஜெட் ஏர்வேஸ் விமானிகளின் சார்பாக பேசி வரும் தேசிய விமானிகள் சங்கம் (National Aviators Guild) தான் இரண்டு கடிதங்களை எழுதி இருக்கிறது. ஒரு கடிதம் விமான பயணிகள் இயக்குனரகத்திற்கும் மற்றொரு கடிதத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி வினை துபேவுக்கும் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு காலாண்டுக்கு மேல்
கடந்த நான்கு மாதங்களாக விமானிகள், பொறியாளர்கள், விமான பணிப்பெண்கள் என பலருக்கும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் செலுத்த வேண்டிய வங்கி கடன்களை எல்லாம் கூட ஒழுங்காக செலுத்த முடியாமல் தவிக்கிறார்களாம். இதனால் தான் தற்போது தங்கள் சம்பள பாக்கிகளோடு வட்டியையும் கணக்கிட்டுத் தரச் சொல்கிறார்கள் தேசிய விமானிகள் சங்கம்.
மன அழுத்தம்
கடந்த நான்கு மாதங்களாக விமானிகளுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகள் விமானிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறதாம். விமானத்தை ஓட்டுக் காக்பிட்டில் அமர்ந்தாலேயே சம்பளம் கிடைக்காத நினைவே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதாம்.
அடிப்படைச் செலவுகள்
விமானிகளுக்கும் குடும்பம் இருக்கிறது குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களைச் செலுத்துவது, வங்கிக் கடன்களை செலுத்துவது, வயதான பெற்றோர்களின் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வது என பல செலவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்கு எல்லாம் எங்களின் சம்பளம் தானே ஆதாரம். அந்த சம்பளமே இல்லை என்றால் எப்படி இந்தச் செலவுகளை மேற்கொள்வது என அந்தக் கடிதத்தில் கேட்டிருக்கிறார்கள்.
வெறுப்பு
இதனாலேயே ஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு மிகப்பெரிய கோபமும் வெறுப்புணர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போண்டே போகிறது என தங்கள் கடிதங்களில் தெரித்திருக்கிறார்கள் விமானிகள்.
இன்று வரை
அதோடு இதுவரை ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்களை நிர்வகிக்கும் நிர்வாகத்திடம் பலமுறை சம்பள பாக்கியை தரும்படி வேண்டி இருக்கிறார்களாம். ஆனால் இதுவரை நிர்வாகத்தின் தரப்பில் எந்த ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக இப்போது இன்றைய தேதி வரை சம்பள பாக்கிகளை தகுந்த வட்டியுடன் திரும்ப கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.