டெல்லி : ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் ஜான்சன் அன் ஜான்சன் பேபி ஷாம்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்று தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்தது தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ஷாம்புவில் கொடிய ஃபார்மால் டிஹைட் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஃபார்மால் டிஹைட் வேதிப்பொருள் கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படுவது. இது மனிதர்களுக்கு புற்று நோயை உண்டாக்கும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய ரெகுலேட்டரி ஆய்வு
கடந்த டிசம்பர் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி பவுடரில் புற்று நோயை உண்டாக்கும் ஆஸ்பெட்டாஸ் துகள்கள் கலந்திருப்பதாக வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் குறித்த விசாரணையை மத்திய ரெகுலேட்டர் ஆய்வு நடத்தி அதில் கேன்சரை உருவாக்கும் பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய ரெகுலேட்டர் ஆய்வு நடத்தி கேன்சரை உண்டாக்கும் துகள்கள் பேபி பவுடரில் கலந்திருப்பதை உறுதி செய்தாலும் ஆய்வு முடிவை வெளியிடவில்லை.
ஆட்பெட்டாஸ் துகள் இல்லை
நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிக்கும் பேபி பவுடரில் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆஸ்பெட்டாஸ் துகள்கள் இல்லை என்பது கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரியவந்ததை அடுத்து நிம்மதியான ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது உற்பத்தியை தொடர்ந்தது.
மீண்டும் பரிசோதனையில் தோல்வி
பெரும்பாலான ஆய்வு முடிவுகள் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பு இந்நிறுவனத்திற்கு தடையாக உள்ளது. இவ்வமைப்பு கடந்த மார்ச் 5ஆம் தேதியன்று செய்யப்பட்ட ஆய்வில் ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி ஷாம்பு "தீங்கு விளைவிக்கும் பொருட்களால்" ஆனது என்றும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கையை வெளியிட்ட ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் உடனடியாக கருத்தினை தெரிவிக்கவில்லை.
ஃபார்மால்டிஹைட்
ராஜஸ்தான் மாநில மருந்துகள் கண்காணிப்புக் குழுவிலிருந்து பெறப்பட்ட முடிவுகள், மாதிரிகளில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருட் கலந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளது. ஃபார்மால்டிஹைட் என்பது கட்டிட பொருட்கள் தயாரிக்க பயன்படக்கூடியது. புற்றுநோயை உருவாக்கக் கூடியது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
காலாவதியான ஷாம்பு
பரிசோதனை முடிவை அரசு வெளியிட்டாலும் அது பற்றிய விரிவான விவரங்களை வெளியிடவில்லை. அரசு வெளியிட்ட அறிக்கையில் 2021 காலாவதியாகும் பேபி ஷாம்பு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
பரிசோதனை முடிவு குறித்து கருத்து தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத கண்காணிப்பு குழு அதிகாரி ஒருவர், மாதிரிகளை பரசோதித்ததில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருட் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது பற்றி ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் அளிக்கும் பதிலைப் பொருத்து மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானது
பரிசோதனை முடிவு குறித்து ஜான்சன் ஜான்சன் செய்தித் தொடர்பாளர் பேசிய போது, "எங்களுக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பாக உள்ளன என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார். அரசாங்கத்தில் ஆய்வு முடிவுகள் இடைக்காலத்திற்கானவை. ஆய்வுகள் அறியப்படாத மற்றும் குறிப்பிடப்படாத வகையில் உள்ளது.
கலப்படம் கிடையாது
எங்கள் தயாரிப்பில் ஃபார்மால்டிஹைட் வேதிப்பொருளை சேர்க்க மாட்டோம் என்று இந்திய அரசிற்கு ஏற்கனவே உத்தரவாதம் கொடுத்துள்ளோம். மேலும் காலப்போக்கில் எங்கள் பொருள் ஃபார்மால்டிஹைட் மூலக்கூறினை வெளியிடாது என்றும் உறுதியளித்துள்ளதாக செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பில் முன்னணி
ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையை ஒரு தலைபட்சமானது தவறானது என்று கூறியுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஜான்சன் அன் ஜான்சன் பொருட்கள் முன்னணியில் இருந்து வருகிறது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனம் யூரோமானிட்டர் தெரிவித்துள்ளது.