டெல்லி: புதிய 2019-20 நிதியாண்டு தொடங்கிய முதல் நாளான திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் காலை 347 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 39000 புள்ளிகளைத் தொட்டது. தேர்தலில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கணிப்புகள் வெளியாகி வருவதால் சந்தையில் காளை ஆட்டம் தொடங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் 44ஆயிரம் புள்ளிகளை தொடும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனவே நல்ல பங்குகளை கணித்து வாங்கினால் லாபத்தை அள்ளலாம்.
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஜிடிபி வளர்ச்சி, லார்ஜ் கேப் மதிப்பீடுகள் மற்றும் குறைந்த பீட்டா (Beta) சோதனைகள் போன்றவற்றால் இந்திய பங்கு சந்தை 44000 புள்ளிகளைத் தொடும் என்று சர்வதேச பங்கு சந்தை ஆய்வு மற்றும் ப்ரோக்ரேஜ் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்திருந்தது.
பங்குச்சந்தை பற்றி அறிந்தவர்கள் சந்தையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பற்றி தெரிந்து கொண்டு நிதானமாக முதலீடு செய்வார்கள். 1990ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளை தொட்டது. 2000 ஆம் ஆண்டு சென்செக்ஸ் 6000 புள்ளிகளைக் கடந்தது. 2006ஆம் ஆண்டு 10 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது. 2007ஆம் ஆண்டு சென்செக்ஸ் 15000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. அதே ஆண்டின் இறுதியில் சென்செக்ஸ் 20000 புள்ளிகளை தொட்டு முதலீட்டாளர்களின் வயிற்றில் பாலை வார்த்தது.
பங்குச்சந்தை உயர்வு
பத்தாண்டுகளில் பங்குச்சந்தையில் காளையும் கரடியும் மாறி மாறி ஆடினாலும் ஒரே சீராக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. 2018ஆம் ஆண்டு ஜனவரியில் சென்செக்ஸ் 35000 புள்ளிகளை கடந்தது. படிப்படியாக உயர்ந்து வருட மத்தியில் 38000 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. அதே நேரம் நிஃப்டி 11500 புள்ளிகளைத் கடந்தது.
பங்குச்சந்தை வீழ்ச்சி
கடந்த ஆண்டு ஏற்ற இறக்கங்களுடன் ஆட்டம் காட்டிய மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் கரடியின் கை ஓங்கியது. 2019ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பணத்தை அள்ளலாம் என்று சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர்.
44000 புள்ளிகளை தொடும்
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் ஜிடிபி வளர்ச்சி, லார்ஜ் கேப் மதிப்பீடுகள் மற்றும் குறைந்த பீட்டா சோதனைகள் போன்றவற்றால் இந்திய பங்கு சந்தை 44000 புள்ளிகளைத் தொடும் என்று சர்வதேச பங்கு சந்தை ஆய்வு மற்றும் புரோக்ரேஜ் நிறுவனமான மார்கன் ஸ்டான்லி கணித்திருந்தது.
லாபம் கிடைக்கும் பங்குகள்
தனியார் துறை வங்கி நிறுவனங்கள் அதிக லாபம் அளிக்கும் என்று தெரிவித்துள்ள மார்கன் ஸ்டான்லி வங்கி மறு மூலதனம் மற்றும் வங்கி திவால் சட்டங்களில் ஏற்பட்டு வரும் திருத்தம் மற்றும் ஐபிசி போன்றவற்றால் பொதுத் துறை வங்கி நிறுவனங்களும் லாபம் அளிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், வங்கி அல்லாது துறைகளுக்கு மிகப் பெரிய மார்ஜின் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை சரியும்
2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜக அரசு தோல்வி அடைந்தால் பங்கு சந்தை 26,500 புள்ளிகள் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தைக்கு நல்ல காலம் பொறக்குது
2019-20ஆம் ஆண்டு விகாரி தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் கணிப்புப் படி வரும் ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை விலை சீராக உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய 2019-20 நிதியாண்டு தொடங்கிய முதல் நாளான திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் காலை 347 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 39000 புள்ளிகளைத் தொட்டது. ஜக்கம்மா குறி சொல்வது போல பங்குச்சந்தைக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது பங்குச்சந்தை உயரும் என்று நிபுணர்களும், பஞ்சாங்கமும் கணித்துள்ளது. நல்ல பங்குகளை வாங்கிப் போடுங்க மக்களே.