டெல்லி: படித்தது சரி தான், மத்திய அரசின் டெலிகாம் சேவை நிறுவனமான BSNL-ல் பணியாற்றும் 54,000 பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதாக BSNL வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
54,000 பேரை வேலையில் இருந்து நீக்க, BSNL நிறுவனத்தின் இயக்குநர் குழு முழு ஆதரவு கொடுத்திருக்கிறதாம். வரும் மே 2019-ல் தேர்தல் முடிந்த பின் அல்லது ஜூன் 2019-ல் இந்த லே ஆஃப் பணிகளைத் தொடங்க இருக்கிறார்களாம்.
தற்போது ஆட்சியில் இருக்கும் போது இந்த லே ஆஃப் பிரச்னைகளை எடுக்க வேண்டாம் என மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை (Department of Telecom) தெரிவித்திருக்கிறார்களாம். ஆகையால் இந்த லே ஆஃப் திட்டத்தை இரண்டு மாதங்கள் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்.
நிபுணர் குழு
கடந்த மார்ச் 2019-ல் BSNL நிறுவனம் எதிர் கொள்ளும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தது மத்திய அரசு. அந்த நிபுணர்கள் குழுவின் BSNL நிறுவனத்தை ஆழமாக பார்த்து, நிதி நிலைகளை எல்லாம் பரிசோதனை செய்து 10 பரிந்துரைகளைக் கொடுத்தார்களாம். அதில் மூன்று பரிந்துரைகளைத் தான் BSNL இயக்குநர் குழு ஏற்றுக் கொண்டதாம்.
கட்டாய ஓய்வு
50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்வது அல்லது கட்டாயப்படுத்திக் கொடுப்பது, சரியாக வேலை செய்யாதவர்களை (எப்படிக் கண்டு பிடிப்பார்கள்) பணியில் இருந்து நீக்கம் செய்து வீட்டுக்குஅனுப்புவது, சில பகுதிகளில் சேவைகளை முழுமையாக மூடுவது என பல வேலைகளை தேர்தலுக்குப் பின் செய்ய BSNL தயாராக இருக்கிறதாம்.
60-ல் இருந்து 58-க்கு
அதோடு BSNL நிறுவனத்தின் பணியாற்றுவர்களின் ஓய்வு காலத்தை 60 வயதில் இருந்து 58 வயதாகவும் குறைக்க BSNL இயக்குநர் குழு ஒப்புதல் கொடுத்திருக்கிறதாம். இந்த ஒரு விஷயத்தில் 33,568 பேரை வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். இந்த 33,568 பேருக்கு மட்டும் அடுத்த ஆறு ஆண்டுகளில் சுமாராக 14,000 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க வேண்டி இருக்குமாம்.
அந்த 54000 பேர்
50 வயதுக்கு மேல் கட்டாய விருப்ப ஓய்வு மற்றும் 58 வயதினர்களை ஓய்வு பெற்றவர்களாக கருதி வீட்டுக்கு அனுப்புவது போன்ற இரண்டு நடவடிக்கைகளால் மட்டும் 54,451 பேரை வேலையில் இருந்து நீக்கி விடலாம் எனவும் கணித்து வைத்திருக்கிறார்களாம். தற்போது BSNL நிறுவனத்தின் 1,74,312 பேர் பணியாற்றுகிறார்கள்.
சராசரி வயது 55
தற்போது BSNL நிறுவனத்தில் பணியாற்றுபவர்களின் சராசரி வயது 55 என ஒரு அதிர்ச்சிகரமான குண்டைப் போடுகிறது BSNL நிறுவனத்தின் இயக்குநர் குழு. சமீபத்தில் தான் BSNL நிறுவனம் தன் ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடுவதைப் பற்றிப் படிக்க முடிந்தது. இதில் ஒரு BSNL ஊழியர் நேரடியாக வலைதளத்தில் அழுது புலம்பு அது கிட்ட தட்ட தலைப்புச் செய்தியானதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு பதில் இல்லை
அதன் பின் BSNL மத்திய அரசிடம் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்தது. ஆனால் இன்று வரை BSNL விஷயத்தில் மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதற்குள் இப்போது தன் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள தயாராகிவிட்டது BSNL.
நிச்சயமில்லை
1960-களில் இருந்து இன்றைய தேதி வரை அரசு வேலை என்றால் சம்பளம் நிச்சயம், பணி அழுத்தம் குறைவு, 58 வயது வரை நிம்மதியாக நாட்களை ஓட்டி விடலாம் என்கிற எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. ஆனால் இந்திய அரசு வரலாற்றில் முதல் முறையாக அரசுப் பணிகளில் லே ஆஃப் எல்லாம் கொண்டு வரப்படுவது மிகப் பெரிய ஆச்சர்யத்தையும், பயத்தையும் கொடுத்திருக்கிறது.