டெல்லி: 7.03 லட்சம் கோடி ரூபாய். இந்தியா 2019 - 20 நிதியாண்டில் கடன் வாங்கி அரசை நடத்தத் தேவையான தொகை. இதில் பாதிக்கு மேலான தொகை (3.8 லட்சம் கோடி ரூபாய்) நம் இந்தியப் பொருளாதாரத்திலேயே இருக்கிறது. ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் எல்லாம் வாராக் கடன்களாக இருக்கின்றன.
குறிப்பாக 2,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் தொகை மட்டுமே 3,80,000 கோடி ரூபாய். சொகுசுக் கார்களிலும் உல்லாச விடுதிகளில் கூத்தடித்துக் கொண்டிருக்கும் நபர்கள் பிசினஸ் செய்கிறேன் என இந்திய வங்கிகளில் கை நீட்டி கடன் வாங்கிவிட்டு 3,80,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறார்கள்.
இந்த பெரிய தொகையை வசூலித்து இந்திய வங்கிகளின் நிதி நிலை மற்றும் பொருளாதாரத்தைக் காக்க ஆர்பிஐ (RBI) ஒரு அதிரடி சுற்றறிக்கையை (Circular-ஐ) வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையின் படி, பாரபட்சம் இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்தாத பெரிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது.
என்ன சர்க்குலர்
12 பிப்ரவரி 2018 அன்று ஆர்பிஐ-ன் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதன் படி இந்திய வங்கிகளிடம் 2000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து அடுத்த 180 நாட்களுக்குள் கடனைத் திருப்பி வசூலிக்க ஒரு நல்ல திட்டத்துடன் வர வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்தக்கடனாளிகளை Insolvency and Bankruptcy Code-ன் கீழ் கடன் வாங்கிய தனி நபர் அல்லது நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLAT - National Company Law Appellate Tribunal) சமர்பித்து விட வேண்டும். அதன் பிறகு தீர்ப்பாயம் சொத்துக்களை விற்று எப்படி வங்கிகளுக்கு கடனை திருப்பிக் கொடுப்பது என வழி சொல்லும்.
ஆர்பிஐ-ன் கீழ் சிக்கிய துறைகள்
மின்சாரம், சர்க்கரை, உரங்கள் போன்ற துறை சார்ந்த தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் தான் அதிகம் சிக்கின. இந்த மூன்று துறைகளிலும் குறிப்பாக அதிகம் சிக்கி தவித்தது மின்சாரத் துறைகளில் முதலீடு செய்த நிறுவனங்கள் தான். Rattan India, GMR, GVK, ILFS and Coastal Energen போன்ற பெரிய நிறுவனங்களே ஆர்பிஐ முன் கை கட்டி நிற்க வேண்டி இருந்தது.
உயர் நீதிமன்றங்களில் வழக்கு
ஆர்பிஐ-ன் இந்த பிப்ரவரி 12, 2018 சுற்றறிக்கையை எதிர்த்து சென்னை மற்றும் அலஹாபாத் உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தார்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத கார்ப்பரேட்டுகள். அதன் பிறகு வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு போனது. இரண்டு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கத் தொடங்கியது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் எஃப் நரிமன் மற்றும் வினித் சரண் இந்த வழக்கை விசாரித்தார்கள்.
ஆர்பிஐ தரப்பு
இந்தியாவில் அதிகரித்து வரும் வாராக் கடன்கள் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த பொருளாதார பிரச்னையைத் தீர்க்கத் தான் உடனடியாகவும், விரைவாகவும் இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதை அமல்படுத்தியும் வருகிறோம். ஒரு போதும் இப்படிப்பட்ட வாராக் கடன்களை (Bad loans) வாராக் கடன்களாகவே (Writing of bad loans) எழுதி இந்திய வங்கிகளின் நிதி நிலையை மோசமாக்குவது தீர்வாகாது என வாதிட்டது ஆர்பிஐ.
பொருளாதார என்ன ஆகும்
அதோடு "இந்திய வங்கிகள் ஏன் கடன் கொடுக்கிறது..? ஒரு நிறுவனம் தொடங்கினால், அதனால் நாட்டுக்கு ஒரு பொருளாதார மதிப்பு அதிகரிக்கும். அந்த நிறுவனத்தால் பல குடும்பங்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும் என்கிற பொருளாதார நோக்கோடும் தான் கடன் கொடுக்கிறது. ஆனால் இந்தியாவில் பல்வேறு கார்ப்பரேட்டுக்களுக்கு கொடுத்த 3,80,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள், அப்படி எந்த ஒரு பொருளாதார பயன்களையும் கொடுக்கவில்லை.
காத்திருப்பவர்கள் எண்ணிக்கை
இப்படி கடன் வாங்கி பொருளாதாரத்தை வளர்க்காதவர்கள் ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் கடன் வாங்க திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட பிசினஸ் தேவைகளுக்கு (Working Capital) கடன் வாங்குவது தொடங்கி, பிசினஸ் விரிவாக்கத்துக்கு, புதிய இயந்திரத்தை வாங்குவதற்கு, அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்து கொள்வதற்கு, போட்டி நிறுவனங்களை விட தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு என கடனுக்காக பெரிய பொருளாதார அழுத்தத்தோடு காத்திருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களுக்கு கடன் கொடுக்கவாவது பணத்தை மீட்க வேண்டாமா..? என காரசாரமாக வாதிட்டிருக்கிறது ஆர்பிஐ.
நிறுவனங்கள் தரப்பு
நாங்கள் கடன் வாங்கியது உண்மை தான் ஆனால் நாங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தமாட்டோம் எனச் சொல்லவில்லையே..! எங்கள் வியாபாரம் சில சர்வதேச காரணிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சர்வதேச காரணிகளை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. உதாரணமாக உலக அளவில் சர்க்கரையின் விலை சரிந்தது, கச்சா எண்ணெய் விலையை, அதிகரிப்பது, எரிபொருள் விலை அதிகரிப்பது, பணப் புழக்கம் குறைவது போன்ற காரணிகளை அடுக்கியது. இந்த காரணிகள் எதையுமே தங்களால் கட்டுப்படுத்த முடியாது. தங்கள் கையில் இல்லை. ஆகையினால் இந்த காரணிகளால் ஏற்படும் நஷ்டங்களை நாங்கள் வேண்டும் என்றே செய்ததாக பழி சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டது கார்ப்பரேட்டுகள்.
திட்டம் தரவில்லை
கடந்த மார்ச் 14, 2019-ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வாதிட்ட ஆர்பிஐ தரப்பு "கடனை வாங்கிய நிறுவனங்களில், பலரும் உச்ச நீதிமன்றத்தின் status quo order-ஐப் பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தை Insolvency and Bankruptcy code-ன் கீழ் நடவடிக்கைகள் பாயாதவாறு பார்த்துக் கொண்டது. உச்ச நீதிமன்ற தலையீட்டால் கடந்த ஆகஸ்ட் 27, 2018 தொடங்கி பிப்ரவரி 28, 2019 வரை கொடுத்த கெடுவிலும் ஒரு சில நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்களுக்கு தாங்கள் வாங்கிய கடனைச் சரியாக திருப்பிச் செலுத்தும் திட்டங்களோடு முன் வரவில்லை. ஆக இவர்களுக்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த விருப்பமே இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது" என நெத்தி அடி கொடுத்து தன் வாதத்தை முடித்துக் கொண்டது ஆர்பிஐ.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 02, 2019 அன்று "ஆர்பிஐ அமைப்பு தனக்கு வழக்கப்பட்ட அதிகாரம் மற்றும் பலத்தைத் தாண்டி செயல்பட்டது தெளிவாகத் தெரிகிறது. எனவே பிப்ரவரி 12, 2018 அன்று வெளியிட்ட ஆர்பிஐ சுற்றறிக்கை செல்லாது" என தீர்ப்பளித்தார்கள் ஆர் எஃப் நரிமன் மற்றும் வினித் சரண்.
அதென்ன 35AA
அதோடு "ஆர்பிஐ பிப்ரவரி 12, 2018 அன்று வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையை Banking Regulation Act பிரிவு 35AA-ன் படி வெளியிட்டிருக்கிறது. இந்த 35AA சட்டப் பிரிவின் படி கடனைத் திருப்பிச் செலுத்தாத ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது நிறுவனத்தையோ மட்டுமே குறிப்பிட்ட சுற்றறிக்கை வெளியிட முடியும். பொதுவாக கடன் வாங்கிய அனைவருக்குமே இந்த 35AA சட்டப் பிரிவின் கீழ் சுற்றறிக்கை வழங்கி நடவடிக்கை எடுக்கச் சொல்ல முடியாது" எனவும் தெளிவு படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும் Insolvency and Bankruptcy code-ன் கீழ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும் எனவும் வழிகாட்டி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.
வசூலித்த பணத்தைக் கொடு
உச்ச நீதிமன்ற தீப்பினால் இதுவரை பிப்ரவரி 12, 2018 சுற்றறிக்கையின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த வழக்குகள் மூலம் ஆர்பிஐயோ அல்லது வங்கிகளோ கடன் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து திரட்டிய தொகைகளை எல்லாம் அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வங்கிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் புதிதாக கடனை திருப்பிக் கொடுக்காத நிறுவனங்கள் மீது, சம்பந்தப்பட்ட வங்கிகளே நடவடிக்கை எடுக்கத் தொடங்க வேண்டும். இப்போது நேரடியாக Insolvency and Bankruptcy code-ன் கீழோ அல்லது பழைய Strategic Debt Restructuring முறையிலோ கடனை திருப்பி வசூலிக்க வேண்டி இருக்கும் என்கிறார் Dhir & Dhir Associates நிறுவனத்தின் முதன்மை உறுப்பினர் ஆசிஷ் ப்யாஸி.
தப்பித்துவிட்டார்கள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் இதுவரை முறையான திட்டத்தோடு வராதவர்கள் இனி Insolvency and Bankruptcy code-ன் கீழ் நடவடிக்கைகளுக்கு உட்படத் தேவை இல்லை. அதோடு இதுவரை Insolvency and Bankruptcy code-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் கூட இனி விடுவிக்கப்படுவார்கள். சுருக்கமாக இனி Insolvency and Bankruptcy code-ன் கீழ் எந்த நிறுவனத்தின் மீதும் அத்தனை எளிதில் நடவடிக்கை எடுக்க முடியாது. Insolvency and Bankruptcy code-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தவர்கள் இன்றே தப்பித்துவிட்டார்கள். இதற்கு மேல் சம்பந்தப்பட்ட வங்கிகளே நேரடியாக Insolvency and Bankruptcy Code-ன் கீழ் நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு.
எத்தனை பேர், எவ்வளவு ரூபாய்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய 36 நிறுவனங்கள் இப்போது சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். ICRA என்கிற சர்வதேச மதிப்பீட்டு நிறுவனத்தின் கணிப்புப் படி 70 பெரிய கார்ப்பரேட்டுகள் சுமார் 3.8 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை Insolvency and Bankruptcy code-ன் கீழ் கடந்த செப்டம்பர் 01, 2018-க்குள்ளேயே கொண்டு வந்திருக்க வேண்டும் எனச் சொல்வதிலேயே வாராக் கடன் இந்தியாவில் எப்படி அதிகரித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இவர்கள் எல்லாமா..?
Rattan India, GMR, GVK, IL & FS , Coastal Energen போன்ற நிறுவனங்கள் ஆர்பிஐ-ன் பிப்ரவரி 2018 சுற்றறிக்கையின் படி தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த நிறுவனங்கள் அனைத்தும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். ஆனால் பிப்ரவரி 12, 2018 சுற்றறிக்கைக்கு முன்பே தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து வரும் Essar Steel, Bhushan Power and Steel and Jaypee Infratech போன்ற நிறுவனங்கள் தப்பிக்காது என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
வெளியேற முடியாது
Insolvency and Bankruptcy code-ன் கீழ் ஒரு நிறுவனத்திடம் கடனை வசூலிக்கத் தொடங்கிவிட்டால், அந்த நிறுவனத்தில் இருந்து நிறுவனர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் வெளியேற வேண்டும். இப்போது வங்கிகளோடு ஒரு சுமூகமான கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டம் எட்டப் படவில்லை என்றால் உடனடியாக Insolvency and Bankruptcy code-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாததால், கடன் வாங்கி இருக்கும் நிறுவனங்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்களாம். இனிமேல் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கடன் கொடுத்த வங்கிகளே கடனைத் திருப்பி வசூலிக்கும் திட்டத்தை வரையறுக்கலாம் அல்லது Insolvency and Bankruptcy code-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என சட்டம் மிகவும் தளர்ந்திருக்கிறது.
மீண்டும் பழைய படி
இப்படி ஆர்பிஐ சிறுக சிறுக நெருக்கி இன்று 2 லட்சம் கோடி ரூபாய் வரை திருப்பி வசூலிக்க வங்கிகளுக்கு வழி செய்து கொடுத்த ஆர்பிஐ-ன் சுற்றறிக்கையைத் தான் உச்ச நீதிமன்றம் செல்லாது என அறிவித்திருக்கிறது. மீண்டும் பழைய படி கடன் கொடுத்த வங்கிகள் கடன் வாங்கிய நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே இருப்பார்கள். கடன் எப்போது திரும்ப வங்கிக்கு வந்து... உண்மையாகவே தேவையானவர்களுக்கு எப்போது போகும்... எப்போது இந்தியப் பொருளாதாரம் வளரும்... என்பது எல்லாம்... வங்கிளுக்குத் தான் வெளிச்சம்.