டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இனிமேல் 15000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்களும் ஓய்வு பெறும்போது வருங்கால வைப்பு நிதியுடன் சேர்த்து பென்சன் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பென்சன் பெறுவதற்கும் உரிமை உண்டு என்ற கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி 2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருங்கால வைப்பு நிதித்திட்டத்தின் திருத்த மசோத மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது,
உச்சவரம்பு 15000 தான்
இபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஈபிஎஸ் (Employee Pension Scheme) எனப்படும் பென்ஷனும் உள்ளது. இந்த பென்ஷன் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. புதிய திருத்தங்களின் படி 15,000 ரூபாய்க்குள் ஒருவரின் சம்பளம் இருக்கும் போது நிறுவனத்தின் 12 சதவீத இபிஎஃப் பங்களிப்புடன் வருங்கால வைப்பு நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
பென்சன் கிடையாது
புதிய திருத்தத்தின் படி அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) என இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் உள்ள போது ஈபிஎஸ் பங்களிப்பு பிடிக்க தேவையில்லை என்று கூறப்பட்டது.
வருங்கால வைப்பு நிதித் திட்டம்
பொதுவாக ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவரின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12 சதவிகிதமும், நிறுவனத்தின் சார்பில் 12 சதவிகிதமும் சேர்த்து வருங்கால வைப்பு நிதி திட்டம் கீழ் டெபாசிட் செய்யப்படும். ஆனால் நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவிகிதம் மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33 சதவீதம் ஈபிஎஸ் (EPS) என அழைக்கப்படும் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.
புதிய திருத்தம்
2014ஆம் ஆண்டு செய்த புதிய திருத்தங்களின் படி 15,000 ரூபாய்க்குள் ஒருவரின் சம்பளம் இருக்கும் போது நிறுவனத்தின் 12 சதவீத இபிஎஃப் பங்களிப்பும் வருங்கால வைப்பு நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு பென்ஷன் பெற முடியாத சூழல் உருவானது.
15000 வரம்பு தேவையில்லை
இபிஎஃப் ஆணையத்தின் இந்த வேறுபாட்டை எதிரித்து சில நிறுவனங்களின் ஊழியர்களின் சார்பாக கேரளா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 15,000 ரூபாய் வரம்புகள் ஏதுவும் ஈபிஎஸ் பென்சன் திட்டத்தில் இருக்க கூடாது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அதிரடி
கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பை வருங்கால வைப்பு நிதி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து இபிஎஃப் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.