மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இப்போது கடன் மற்றும் ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையால் விமானங்களை இயக்க முடியாமல் மிகச் சிறிய விமான நிறுவனமாக சுருங்கிவிட்டது.
தினந்தோறும் குத்தகை பாக்கிக்காக விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்படுவதால் தற்போது இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 29ஆக குறைந்துள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் விதிகளின் படி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இல்லாததால் மிகச் சிறிய விமான நிறுவனம் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நீண்ட தூர சேவை
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற ஒரு நகைச்சுவைக் காட்சி அனைவரும் அறிந்ததே. அந்த நகைச்சுவை தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சரியாகப் பொருந்தி உள்ளது. ஒரு காலத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பிறகு உலகிலேயே மிகச் சிறந்த நீண்ட தூர விமான சேவை வழங்கும் நிறுவனம் என்ற பெயரை தட்டிச்சென்றது ஜெட் ஏர்வேஸ். ஒட்டுமொத்தமாக உலகின் ஏழாவது சிறந்த விமான நிறுவனமாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.
முதலில் 4 அப்புறம் 124
கடந்த 1992 ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுக்கப்பட்ட 4 போயிங் 737-700 ரக விமானங்களைக் கொண்டு தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் பின்னர் படிப்படியாக வளர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு வரை சுமார் 124 விமானங்களை கையாளும் திறமையைப் பெற்றிருந்தது.
ஓடுதளத்தில் நிறுத்திவைப்பு
நாட்டிலேயே மிகப்பெரிய விமான சேவை நிறுவனமாக இருந்தாலும், பெரும்பாலான விமானங்களை வாடகைக்கு எடுத்திருந்ததால் அதற்கு வாடகையே கோடிக்கணக்கில் தரவேண்டி இருந்தது. வாடகை பாக்கிக்காக விமானங்களை குத்தகைக்கு விட்டவர்கள் குத்தகை பாக்கிக்காக விமானங்களை இயக்க முட்டுக்கட்டை போட்டு விமானங்களை ஓடு தளத்திலேயே ஓரம் கட்டிவிட்டனர்.
3 மாத சம்பள பாக்கி
குத்தகைதாரர்களின் கெடுபிடியால் விமானங்கள் இறக்கை ஒடிந்த பறவையாக பரிதாபமாக ஓடுதளத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால், கூடிக்கொண்டே செல்லும் எரிபொருள் செலவு, நிறுவன ஊழியர்கள், நிர்வாக மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் பைலட்டுகளுக்கு தரவேண்டிய சம்பள பாக்கி 3 மாதங்கள் என்று கூடிக்கொண்டே சென்றது.
சட்டபூர்வ நடவடிக்கை
குத்தகை பாக்கி மற்றும் கடன்தாரர்களுக்கு தரவேண்டிய கடனுக்கு மத்திய அரசே தலையிட்டு வங்கிகளை கடன் வழங்க நிர்பந்தித்தது. இதையடுத்து கடன் பிரச்சனை ஒய்ந்தாலும், ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை பூதாகரமாக எழுந்தது. பைலட்கள் தங்களின் சம்பள பாக்கியை செலுத்தாவிட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
விடுமுறை எடுக்கலாம்
ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் பைலட்கள் டிசம்பர் மாத சம்பள பாக்கியை பெற்றுக்கொண்டு விமானங்களை இயக்குவதற்கு முன்வந்தனர். மீதம் உள்ள சம்பள பாக்கியை வரும் ஏப்ரல 15ஆம் தேதிக்குள் முழுவதுமாக செலுத்திவிடுவதாக வாக்குறுதி அளித்தது. கூடவே பைலட்கள் தேவைப்பட்டால் சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக்கொண்டு விரும்பும்போது பணிக்கு திரும்பலாம் என்று சலுகை அளித்தது.
இப்போ வெறும் 29 தான்
நிலைமை இப்படி இருக்க வங்கிகள் கடன் அளித்தாலும் குத்தகைதாரர்களுக்கு இன்னும் குத்தகை தராததால் தொடர்ச்சியாக விமானங்களை இயக்க விடாமல் ஓடுதளத்திலேயே நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுமார் 115 விமானங்களை இயக்கிய ஜெட் ஏர்வேஸ் இன்று 29 விமானங்களை மட்டுமே இயக்கி வருகிறது. இது நாளை இன்னும் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
ஏப்ரல் இறுதிக்குள் 75
மும்பை பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு அளித்த விளக்கத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதியன்றம் 15 விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் எத்தனை விமானங்கள் தினசரி இயக்கப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. ஆனால் ஏப்ரல் மாத இறுதிக்குள் 75 விமானங்களை இயக்குவதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகச்சிறிய விமான நிறுவனம்
ஜெட் ஏர்வேஸ் தினந்தோறும் விமான சேவையை தொடர முடியாமல் நிறுத்தி வைப்பதால் நாட்டின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனம் என்ற பெயரை இழந்துவிட்டது. இந்திய விமான இயக்க விதிகளின் படி தினசரி குறைந்தது 20 விமானங்கள் உள்நாட்டிலும் 120 விமாங்கள் சர்வதேச அளவிலும் இயங்கவேண்டும். ஆனால் ஜெட் ஏர்வேஸ் இந்த விதிகளை மீறிவிட்டது. ஆகவே தற்போது அது நாட்டிலேயே மிகச் சிறிய விமான நிறுவனமாக சுருங்கிவிட்டது.