டெல்லி: இந்த நிதியாண்டில் இருந்து வருமான வரி தாக்கல் செய்யும் அனைவரும் தங்களின் வருமான வரிப் படிவத்தில் கட்டாயமாக ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
அப்படிக் குறிப்பிடாதவர்களின் வருமான வரிப் படிவம் ஏற்றுக் கொள்ளப்படாது எனச் சொல்லி இருக்கிறது மத்திய நேரடி வரிகள் வாரியம்.
அதோடு வருமான வரித் துறை கொடுக்கும் பான் எண்ணோடு ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்பதும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன் மார்ச் 31, 2019 தான் ஆதாரையும் பான் எண்ணையும் இணைக்க கடைசி தேதியாக இருந்தது.
நீட்டிப்பு
தற்போது வரி செலுத்துபவர்களின் நலனையும், சில எதார்த்த சிக்கல்களையும் மனதில் கொண்டு வரும் செப்டம்பர் 30, 2019 வரை பான் எண்ணையும் ஆதாரையும் இணைக்க நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
கடைசி தேதி
கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவங்களை நிரப்பி தாக்கல் செய்ய தற்போது ஜூலை 31, 2019 கடைசி தேதியாக இருக்கிறது. ஆனால் அடுத்த மாதத்தில் இருந்து தான் வருமான வரிப் படிவங்களே அரசு வெளியிடும். ஆக அக்டோபர் 2019-க்குப் பிறகு வருமான வரித் படிவத்தை சமர்பிப்பவர்கள் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்களையும் இணைத்திருக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டப் படி கட்டாயம்
கடந்த செப்டம்பர் 2018-ல் உச்ச நீதிமன்றம் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அவசியம் என தெளிவு படுத்தியது. அதே போல வருமான வரிச் சட்டம் பிரிவு 139 AA உட்பிரிவு (2)-ன் படி பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போதே ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும், வருமான வரிப் படிவங்களிலும் குறிப்பிட வேண்டும். ஆக ஒருவர் தன் வருமான வரிப் படிவத்தை ஆன்லைனில் நிரப்பினாலும் சரி, காகிதங்களில் நிரப்பினாலும் சரி கட்டாயம் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.
வரி ஏய்ப்புகளைத் தடுக்க
ஆதார் எண்ணைக் கட்டாயம் குறிப்பிடச் சொல்லி புதிய சட்டங்களைக் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணமே வரி ஏய்ப்புகளைத் தடுப்பதற்காகத் தான். இப்படி வருமான வரிப் படிவங்களிலும் ஆதாரைக் கேட்பதால், ஆதாரோடு இணைந்திருக்கும் அனைத்து விவரங்களையும் வருமான வரித் துறையினரால் பெற முடியுமாம்.
ஆதார் பதிவு ஐடி
ஒருவேளை வருமான வரிப் படிவத்தில் கேட்பது போல ஆதார் எண் இல்லை என்றால் ஆதார் அட்டைக்காக பதிவு செய்திருக்கும் பதிவு ஐடி எண்ணைக் குறிப்பிட்டு வருமான வரிப் படிவத்தை நிரப்பலாமாம். இப்படி ஆதாருக்கு பதில் ஆதார் பதிவு ஐடியை கொடுத்தாலும் வருமான வரித் துறை ஏற்றுக் கொள்ளுமாம்.