டெல்லி: 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான புதிய படிவங்களை மத்திய நேரடி வரிகள் ஆணையம் ஏப்ரல் 5ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள படிவங்களில் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தாக்கல் செய்யும் ஐடிஆர்-1 படிவத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஐடிஆர் 2, 3, 5, 6 மற்றும் 7 படிவங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாதச் சம்பளம் வாங்கவோர் வரும் ஜூலை மாத இறுதிக்குள் தங்களின் வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்து அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.
ஆண்டுதோறும் மாறும் படிவங்கள்
வருமான வரி ரிட்டன்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதை நடைமுறைப்படுத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பங்கள் வளர வளர வருமான வரி ரிட்டன்களில் புதிய புதிய மாற்றங்களை மத்திய நேரடி வரிகள் ஆணையம்(CBDT) செய்து வருகிறது.
ரொம்ப ஈசியான படிவங்கள்
வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ரிட்டன்களில் மாற்றம் செய்வதற்கு ஏற்ப தணிக்கையாளர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர். மாதச் சம்பளம் வாங்குவோரும் யாருடைய வழிகாட்டுதலும் இன்றி தாங்களாகவே வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
மாற்றம் இல்லாத சகஜ் ITR-1
CBDT வருமான வரி ரிட்டன்களை ஆண்டு தோறும் மாற்றுவது போல் 2018-19ஆம் நிதியாண்டுக்கான ரிட்டன்களையும் மாற்றியுள்ளது. இதில் மாதச் சம்பளம் வாங்குவோர் தாக்கல் செய்யும் சகஜ் என்னும் ITR-1 படிவத்தில எந்தவிதமான மாறுதலையும் செய்யவில்லை.
ரூ.50 லட்சம் வரைதான்
மாதச் சம்பளம் வாங்குவோர் மற்றும் தனிநபர் பிரிவின் கீழ் வருவோர், வீட்டு வாடகை வருமானம் உள்ளவர்கள், வட்டி வருவாய் உள்ளவர்கள் அனைவரும் 2018-19ஆம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரையிலும், விவசாய வருவாய் ரூ.5000 வரையிலும் உள்ள அனைவரும் ITR-1 படிவத்தை தாக்கல் செய்யலாம்.
தொழில்முறை வருமானத்துக்கு ITR-2 மற்றும் ITR-3
தனிநபர் பிரிவினர் (Individual) மற்றும் கூட்டுக் குடும்பம் (HUF) பிரிவில் உள்ள அனைவரும் தங்களின் தொழில்(Business) மற்றும் தொழில்முறை (Profession) வருமானத்தை ITR-2 மற்றும் ITR-3 படிவங்கள் மூலம் தாக்கல் செய்து கொள்ளலாம்.
கூட்டுக்குடும்பத்துக்கு சுகமான ITR-4
தனிநபர் பிரிவினர் (Individual) மற்றும் கூட்டுக் குடும்பம் (HUF) மற்றும் கூட்டு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது-LLP) பிரிவில் உள்ள அனைவரும் தங்களின் ஆண்டு வருமானம் ரூ.50 லட்சம் வரையிலும், வேறு வகையில் வந்த தொழில் மற்றும் தொழில்முறை வருமானத்தையும் (Presumptive Income) சுகம் என்னும் ITR-4 படிவம் மூலம் தாக்கல் செய்து கொள்ளலாம்.
ஜிஎஸ்டிக்கு ITR-3 மற்றும் ITR-6
வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் (Corporate Companies) அனைத்தும் தங்களின் ஆண்டு வருவாய், லாப நட்டக் கணக்கு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி விவரங்கள் அனைத்தையும் ITR-3 மற்றும் ITR-6 ரிட்டன் மூலம் தாக்கல் செய்யலாம். கடந்த 2017-18ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி விவரங்களை ITR-4 மூலம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் கடைசி நாள்
மாற்றி அமைக்கப்பட்ட படிவங்களின் மூலம் அனைவரும் தங்களின் வருமான வரி ரிட்டன்களை நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் ஜூலை மற்றும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்து அபராதம் மற்றும் தண்டம் செலுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.