அமராவதி: 2019- 20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் "பாய்யோ அவுர் பெஹனோ ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் தருகிறோம். மறக்காமல் தாமரைக்கு ஓட்டு போடுங்கள். அச்சா தின் ரெடியாக இருக்கிறது" என்றார் மோடி
கடந்த மார்ச் 2019-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி "இந்தியாவில் இருக்கும் 20 சதவிகித ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் தருகிறோம். மறக்காமல் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்" என்றார். இவ்வளவு பெரிய தொகைக்கே பல பொருளாதார வல்லுநர்கள் பதறிவிட்டார்கள்.
இப்போது ஒரு மாநிலக் கட்சி இந்த இரண்டு தேசிய கட்சிகளின் அறிவிப்புகளை எல்லாம் தாண்டி "ஆந்திரத்தில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் தருகிறேன். இப்போது சொல்லுங்கள் யார் முதல்வர் ஆக வேண்டும், யார் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்" என கட்டம் கட்டி வாக்கு சேகரித்து வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு.
தேர்தல் வாக்குறுதிகள்
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 06, 2019) அன்று தெலுங்கு தேசம் கட்சி தன் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்தார்கள். அதில் தான் இந்த 2 லட்சம் ரூபாய் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இதைப் பற்றி சந்திரபாபு நாயுடு பேசிய போது "எந்த அரசும் ஆந்திரத்துக்கு இணையாக இத்தனை பெரிய திட்டத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது" என அசால்ட் காட்டி இருக்கிறார்.
விவசாயிகளுக்கு
ஆந்திர விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைப்பதோடு, தெலுகு தேசம் கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர அரசும் தன் பங்குக்கு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15,000 ருபாய் கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது.
வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ்
வொய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் வொய் எஸ் ஆர் காங்கிரஸும் தன் தேர்தல் அறிக்கைகளை கடந்த சனிக்கிழமை (ஏப் 05, 2019) அன்றே வெளியிட்டது. தெலுகு தேசம் கட்சி வெளியிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தான் வொய்.எஸ்.ஆர் கட்சி தன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. அதில் தெலுகு தேசக் கட்சிக்கு சளைக்காமல் பல்வேறு இலவசப் பணத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு லட்சம் வரை
வொய்.எஸ்.ஆர் ரைத்து பரோசா (விவசாயிகள் நம்பிக்கை திட்டம்) திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12,500 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையான உதவித் தொகைகளை ஒவ்வொரு விவசாயிக்கும் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆரோக்கிய ஸ்ரீ என்கிற பெயரில் ஆந்திர மக்கள் அனைவருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம், இளநிலை வழக்கறிஞர்களுக்கு ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஊக்கத் தொகை என அள்ளி இரைத்திருக்கிறார் ஜெகன்மோகன்.
இப்படி இரண்டு கட்சிகளுமே தங்களால் முடிந்த வரை பண உதவித் தொகைகளை அள்ளி இரைத்திருக்கிறார்கள். யார் வென்றாலும் மாநில நிதி நிலை என்ன ஆகும், எப்படி சமாளிக்கப் போகிறார்கள்... என அரசியல் விமர்சகர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.