மும்பை: வருமான வரித்துறைக்கு சொந்தமாக நிலம் மற்றும் கட்டிடங்கள் இருந்தாலும் கடந்த 20 வருடங்களாக குத்தகை மற்றும் வாடகை வகையில் ஆடம்பரமாக ரூ.1000 கோடி மக்கள் வரிப்பணத்தை வீணாக செலவழித்துள்ளதாக மத்திய தணிக்கை குழு தன்னுடைய தணிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் வருமான வரித்துறை ஏன் அவற்றை முறையாக பராமரித்து பயன்படுத்துவதில்லை என்ற தணிக்கை குழு வருமான வரித்துறையை சாடி உள்ளது
வரி செலுத்துபவர்களுக்கு கெடுபிடி காட்டும் வருமான வரித்துறை இந்த விசயத்தில் அலட்சியமாக இருப்பது வேதனையானக்குரியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
ஊருக்குத்தான் உபதேசம்
ஊருக்கெல்லாம் குறி சொல்லும் பல்லி, கழனிப் பானையில் விழுமாம் துள்ளி என்பது கிராமத்து பழமொழி. அது போலத்தான் இருக்கின்றது வருமான வரித் துறையின் செயல்பாடுகள் அனைத்துமே.
நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்
வருமான வரி செலுத்தும் அனைவரையும் பாடாய் படுத்தும் வருமான வரித்துறை நாம் தாக்கல் செய்யும் ரிட்டன்களில் ஏதாவது குறை மற்றும் தவறுகள் இருந்தால் உடனடியாக நோட்டீஸ் அனுப்பி கேள்வி கேட்டு நம்மை குடைந்தெடுத்துவிடும்.
டிமாண்ட் உத்தரவு
முக்கியமாக வருமான வரி ரிட்டன்களில் நாம் தெரிவித்துள்ள வாடகை வருமானத்திற்கு ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு, அனைத்தும் சரியாக இருந்தாலும் அவற்றை தள்ளுபடி செய்துவிட்டு அதற்கு வரி செலுத்த டிமாண்ட் உத்தரவு (Demand Order) கொடுத்துவிட்டுத்தான் மறுவேளை பார்ப்பார்கள். வாடகை விசயத்தில் அவ்வளவு கறார் காட்டுகிறார்களாம்.
எங்க வழி தனி வழி
வரி செலுத்தும் சாதாரண குடிமகன்களிடம் வாடகை விசயத்தில் இவ்வளவு கறார் காட்டும் வருமான வரித்துறை தனக்கு என்று வரும்போது இவை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விடுகிறது.
வாடகை கட்டிடத்தில்தான்
நாடு முழுவதும் எத்தனையோ நிலங்கள் மற்றும் கட்டிடங்களை வருமான வரித்துறை சொந்தமாக வைத்திருந்தாலும், இந்தியாவின் மிகவும் காஸ்ட்லியான ரியல் எஸ்டேட் சந்தையாக கருதப்படும் மும்பையின் மையப்பகுதியில் தான் வருமான வரித்துறை வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
27 ஆண்டுகளாக வாடகை
மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor General) தனது ஆய்வறிக்கையில், வருமான வரித்தறை மும்பையின் மிக முக்கியமான காஸ்ட்லியான இடத்தில் கடந்த 27 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதாக தனது தணிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
CAG சாட்டையடி
நாடு முழுவதும் எத்தனையோ கட்டிடங்கள் மற்றும் இடங்கள் இருக்கும் போது, ஏன் இத்தனை ஆண்டுகளாக மிகவும் காஸ்ட்லியான மும்பை நாரிமன் பாய்ண்ட் (Nariman Point) பகுதியில் மிகப்பெரிய ஆடம்பரமான கட்டிடத்தில் கடந்த 27 வருடங்களாக வாடகை கொடுத்து இருக்க வேண்டும் என்று தனது இறுதி அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது.
ஏன் கட்டவில்லை புதுக் கட்டிடம்
மும்பை நாரிமன் பாய்ன்ட் பகுதியில் மிகவும் ஆடம்பரமான கட்டிடத்தில் சுமார் 100000 சதுர அடி இடப்பரப்பில் கடந்த 20 வருடங்களாக வாடகை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதே போல் சமீபத்தில் ஏர் இந்தியா கட்டிடத்திற்கு அருகிலும் புதிதாக ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. ஏன் அதற்கு பதிலாக புதிதாக ஒரு கட்டிடத்தையே கட்டி அதில் தங்களின் அலுவலகத்தை நடத்தி இருக்கலாமே என்றும் மத்திய தணிக்கை குழு கேள்வி எழுப்பியுள்ளது.
எல்லாமே வாடகை கட்டிடம் தான்
வருமான வரித்துறை அதோடு நில்லாமல் மும்பையின் பிரதான இடங்களில் 5 கட்டிடங்களை குத்தகைக்கு வேறு எடுத்துள்ளது. அதில் முக்கியமாக லோயர் பரேல் என்ற இடத்தில் பிரமல் சேம்பர்ஸ் கட்டிடத்திலும், நாரிமன் பாய்ன்ட் பகுதியில் மித்தல் கோர்ட் என்ற கட்டிடத்திலும் வருமான வரி அலுவலகத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்காகவே கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
இப்போதான் தூக்கம் கலைந்தது
மத்திய தணிக்கைக் குழு இவ்வளவு கேள்வி எழுப்பிய பின்னர் தான், மும்பை வருமான வரித்துறையினர் மிகவும் சீரியசாக, வருமான வரித்துறைக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட எவ்வளவு செலவாகும், அதி நவீன வசதிகள் என்ன, அதற்கு எவ்வளவு செலவாகும், உயர் அதிகாரிகளுக்கு தேவையான வசதிகள் என்ன, வரி செலுத்த வருபவர்களுக்கு இளைப்பார என்ன வசதிகள் செய்து கொடுக்கலாம் என்பதை எல்லாம் குத்து மதிப்பாக ஒரு மதிப்பீட்டு (Estimate) திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது.
முகூர்த்த நாள் கிடைக்கலை
மும்பை வருமான வரித்துறையினர் தயார் செய்துள்ள திட்ட வரைவு அறிக்கையை ஒரு நல்ல நாள் பார்த்து மத்திய நேரடி வரிகள் ஆணையத்திற்கு (Central Boad of Direct Taxes) அனுப்பி ஒப்புதல் பெறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் 120 கோடி செலவாகும்
மும்பை வருமான வரித்துறை புதிய கட்டிடம் கட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தப் புள்ளியை கோரியிருந்தது. அதில் கட்டிடத்திற்கான வரைபடம் கட்டிடம் கட்ட ஆகும் செலவு எல்லாவற்றையும் சேர்த்து ரூ.120 கோடி வரை செலவாகும் (சேவைக்கட்டணம் மற்றும் செஸ் தவிர்த்து) என்று மதிப்பிட்டு இருந்தது. கட்டிடத்தை 2 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.
இப்போ ரூ.200 கோடி செலவாகும்
புதிய கட்டிடம் கட்ட ஆகும் செலவு மிகவும் குறைவாக இருந்ததால் யாரும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரவில்லை. எனவே தற்போது அதற்கு பதிலாக புதிய திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. புதிய மதிப்பீட்டின் படி மும்பை வருமான வரித்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட சுமார் ரூ.200 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறிகின்றனர்.
அலட்சியப்போக்குதான் காரணம்
இது பற்றி கருத்து தெரிவித்த தணிக்கைத் துறை அதிகாரி ஒருவர், காலி இடங்களை வருமான வரித்துறையினர் இது வரையிலும் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளது, பொதுமக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்தியது எல்லாம் அதிகார வர்க்கத்தின் ஆணவப்போக்கையும் அலட்சியப்போக்கையும் தான் காட்டுகிறது என்று கோபமாகக் கூறினார்.