டெல்லி: 1000, 500 ஆகிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என நான் துணிந்து அறிவிக்காமல் போயிருந்தால் இப்போது இருப்பதை விட கூடுதலான ரொக்கப் பணப்புழக்கம் இருந்திருக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நம் நாடு வேகமான பொருளாதார வளர்ச்சியடைவதற்க நிச்சயம் தான் எடுத்த உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கை கொடுக்கும் என்று நம்புவதாக மோடி கூறினார்.
சட்ட விரோத பணப் புழக்கத்தை தடுக்கவும் போலியான நிறுவனங்களை முடக்குவதற்கும் கூட உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கை கொடுத்தது என்றும் மோடி தெரிவித்தார்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு
நாட்டின் பொருளாதாரம் ஒரே சீரான வளர்ச்சியடைய வேண்டும் என்றால் கருப்புப் பணப் புழக்கத்தையும், உயர் மதிப்புடைய நோட்டுக்களை செல்லாததாக ஆக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தார்.
தவித்த மக்கள்
திடீரென ஒரே இரவில் உயர் மதிப்புடைய நோட்டுக்களை செல்லாத அறிவித்துவிட்டு, கூடவே பொதுமக்கள் தங்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள குறுகிய நாட்கள் காலக் கெடுவும் விதித்தார். பொது மக்களும் வேறு வழியில்லாமல் தங்களிடம் உள்ள பழைய செல்லாத நோட்டுக்களை அலைந்து திரிந்து வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர்.
கருப்பு பண புழக்கம்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வடிவில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஒரு பக்கம் உயர் மதிப்பிலான நோட்டுக்கள் தான் கருப்பு பணப்புழக்கத்திற்கு காரணம் என்று அறிவித்துவிட்டு, இந்தப் பக்கம் அதைவிட கூடுதலான மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்திற்கு விட்டது பொது மக்களையும் பொருளாதார நிபுணர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டது கருப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்கச்செய்யுமே தவிர கட்டுப்படுத்தாது என்று அனைத்து பொருளாதார நிபுணர்களும் எச்சரித்தனர். ஆனால் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
பணம் பதுக்கல்
செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டு இதோ ஆயிற்று இரண்டரை ஆண்டுகள் ஆயிற்று. நாட்டின் பெரும்பாலான வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம் கருப்பு பணப் பதுக்கல்காரர்கள் எல்லாம் முடிந்தவரையிலும 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கிவிட்டனர்.
கோடிக்கணக்கில் பறிமுதல்
தற்போது லோக்சபா தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் எல்லாம் 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்து ஓட்டு வங்கியை குறி வைத்து வாக்காளர்களுக்கு வாரி வழங்கி வருகின்றன. தேர்தல் பறக்கும் படையினரும் தினமும் கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்வது வாடிக்கையாக உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்களாகவே உள்ளன. இதன் காரணமாகவே நாட்டின் பெரும்பாலான ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில்லை.
வருமானவரி தாக்கல்
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி பிரதமர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 5 ஆண்டுகளில் வருமானவரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசு எடுத்த வரிச் சீர்திருத்த நடவடிக்கையே என்றார்.
போலி நிறுவனங்கள்
நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சி அடைவதற்கும் சட்ட விரோத நிறுவனங்களை முடக்குவதற்கும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முக்கிய காரணமாக இருந்தது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள 3.5 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் சிறு அறைகளிலிருந்து போலியாக இயங்கி கூட்டுப் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. பல ஹவாலா நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வந்தன. போலி நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடுக்க உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை பேருதவியாக இருந்தது. கோடிக்கான பணம் கணக்கில் கொண்டுவரப்பட்டு அரசின் கருவூலத்திற்கு வந்தது.
மக்கள் நிம்மதி
எதிர்கட்சிகள் சொல்வது போல் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் இப்போது உள்ளதைவிட பணம் புழக்கம் அதிகமாக இருந்திருக்கும். தொழில் துறையினரும், வர்த்தகர்களும் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்றும் வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் சாமானிய மக்கள் நாங்கள் எடுத்த உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தொடக்கத்தில் பாதிப்படைந்தனர் என்றாலும் இப்போது அவர்கள் நிம்மதியாக உள்ளதை மறுக்கவே மறைக்கவோ முடியாது.
பாஜகவிற்கு பாதிப்பு இல்லை
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட சில மாதங்களில் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. நாங்கள் எடுத்த உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை சாமான்ய மக்களுக்கு எதிரானதாக இருந்திருந்தால் அங்கே பாஜக எப்படி மாபெரும் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
சர்வதேச அமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு எந்த மதிப்பீட்டு நிறுவனங்களாக இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைவதை ஒப்புக்கொண்டுள்ளன. அதற்காக நாம் நிச்சயம் பெருமை பட வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.