டெல்லி: கடந்த கால தேர்தல் பிரசாரங்களை பணம் தான் முன்னெடுத்துச் சென்றிருக்கிறது. அதே போல இந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களையும் பணம் தான் முன்னெடுத்துச் செல்கிறது என்பதை ஆர்பிஐயே சொல்கிறது.
தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை மக்களின் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருப்பதை ஒவ்வொரு வருடம் நம்மால் பார்க்கமுடிகிறது. இதை ஆர்பிஐ தரவுகளும், ஒரு தனியார் பத்திரிகை நிறுவனமும் சேர்ந்து கணக்கிட்டு வெளியிட்டிருக்கிறது.
அதாவது தேர்தல் காலங்களில் அல்லது தேர்தல் ஆண்டுகளில் கச்சிதமாக மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த 2019 தேர்தலில் மக்களின் கையில் கடந்த 25 ஆண்டு தேர்தலில் இல்லாத அளவுக்கு பணம் புழக்கம் இருப்பதைக் காண முடிகிறது.
ரொக்கப் பணம் Vs ஜிடிபி
ரொக்கப் பணம் புழக்கத்துக்கும் நாமினல் ஜிடிபிக்கும் இடையிலான விகிதமே இதற்கு ஒரு நல்ல உதாரணம் எனச் சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இப்போது 2018 - 19-ல் தேர்தல் சமயங்களில் மக்களிடத்தில் பணம் புழக்கம் 17.3 சதவிகிதமாக இருக்கிறது. இது இந்திய தேர்தலின் கடந்த 25 ஆண்டு சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு அதிகம். 1990 முதல் கடந்த ஆண்டுகளில் எவ்வளவு பணப் புழக்கம் அதிகரித்து இருக்கிறது என மேலே படத்தில் பார்க்கலாம்.
தேர்தல் பறக்கு படை
இதுவரை தேர்தல் ஆணையம் சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், 500 கோடி ரூபாய் மதிப்பிலான மது பானங்கள் போன்ற போதை வஸ்துக்கள், வெளிநாட்டு கரன்ஸிகள், கணக்கில் வராத பணம் என பல இடங்களில் இருந்து பறிமுதல் செய்திருக்கிறது.
வருமான வரித் துறை சோதனைகள்
மேலும் வருமான வரித் துறை தமிழ்நாடு, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளிலும் பல்வேறு பெருந்தலைகளிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். பல புதிய கறுப்புப் பணப் பிரச்னைகளும் தலி யெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
பணப் புழக்கத்துக்கு சாட்சி
ஆக இத்தனை கோடி ரூபாயை தேர்தல் ஆணையத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் கோடிக் கணக்கில் பணத்தைப் பறிமுதல் செய்து வருவதே மக்கள் மத்தியில் அதிகப் பணப் புழக்கம் இருப்பதைக் காட்டுகிறது. அதற்கு அரசியல்வாதிகளும் தங்களுக்கு தகுந்தாற் போல சாயம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
கேவலமாக அரசியல்
மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் கமல்நாத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் நடத்திய சோதனைகளில் சுமார் 280 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள், பணம், சில கணிணி கோப்புகள் எல்லாம் கிடைத்திருக்கிறது. உடனே பாஜக "காங்கிரஸுக்கு பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்குவது ஒரு கலாச்சாரம்" என விமர்சித்தார்கள். தெலுங்கானாவில் பாஜகவினரிடம் இருந்து கணக்கில் வராத 8 கோடி ரூபாய் பிடிபட்ட உடன் "இது ஜனநாயகமற்ற ஆட்சிக்கு ஒரு உதாரணம்" எனக் கதை கட்டுகிறார்கள். பணப் புழக்கம் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, அதற்கு அரசியல் சாயமும் வாகாக அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.