சில தினங்களுக்கு முன் தான் 2019 - 20 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் என தன் முந்தைய கணிப்புகளில் இருந்து 0.2%-த்தை குறைத்துக் கொண்டது பன்னாட்டு நிதியம் (IMF - International Monetary Fund).
பன்னாட்டு நிதியத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக கடந்த 2018-ல் பொறுப்பேற்றார் கீதா கோபிநாத். பன்னாட்டு நிதியத்தின் முதல் பெண் பொருளாதார ஆலோசகராக ஒரு இந்தியர் இருப்பது கூடுதல் சிறப்பு.
ஆனால் இப்போது இந்தியப் பொருளாதாரம் குறித்தும், இந்தியா தன் ஜிடிபி-யை கணக்கிடும் விதம் குறித்தும் வெளிப்படையாக சில கேள்விகளையும் கருத்துக்களை முன் வைத்திருக்கிறார் கீதா கோபிநாத்.
பிரச்னைகள்
இந்தியா தன் பொருளாதார வளர்ச்சிகளையும் ஜிடிபி-க்களை கணக்கிடும் முறையிலும், புள்ளியியல் விவரங்களிலும் சில பிரச்னைகள் இருப்பதாக வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். இந்தியா வெளியிட்டுக் கொண்டு இருக்கும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் மற்றும் புள்ளியியல் தரவுகளை மிக கவனமாக பன்னாட்டு நிதியம் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
பேச்சு வார்த்தை
இந்திய பொருளாதார தரவுகள் மற்றும் புள்ளியியல் விவரங்களை வெறுமனே கவனித்துக் கொண்டு இருக்காமல் இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிதிய ஊழியர்களிடமும் இதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் சொல்லி இருக்கிறார். இந்த ஆக்கப் பூர்வமாக விவாதங்களின் முடிவில் ஒரு தீர்வுக்கு வருவோம் எனவும் சொல்லி இருக்கிறார்.
கண்டனங்கள்
2015-ம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி-யைக் கணக்கிடுவதற்கு அடிப்படை ஆண்டை 2004 - 05-ல் இருந்து 2011 - 12-ஆக மாற்றபட்டது வரவேற்கக்கூடியது தான். ஆனால் அதே நேரத்தில் Current price- விலையைப் பயன்படுத்தி ஜிடிபி கணக்கிட்டது தவறு என்கிறோம். ஏன் என்றால் எப்போதுமே Current price-கள் constant price-களை விட அதிகமாகத் தான் இருக்கும். ஆக வழக்கம் போல constant price களை வைத்து ஜிடிபி கணக்கிடாமல் Current price-களை வைத்து ஜிடிபி கணக்கிட்டு இருக்கிறார்கள்.
கணக்கீடுகள்
இதனால் பொருளாதாரத்தில் உண்மையாகவே உற்பத்தி அதிகரிக்கவில்லை. விலை அதிகரிப்பினால் உற்பத்தி அதிகரித்தது போல ஒரு பிம்பம் உருவாகி இருக்கிறது. உதாரணமாக 2017 - 1 8-ம் ஆண்டில் 100 பொருட்கள் உற்பத்தி ஆகி இருக்கிறது. அப்போது விலை 10 ரூபாய் (Constant Price) என்றால் 100 * 10 = 1,000 ரூபாய் தான் ஜிடிபி. இப்போது 10 ரூபாயை Constant price ஆக எடுத்துக் கொள்வோம். 2018 - 19-ல் 110 பொருட்கள் உற்பத்தி செய்து 10 ரூபாயால் பெருக்கினால் 1,100 ரூபாய் என வரும் இப்படி வருவது தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்தியாவோ 2018 - 19-ல் அதே 100 பொருட்களுக்கு 11 ரூபாய் (Current price) என விலை வைத்து பெருக்கிவிட்டது. இதனால் விலை அதிகரித்து, பொருளாதாரம் வளர்ந்தது போலத் தெரிகிறதே ஒழிய, உண்மையில் பொருளாதாரம் வளர வில்லை. விலை தான் அதிகரித்திருக்கிறது.
இந்தியா தான் கவனம்
இப்போது வரை இந்தியா ஆண்டுக்கு 7 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி காணும் என எல்லா உலக அமைப்புகளும், பொருளாதார வல்லுநர்களும் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே வேறு எந்த நாட்டின் பொருளாதாரமும் இத்தனை வேகமாக வளர்வதில்லை. ஆகையால் இந்தியாவில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு பொருளாதாரத் தரவுகளிலும் அத்தனை நம்பகத் தன்மை தேவையாக இருக்கிறது. அதனால் தான் இந்தியாவின் தரவுகளை பிரத்யேகமாக கவனித்து வருகிறோம்.
ரகுராம் ராஜன்
மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூட இந்தியப் பொருளாதார தரவுகள் பற்றிய விவரங்கள் குழப்பமாக இருப்பதைக் குறிப்பிட்டிருந்தார். அதோடு இந்தியப் பொருளாதார தரவுகள் மீது உலக அமைப்புகளுக்கும், உலக நாடுகளுக்கும் நம்பிக்கை வர வேண்டும் எனவும் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.