ஹரித்வார்: யோகா குரு பாபா ராம் தேவ் கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவில் பிசினஸ் செய்ய பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பதஞ்சலி என்கிற பிராண்டின் பெயரில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தொடங்கி, பிஸ்கெட், நூடுல்ஸ் வரை பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அதில் சமையல் எண்ணெய்களும் அடக்கம். ஆனால் சமையல் எண்ணெய்யில் பெரிய அளவில் கால் பதிக்கவில்லை.
அதனால் கடனில் தத்தளிக்கும் ருச்சி சோயா நிறுவனத்தை விலைக்கு வாங்கி நடத்தும் விருப்பத்திலும் இருக்கிறார் பாபா ராம்தேவ். ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடுமையான வாராக் கடன் பாக்கி இருக்கிறது. எஸ்பிஐ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கிகளிடம் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கிறது.
பதஞ்சலி
இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கத் தான் துடித்துக் கொண்டிருக்கிறார் பாபா. ஆனால் பாபவோடு இந்தியாவின் முன்னனி பணகாரர்களில் ஒருவரான கெளதம் அதானியும் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பதே பிரச்னை. ஆனால் இப்போது காற்று பதஞ்சலி பக்கம் வீசி இருப்பதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
4350 கோடி
ருச்சி சோயா நிறுவனத்துக்கு 4,350 கோடி வரை விலை கொடுக்க பாபாவின் பதஞ்சலி நிறுவனம் தயாராக இருக்கிறதாம். முன்பு பதஞ்சலி தருவதாகச் சொல்லி இருந்த தொகையை விட இந்த முறை 200 கோடி ரூபாய் கூடுதலாக கொடுக்க முன் வந்திருக்கிறது பதஞ்சலி.
பங்குக்கு 115 கோடி மட்டும்
இந்த 4,350 கோடி ரூபாயில், 115 கோடி ரூபாய் மட்டுமே ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் பயன்படுத்தப் போகிறார்களாம். பாக்கி தொகை முழுவதும் ருச்சி சோயா நிறுவனம் வாங்கி இருக்கும் கடன் தொகையைக் கட்டத் தானாம்.
டிசம்பர் 2017
டிசம்பர் 2017-ல் ருச்சி சோயா நிறுவனம் தான் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) சென்றது. அப்போது நிறுவனத்தை விற்று வரும் கடன்களை வங்கிகள் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்தது என்சிஎல்டி. அப்போதே அதானியின் வில்மர் நிறுவனம் ருச்சி சோயாவுக்கு 6000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருந்தது.
அக்டோபர் 2018
ஆகஸ்ட் - செப்டம்பர் 2018-ல் அதானியின் திட்டத்துக்கு டிக் அடித்தது வங்கிகள். ஆனால் பதஞ்சலி என்சிஎல்டி-யிடம் முறையிட்டு அதானியின் டீலை காலி செய்தது. ஜனவரி 2019-ல் அதானி இந்த டீல் வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டது. தற்போது பதஞ்சலி 4,350 கோடி ரூபாய்க்கு ருச்சி சோயாவை வாங்க இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.
2-வது பெரிய உற்பத்தியாளர்
ருச்சி சோயா நிறுவனத்தை வாங்குவதால் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் பட்டியல் ஆகும். இந்தியா எண்ணெய் வியாபாரத்திலும் ஏற்றுமதியில் பெரிய அளவில் கால் பதிக்கும். ருச்சி சோயா நிறுவனத்துக்கு இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் 11.5 லட்சம் அவுட்லெட்டுகள் இருக்கின்றனவாம்.