சியோல்: கடந்த 2018-ல் ஒரே வருடத்தில் உலகில் 150.06 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதில் சாம்சங் முதலிடத்தில் இருக்கிறது. 2018 டிசம்பர் கணக்குப் படி சாம்சங் தான் 19.45% ஸ்மார்ட்ஃபோன் சந்தையை கையைல் வைத்திருக்கிறது.
கடந்த 2018-ல் சாம்சங் நிறுவனம் மட்டும் சுமார் 29.18 கோடி ஸ்மார்ட்போன்களை உலகம் முழுக்க விற்று இருக்கிறார்கள்.
சாம்சங்கைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும், சீனாவின் ஹூவாய் (Huawei)நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆப்பிள் 2018-ல் 20.63 கோடி ஸ்மார்ட்போன்களையும், ஹூவாய் நிறுவனம் 20.52 கோடி ஸ்மார்ட்போன்களையும் விற்று இருக்கிறார்கள்.
நாங்கள் தான்
ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் "சாம்சங் நிறுவனம் தான் கடந்த 10 ஆண்டு காலமாக உலக ஸ்மார்ட்ஃபோன் சந்தைகளின் முன் வரிசையில் இருக்கிறது. இந்த தலைமை அடுத்த 10 வருடங்களுக்கும் இருக்கும்" என அசால்டாகச் சொல்லி இருக்கிறார் சாம்சங் நிறுவனத்தின் சி இ ஓ டிஜி கொஹ் (DJ Koh).எங்கள் சாம்சங் நிறுவனம் புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் புதிய ரக மொபைல் போன்கள் மூலமாக எங்களின் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வோம் எனவும் சொல்லி இருக்கிறார்.
அடுத்த 10 வருடம்
சமீபத்தில் தான் ஹூவாய் நிறுவனத்தின் வியாபாரப் பிரிவின் தலைவர் ரிச்சர்ட் யூ (Richard Yu) "சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, உலக ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடிப்பது தான் எங்கள் இலக்கு" எனச் சொன்னார். தற்போது ஹூவாய் நிறுவனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது சாம்சங் நிறுவனத்தின் பதில்.
பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்கள்
எப்போதுமே எலைட் பிரிவினருக்கு அதிக கவனம் கொடுத்து ஸ்மார்ட்ஃபோன்களை களம் இறக்கிக் கொண்டிருந்த சாம்சங் தற்போது நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரீதியிலான பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களை களம் இறக்கத் தொடங்கி இருக்கிறது. தற்போது சராசரி விலை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்கள் பிரிவில் சியாமி, ஒப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய சீரிஸ்
2018 ஒரு வருடத்தில் மட்டும் சாம்சங் இந்த நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் விலை ஸ்மார்ட்ஃபோன்களில் 7 புதிய மாடல்களை களம் இறக்கி இருக்கிறது. அதற்கு Galaxy M series எனப் பெயரிட்டு இருக்கிறது. அதற்கு தகுந்தாற் போல இந்தியாவிலும் பெரிய அளவில் முதலீடு செய்து சாம்சங் நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவி இருக்கிறது.