டெல்லி: தேசிய நுகர்வோர் பிரச்னை மற்றும் குறைகள் தீர்க்கும் ஆணையம் (National Consumer Disputes Redressal Commission)ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் இருவருக்கு ஏர் இந்தியா இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
பனிப்ரத்தா பொத்தார் (Banibrata poddar) மற்றும் அவரின் மனைவி இருவருமே ஜனவரி 10, 2014 அன்று கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணச் சீட்டை பதிவுச் செய்திருக்கிறார்கள்.
அதோடு வேறு ஒரு தனியார் விமான சேவை நிறுவனத்தில் பனிப்ரத்தாவும் அவரின் மனைவியும் டெல்லியில் இருந்து நியூயார்க் நகரத்துக்குக்குச் செல்ல தனியாக விமானப் பயணச் சீட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
விமானம் தாமதம்
பயணம் மேற்கொள்ள வேண்டிய நாளில் கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த பின் தான் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் தாமதமாகப் புறப்படும் என்கிற விஷயம் தெரிய வருகிறது. அதன் பின் ஏர் இந்தியா நிர்வாகத்தின் பலரிடமும் விரைவாக டெல்லிக்குச் செல்லும் விமானங்களில் இருக்கை ஒதுக்கீடு செய்ய கேட்டிருக்கிறார். ஆனால் கொடுக்கவில்லை.
3 மணி நேரம்
ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு சென்று சேர வேண்டிய நேரத்தை விட மூன்று மணி நேரம் தாமதமாகச் சென்று சேர்ந்திருக்கிறது. அதன் பின்னும் ஏர் இந்தியா நிறுவனம் பனிப்ரத்தாவை நியூ யார்க்குக்கு அனுப்ப எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை.
ஏர் இந்தியாவால்
ஏர் இந்தியாவின் தாமதத்தால் தான், தன் நியூயார்க் விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியவில்லை என வழக்கு தொடுத்தார் பனிப்ரதா. அதோடு நான்கு நாட்கள் டெல்லியிலேயே தங்கி, சாப்பிட்டு, பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு அதன் பின் டெல்லியில் இருந்து நியூயார்க்குக்கு மீண்டும் விமானப் பயணம் மேற்கொண்டார்.
நஷ்ட ஈடு
எனவே தன் டெல்லி முதல் நியுயார்க் வரையான பயணச் சீட்டுச் கட்டணம், நான்கு நாட்கள் டெல்லியில் தங்குவதற்கு மற்றும் உணவு உண்டதற்கான செலவுகள், புதிதாக டெல்லியில் இருந்து நியுயார்க் செல்ல செலவழித்த பயணச் சீட்டுச் செலவுகள் அனைத்தையும் திரும்ப கொடுக்குமாறு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
தள்ளுபடி
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதன் பிறகு மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றார். மாநில நுகர்வோர் நீதிமன்றம் தான் பனிப்ரத்தோவுக்கும், அவர் மனைவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் எனத் தீர்பளித்தது. ஏர் இந்தியா நிறுவனம் தேசிய நுகர்வோர் நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்தது. ஆனால் தேசிய நுகர்வோர் நீதிமன்றம் பனிப்ரத்தோவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்க வேண்டிய 2 லட்சம் ரூபாயை வட்டியோடு வழங்க வேண்டும் என நஷ்ட ஈட்டுத் தொகையை உறுதி செய்தது.