ஈரோடு : நடப்பு ஆண்டில் மஞ்சளின் தேவை அதிகரித்து காணப்படுவதால் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதேசமயம் புதிதாக பல ஆர்டர்களை பெற்றுள்ளதாக வர்த்தகர்களும் கூறியுள்ளனர். இதனால் மஞ்சள் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. அதோடு வரும் வாரங்களிலும் மஞ்சள் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
இதனால் நடப்பு ஆண்டில் மஞ்சள் விளைச்சல் கடந்த 2018 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தாலும் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மஞ்சள் சந்தையை பொருத்த அளவில் இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர். அதிலும் ஈரோடு மஞ்சள் என்றாலே அப்படியொரு தரம். இதனாலேயே மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது ஈரோடு.
மஞ்சள் வணிகர்கள் தற்போது தங்களுக்கு தேவை அதிகரிப்பின் காரணமாக நிறைய ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன என்றும், இதானல் வரும் வாரங்களில் மஞ்சள் விலை அதிகரிக்க கூடும் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக ஈரோடு மஞ்சள் மண்டியில் உள்ள வர்த்தகர்கள் தங்களுக்கு புதிய புதிய பல ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்றும், இதனால் தாங்கள் அதிகளவில் மஞ்சளை வாங்கி வருவதாகவும் கூறியுள்ளனர்.
தரமான மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது
மேலும் மிக தரமான மஞ்சள்கள் வரத்து அதிகரித்திருப்பதாகவும், இதனை சற்று விலை அதிகம் கொடுத்து வாங்கி வருவதாகவும் கூறியுள்ளனர். இது கடந்த வாரத்தில் இருந்ததை விட சற்று அதிகரித்துள்ளதாகவும், அதுவும் வரும் வாரங்களில் குவிண்டாலுக்கு 50 முதல் 60 ரூபாய் வரை அதிகமாக வர்த்தகமாகலாம் என்றும் கூறியுள்ளது. அதேசமயம் இதன் எதிரொலி உள்ளூர் வர்த்தகத்திலும் காணப்படுகிறது, இதனால் அங்கும் விலை அதிகரித்தே காணப்படுகிறது என்றும் ஈரோடு மஞ்சள் வணிகத்தின் தலைவர் ரவிசங்கர் கூறியுள்ளார்.
இன்னும் மஞ்சள் விலை அதிகரிக்கலாம்
இதோடு கடந்த வியாழக்கிழமையன்று 4500 பைகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், இதில் 75 சதவிகிதம் மஞ்சள் அதிக விலைக்கு வர்த்தகமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் வியாபாரிகள் வரும் வாரங்களில் இன்னும் ஆர்டர்கள் கிடைத்தால் அதற்கேற்றவாறு விலையை அதிகரித்து வாங்குவார்கள் என்றும், இன்னும் நிறைய மஞ்சள் பைகளை வாங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
குவிண்டாலுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளது
ஈரோட்டில் முந்தைய நாள் விலையுடன் ஒப்பிடும் போது விரலி மஞ்சளின் விலை குவிண்டாலுக்கு ரூ.300 வரை அதிகரித்துள்ளதாகவும் ஈரோடு டர்மெரிக் மெர்சன்ட்ஸ் அஸோசியேசன் தெரிவித்துள்ளது. அதேசமயம் மற்ற மஞ்சள் வகைகள் குவிண்டாலுக்கு ரூ.250 வரை அதிகரித்தே வர்த்தகமானது என்றும் கூறியுள்ளனர்.
மற்ற சந்தைகளில் விலையேற்றம் இல்லை
இந்த விலையேற்றம் மற்ற சந்தைகளில் இல்லை என்றாலும் விற்பனை மட்டும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் வரும் வாரங்களில் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாக சேலம் உள்ளிட்ட பல யார்டுகளில் கூட இந்த விலை ஏற்றம் இல்லை என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.
ஈரோடு மஞ்சளில் கர்குமின் அதிகம் உள்ளது
மற்ற சந்தைகளில் மட்டும் விலை உயராமல் ஈரோட்டில் மட்டும் விலை அதிகரிக்க காரணம் என்ன என்று கேட்டபோது, அந்த பகுதி வியாபாரிகள் கூறியதாவது, உலகின் மற்ற பகுதி மஞ்சளைவிட ஈரோடு மஞ்சளில் ''கர்குமின்'' என்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35 - 40 லட்சம் மூட்டைகளாகும். இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சம் மூட்டைகளை உற்பத்தி செய்கிறது. இதில் பெரும்பாலும் ஈரோடு சுற்றுவட்டாரங்களில் உற்பத்தி செய்யப்படுபவையே என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.