மும்பை: ஜெட் ஏர்வேஸின் போதாத காலம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று (ஏப்ரல் 11, 2019) கிழக்கு இந்தியாவில் இருந்தும், இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில் இருந்தும் பறக்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்கவில்லையாம். இனி பற்க்கப் போவதில்லையாம்.
அதாவது இனி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் கொல்கத்தா, பாட்னா, கெளவுஹாத்தி போன்ற இந்தியாவின் கிழக்கு மற்றும் வட கிழக்கு இந்திய நகரங்களுக்கு செல்லவோ, அந்த நகரங்களில் இருந்து மற்ற நகரங்களுக்கோ ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் பயணிக்கஒவோ முடியாது.
அதோடு நேற்று சில சர்வதேச வழித் தடங்களில் பறக்க வேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானங்களும் பறக்கவில்லையாம். ஏன் பறக்கவில்லை..? என்ன காரணம்..? என விசாரித்தால் வழக்கமான காரணங்கள் தானாம்.
குத்தகை பாக்கி
வழக்கம் போல விமானங்களுக்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தொகைகளைச் செலுத்தாததால் தரை இறக்கப்பட்டிருக்கிறதாம். கடந்த வார நிலவரப்படி ஜெட் ஏர்வேஸில் பறந்து கொண்டிருந்த 24 விமானங்களில் 10 விமானங்கள் நேற்று தரை இறக்கப்பட்டிருக்கிறது.
பயண ரத்து
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏப்ரல் 12, 2019 அன்று மும்பையில் இருந்து லண்டன் நகருக்கு இயக்க வேண்டிய விமானம், டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டேமுக்கு இயக்க வேண்டிய விமானம், பெங்களுரூவில் இருந்து பாரிஸ் நகரத்துக்கு இயக்க வேண்டிய விமானங்கள் அனைத்தையும் ரத்து செய்திருக்கிறார்களாம்.
14 விமானம்
ஆக தற்போதைய நிலவரப்படி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் மொத்தமே 14 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமான சேவை நிறுவனமாக 123 விமானங்களை பல்வேறு வழிதடங்களில் இயக்கிக் கொண்டிருந்தது. இப்போது அதே ஜெட் ஏர்வேஸ் தான் வெறும் 14 விமானங்களை இந்தியாவில் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
3500 கோடி ரூபாய் பயணக் கட்டணம்
இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மற்றொரு பிரச்னையும் கண் முன் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அது விமான பயணிகளுக்கான பேமெண்ட் பாக்கி. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட விமானங்களை ரத்து செய்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை ரத்து செய்ததற்காக விமானப் பயணிகள் செலுத்திய அவர்களின் பயணக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டுமே அந்த பாக்கி தான். இப்படி ரத்து செய்யப்பட்ட விமானப் பயணங்களின் பயணிகளுக்கு மட்டும் சுமார் 3,500 கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம்.
சர்வதேச வழித் தடங்களில்
இந்தியாவில் ஒரு விமான நிறுவனம் 20 விமானங்களுக்கு மேல் பறந்து கொண்டிருந்தால் தான் சர்வதேச வழித் தடங்களில் விமானங்களை இயக்க முடியும். இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு மொத்தமாக இயங்கும் விமானங்களின் எண்ணிக்கை 14. எனவே இனி ஜெட் ஏர்வேஸ் வெளிநாடுகளுக்கு பறக்க முடியுமா முடியாதா என மத்திய அரசின் விமானப் பயணிகள் இயக்குநரகம் (Director General of Civil Aviation) தீர்மானிக்குமாம்.