டெல்லி : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு கடன் பிரச்சனைகளால் தவித்து வரும் நிலை அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதேசமயம் தற்போது ஜெட் ஏர்வேஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனுக்காக அந்த வங்கியின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் தன் வசம் இருந்த 26% சதவிகிதம் பங்குகளை அடமானமாகக் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமையைக் குறைக்க அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவை அனைத்துமே இறுதியில் தோல்வியில் தான் முடிகின்றன. இருப்பினும் இதன் அடுத்த கட்ட முயற்சியாக ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், அந்த நிறுவனத்தின் அதிக பங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பங்குதாரரும்மான நரேஷ் கோயல் தன்னிடம் உள்ள பங்குகளில் 26% அடமானமாகக் கொடுத்துள்ளார். இதில் மொத்தம் 2.95 கோடி பங்குகள் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன.
நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்கள் பதவிகளிலிருந்து வெளியேறிய இந்த நிலையில், அவர்களிடம் இருக்கும் 51 சதவிகித பங்குகளில் 26 சதவிகித பங்குகளைக் கடனுக்கு ஈடாக பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் கொடுத்துள்ளனர். மேலும் அதே நாளில் அவர்களிடமிருந்து 5.79 கோடி அளவிலான பங்குகள் பெறப்பட்டுள்ளனவாம். இந்த பங்குகள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிற கடனுக்கான அடமானமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சரக்கு போயிங் 777-300 ER ரக விமானம் ஆம்ஸ்டர்டாம் என்ற விமான நிலையத்தில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குத்தகை தொகை நிலுவை காரணமாக இந்த விமானத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த சரக்கு சேவை நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே குத்தகை பாக்கி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் உள்ள மொத்த 123 விமானங்களில் தற்போது 25 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சரக்கு சேவை பணியில் ஈடுபடுத்தப்பட்ட இந்த விமானமும் தரையிறக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தில் பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து ஜெட் ஏர்வேர்ஸ் நிறுவனத்தில் நிகழும் சர்ச்சைக்கு நடுவே இந்த பங்கின் விலை தற்போது 261 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. இது இந்த மார்ச் மாதத்தில் சுமார் 213 வரை கீழிறிங்கி தற்போது 261 என்றும் வர்த்தகமாகி வருவது கவனிக்க தக்க விஷயமே.