டெல்லி: இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 17.44 லட்சம் டன்னுக்கு அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்துக்கான ஆண்டு அக்டோபரில் தொடங்கி செப்டம்பரில் முடிகிறது. இதை மார்க்கெட்டிங் இயர் என்பார்கள்
ஆக இந்தியா கடந்த அக்டோபர் 01, 2018 தொடங்கி ஏப்ரல் 06, 2019 வரையான ஆறு மாத காலங்களில் மட்டும் சர்க்கரை ஏற்றுமதி 17.44 லட்சம் டன்னைத் தொட்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் 01, 2017 முதல் மார்ச் 31, 2018 வரையான ஆறு மாத காலங்களில் மொத்தமே ஐந்து லட்சம் டன் சர்க்கரை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டதாம். அதாவது 2017 - 18 ஏற்றுமதி ஆண்டின் முதல் அரையாண்டை விட 2018 - 19 ஏற்றுமதி ஆண்டின் முதல் அரையாண்டில் சுமார் 350 சதவிகிதம் சர்க்கரை ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது.
ஆர்டர்கள்
இந்தியா ஏற்றுமதி செய்த இந்த 17.44 லட்சம் டன்னில் சுமார் எட்டு லட்சம் டன் Raw sugar (நாட்டுச் சர்க்கரை)-தானாம். இந்த Raw sugar-க்கு இப்போது வரை ஏற்றுமதியாளர்கள் கையில் இன்னும் 4.3 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய வேண்டிய ஆர்டர்கள் இருக்கிறதாம். ஒட்டு மொத்தமாக எல்லா விதமான சர்க்கரை பொருட்களையும் சேர்த்தால் ஏப்ரல் 06, 2019 வரை 27 லட்சம் டன்னுக்கான ஆர்டர்கள் கையில் இருக்கிறதாம். அதில் 21.7 லட்சம் டன்னை ஏற்கனவே ஏற்றுமதி செய்துவிட்டார்கள் எனச் சொல்கிறது அனைத்து இந்தியச் சர்க்கரை வர்த்தகச் சங்கம் ( All India Sugar Trade Association - AISTA).
ஆஸ்திரேலியா, பிரேசில்
தற்போது வரை இந்தியாவின் சர்க்கரை விலைக்கு உலக அளவில் எந்த நாடாலும் போட்டி போட முடியவில்லை. அதனால் இந்தியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம். இந்தியா தன் கரும்பு விவசாயிகள் தொடங்கி சர்க்கரை ஆலைகள் வரை பலருக்கு மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதனால் சர்க்கரை விலை மிகக் குறைவாக சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது. இது செயற்கையாக இந்திய அரசு உருவாக்கி மற்ற நாடுகளின் வியாபாரத்தைக் கெடுப்பதாகச் சொல்லி ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் ஐநாவின் உலக வர்த்தக மையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
பெரிய வாடிக்கையாளர்கள்
வங்கதேசம், இலங்கை, சோமாலியா, ஈரான் ஆகிய நாடுகள் தான் இந்தியாவிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யும் பெரிய வாடிக்கையாளர்கள் எனவும் சொல்கிறது அனைத்து இந்தியச் சர்க்கரை வர்த்தகச் சங்கம் ( All India Sugar Trade Association - AISTA). ஒரு காலத்தில் க்யூபா, அதன் பின் பிரேசில் என உலகின் சர்க்கரைக் கிண்ணமாக இருந்த நாடுகள் எல்லாம் இப்போது இந்தியாவைப் பார்த்து மிரண்டு கிடக்கிறது.
50 லட்சம் டன்
2018 - 19 சந்தை ஆண்டில் (அக்டோபர் 2018 - செப்டம்பர் 2019) மத்திய அரசு சர்க்கரை தயாரிப்பாளர்களுக்கு 50 லட்சம் டன்னை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது. காரணம் இந்தியச் சர்க்கரை உற்பத்தியாளர்கள் கையில் நிறையச் சர்க்கரை தேங்கி நிற்கிறது. எனவே மத்திய அரசும் சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு ஊக்கத் தொகைகளை எல்லாம் கொடுத்து சர்க்கரை ஏற்றுமதியை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு குறையும்
மொத்த இந்தியாவின் சர்க்கரை தேவை 260 லட்சம் டன் தானாம். ஆனால் 2017 - 18 சந்தை ஆண்டில் (Marketing year)-ல் இந்தியா 325 லட்சம் டன்னை உற்பத்தி செய்துவிட்டது. எனவே இந்த 2018 - 19 சந்தை ஆண்டில் (Marketing Year) இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தி 310 லட்சம் டன்னாக குறையும் என அனைத்து இந்தியச் சர்க்கரை வர்த்தகச் சங்கம் ( All India Sugar Trade Association - AISTA) கணித்திருக்கிறார்கள்.