மும்பை: ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த கடனாளிகள் எல்லாம் ஒரு பக்கம் பணத்தை வசூலிக்க திண்டாடுகிறார்கள்.
இன்னோரு பக்கம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானப் பயணங்களை முன் பதிவு செய்த பயணிகள், ரத்து செய்யப்பட்ட விமான பயணங்களுக்கான கட்டணங்களை திரும்ப வாங்க வாடிக்கையாளர்கள் மற்றும் பயணிகள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது இந்த இரண்டுக்கு மேல் இத்தனை நாள் பொறுமையாக இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் தங்களின் சம்பளம் கேட்டு போராட்டத்திலேயே இறங்கிவிட்டார்கள்.
ஊர்வலம்
நேற்று (ஏப்ரல் 12, 2019) மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் ஊர்வலமாக அந்தேரி பகுதியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அலுவலகத்துக்கே சம்பளம் கேட்டு ஊர்வலமாக நடந்திருக்கின்றனர். அதோடு எதிர்காலத்தில் ஜெட் ஏர்வேஸ் என்ன செய்யப் போகிறது..? மீண்டும் ஜெட் ஏர்வேஸை முன்னுக்கு கொண்டு வர என்ன திட்டங்களை வைத்திருக்கிறார்கள் நிர்வாகத்தினர்..? எனவும் ஊழியர்கள் மற்றும் விமானிகள் கேட்டிருக்கிறார்கள்.
ஜெட் ஏர்வேஎஸ் சங்கத் தலைவர்
இந்த ஊர்வலத்தை அனைத்து இந்திய ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் சங்கத் தலைவர் கிரண் பவாஸ்கர் தலைமை ஏற்று நடத்தினார். ஜெட் ஏர்வேஸ் நிறுவன மூத்த அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் பயன் அளிப்பதாக இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு முதலீடாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து பணம் வந்து உடனேயே அனைத்து விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம், பாக்கி இல்லாமல் கொடுக்கப்படும் எனச் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தினர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.
காவல் நிலையத்தில்
இந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க அனைத்திந்திய ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் தலைவர் கிரண் சம்பளப் பிரச்சினை தொடர்பாக சஹர் பகுதி காவல் நிலையத்தில் சம்பளப் பிரச்னை தொடர்பாக முறையாக புகார் கொடுத்திருக்கிறாராம். இந்தப் புகாரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டு இருக்கிறார்களாம்.
14 விமானம்
இரு தினங்களுக்கு முன்பு தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன்னுடைய அனைத்து சர்வதேச விமான பயணங்களையும் ரத்து செய்தது அதோடு இந்தியாவிற்குள்ளேயே வெறும் 14 விமானங்களை மட்டுமே இயக்கி வருகிறது. தற்போது மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க பயணிகள் விமான இயக்குநரகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ்.


Click it and Unblock the Notifications