மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் பைலட்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து பைலட்கள் வேலை நிறுத்தத்தை வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஆனால் தற்போது அதிலும் சமரசம் இல்லாத நிலையில் தற்போது நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், விமானத்தை இயக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை சம்பள பாக்கியும் தரப்படாததை அடுத்து, மீண்டும் நாளை முதல் பைலட்கள் விமானத்தை ஓட்ட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். பைலட்கள் மட்டும் இன்றி இன் ஜினியர்கள் மற்ற ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அற்வித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் தேசிய உள்நாட்டு விமானகளின் குழுவிற்கும் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்பு சுமார் 1100 பைலட்டுகள் நாளை (ஏப்ரல் 15) மீண்டும் ஸ்டிரைக் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே பைலட்கள் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டுதான் ஜெட் ஏர்வேஸ் விமானங்களை இயக்கி வந்தனர். இந்த நிலையில் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட்டால் விமானங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நஷ்டம் காரணமாக சரியான நேரத்தில் சம்பளம் இல்லை
தொடர் நஷ்டம், வங்கி கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே ஊழியர்களுக்குச் சரியான நேரத்தில் சம்பளத்தை அளிக்க முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வரை மட்டுமே ஊழியர்கள் முழு சம்பளத்தையும் வாங்கியிருந்தனர். அதேசமயம் டிசம்பர் மாதத்தில் 12.5 சதவிகித சம்பளத்தை மட்டுமே பெற்றிருந்தனர்.
வங்கிக்கு கொடுத்துவிட்டு எங்களை மறந்து விட்டார்கள்
வங்கிகளில் பெற்ற கடனுக்காக நிறுவனத்தின் பங்குகளை கொடுக்க ஒப்புக்கொண்ட ஜெட் ஏர்வேஸ், எஸ்பிஐ வங்கி கடனுக்கு பொறுப்பாக ஜெட் ஏர்வேஸ் பங்குகளை கொடுக்க முன்வந்தது. தற்போது அதை எஸ்.பி.ஐ வங்கி அதை ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் பின்னராவது ஊழியர்களின் சம்பள பிரச்சனைக்கு முடிவு வரும் என நினைத்து இருந்தோம். ஆனால் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் கடன் தாரர்களுக்கு அளித்த முக்கியத்தை ஊழியர்களுக்கு தரவில்லை. ஆக நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே கூறியது தான் இப்பொழுதும்
ஏற்கனவே ஏப்ரல் 1 முதல் விமானங்கள் பறக்காது பொறியாளர்கள் மற்றும் பைலட்களின் நிலுவை சம்பளம் அனைத்தையும் செலுத்தும் அளவிற்கு போதிய நிதி வசதி இல்லாததால் டிசம்பர் மாத நிலுவை சம்பளத்தை மட்டுமே வழங்கமுடியும் என்று குண்டை தூக்கிப்போட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவை பாக்கி அனைத்தையும் வழங்காவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஏப்ரல் -15 முதல் ஸ்டிரைக்
ஆனால் ஜெட் ஏர்வேஸ் பைலட்களின் தேசிய உள்நாட்டு விமானிகள் குழு(NAG) சம்பளப் பிரச்சனையை சுமூகமாக பேசித் தீர்க்கலாம் என்று கூறி ஜெட் எர்வேஸ் நிர்வாகம் பைலட் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பைலட்கள் தங்களின் டிசம்பர் மாத நிலுவை சம்பளத்தை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். மேலும் பாக்கி உள்ள சம்பளத்தை வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் படிப்படியாக செலுத்திவிடுவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து பைலட்கள் தங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தனர்.
குறிப்பிட்ட தேதிக்குள் செட்டில்மென்ட் ஆகவில்லை
ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் எந்த வித செட்டில்மென்டும் இல்லாததால் ஊழியர்கள் தற்போது நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் குறைந்த பட்ச எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருந்த விமானங்களும் நாளைமுதல் ஓடாது என்ற நிலை நிலவி வருகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் ஸின் மொத்த விமான சேவையும் முடங்கும் அபாயம் உள்ளது.