டெல்லி: மார்ச் 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு (Wholesale Price Inflation) இன்று வெளியானது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக மொத்த பணவீக்கக்குறியீடு அதிகரித்திருக்கிறது. இந்த மார்ச் 2019-ல் மொத்த பணவீக்கக் குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி 2019-ல் மொத்த பணவீக்கக் குறியீடு 2.93 சதவிகிதமாக இருந்தது. கடந்த மார்ச் 2018-ல் (ஒரு வருடம் முன்பு) மொத்த பணவீக்கக் குறியீடு 2.74 சதவிகிதமாக இருந்தது.
மார்ச் 2019-ல் ஒட்டு மொத்த உணவுப் பொருட்களின் பண வீக்கம் 5.68 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதோடு மார்ச் 2019-ல் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கமும் 5.41 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம். கடந்த பிப்ரவரி 2019-ல் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 2.23 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாம்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உனவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக காய்கறிகளின் விலை சகட்டு மேனிக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த பிப்ரபவரி 2019-ல் காய்கறிகளின் விலை 6.82 சதவிகிதம் மட்டுமே அதிகரித்திருந்தது. ஆனால் இந்த மார்ச் 2019-ல் முறை காய்கறிகளின் பணவீக்கம் 28.13 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. காய்கறிகளில் உருளைக்கிழங்கின் விலை மட்டும் 1.3 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். கடந்த பிப்ரவரி 2019-ல் உருளைக் கிழங்கின் விலை 23.4 சதவிகிதம் அதிகரித்திருந்ததாம்.
ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவின் பணவீக்கம் குறைவதை அடிப்படையாக வைத்துக் கொண்டு இரண்டு முறை ரெப்போ ரேட்டை 0.25 சதவிகிதம் குறைத்தது. அதே பணக் கொள்கை முடிவுக் கூட்டத்தில் ஏப்ரல் 2019 முதல் செப்டம்பர் 2019 வரையான ஆறு மாதத்துக்கு இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் 2.9 - 3 சதவிகிதமாக இருக்கும் எனச் சொல்லி இருந்தது. ஆனால் மார்ச் 2019-லேயே சில்லறைப் பணவீக்கம் 2.86 சதவிகிதத்துக்கு உடனடியாக உயர்ந்துவிட்டது. அதற்கு முன் பிப்ரவரி 2019-ல் சில்லறைப் பனவீக்கம் 2.57 சதவிகிதமாக இருந்ததும் நினைவில் கொள்ளவும்.