டெல்லி: கடந்த திங்கட்கிழமை அமலாக்கத் துறை சுஷென் மோகன் குப்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தன் தரப்பு வாதங்கள் முன் வைத்திருக்கிறது.
இந்த சுஷென் மோகன் குப்தா தான் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவின் மிக முக்கிய பிரமூகர்கள் பயணிக்க வாங்கப்பட்ட ஹெலிகாப்டர் ஊழலில் தரகராக இருந்து பலருக்கும் பணத்தை செட்டில் செய்து கொடுத்தவர்.
இந்த வழக்கை 2013-ல் இருந்து இன்று வரை இந்தியாவின் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கை சிறப்பு நீதிபதி அர்விந்த் குமார் விசாரித்து வருகிறார்.
அமலாக்கத் துறை வாதம்
இந்த வழக்கில் ஆஜரான அமலாக்கத் துறை "சுஷென் மோகன் குப்தாவைப் போல தங்கள் மீது வழக்கு அப்திவு செய்யப்பட்டிருக்கும் 36 பேர் வேண்டும் என்றே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஓடிப் போய் இருக்கிறார்கள். அதில் இந்திய ஊழல் புகழ் நீரவ் மோடி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடன் புகழ் விஜய் மல்லையாவும் அடக்கம்" எனச் சொல்லி இருக்கிறார்கள்..
ஜாமீன் வேண்டாம்
அமலாக்கத் துறையின் சிறப்பு வழக்கறிஞர் டி பி சிங் மற்றும் என் கே மட்டா ஆகியோர்களும் சிறப்பு நீதிபதியிடம் தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் சந்தேஸரா, மெகுல் சோக்சி, லலித் மோடி போன்றவர்கள் இந்த சமூகத்தில் பல பெரிய பிரமூகர்களோடு பழக்கம் உள்ளவர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தவர்கள். அவர்களே நாட்டை விடு ஓடிவிட்டார்கள். எனவே இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என வேண்டு கோள் வைத்திருக்கிறார்கள்.
முக்கிய கட்டம்
அமலாக்கத் துறையின் விசாரணை முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. சுஷென் மோகனின் நாட்குறிப்பில் ஆர்ஜி என்கிற எழுத்து யாரைக் குறிக்கிறது என்பதை விசாரித்து வருகிறோம். எனவே சுஷென் மோகன் வெளியில் வந்தால் தனக்கு எதிரான சாட்சியங்களைக் களைத்துவிடுவார் என அமலாக்கத் துறை சார்பாகப் வேண்டு கோள் வைத்து இருக்கிறார்கள்.
ஒத்தி வைப்பு
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி சுஷென் மோகனின் ஜாமீன் மனுவை ஏப்ரல் 20, 2019-க்கு ஒத்திவைத்திருக்கிறார். சுஷென் மோகன் தரப்பில் "அரசு எப்போது சம்மன் கொடுத்தாலும் கடந்த காலங்களில் ஒழுங்காக ஆஜராகி விசாரனைக்கு ஒத்துழைத்திருக்கிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கினால் நான் இந்தியாவை விட்டு ஓடிவிடுவேன் என்பது அர்த்தமற்றது என எதிர் வாதம் செய்திருக்கிறார்கள். அதோடு தன்னிடம் மேற் கொள்ள வேண்டிய விசாரணைகள் அனைத்துன் முடிந்து விட்டது, இப்போதாவது ஜாமீன் கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறார்.