டெல்லி: கடல் நீல கலரில் வெளியிடப்பட்ட புதிய 50 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை செய்துள்ளது. முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துக்கு பதிலாக ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்ததாஸின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்துக்குப் பிறகு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன. அதேபோல, 10, 20 ரூபாய் நோட்டுகளும், சில மாற்றத்துடன் புதிய வடிவில் வெளியிடப்பட்டன.
இதனால் ஓரளவு பணத்தட்டுப்பாடு நீங்கினாலும், 50 மற்றும் 100 போன்ற குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து கடல் நீல நிறத்தில் 50 ரூபாய் நோட்டும் ஊதா நிறத்தில் 100 ரூபாய் நோட்டும் புதிதாக அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது. அந்த நோட்டுக்களில் அப்போதய ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம்பெற்றிருந்தது.
50 ரூபாய் நோட்டின் ஒரு புறத்தில் காந்தி படம் மற்றொரு புறத்தில் மிகப்பழமை வாய்ந்த விஜயநகர பேரரசில் தலைநகராக விளங்கிய ஹம்பி நகரத்து இடிபாடுகளில் இருந்து கண்டறியப்பட்ட விட்டலர் கோவில் கல்ரதம் இடம் பெற்றுள்ளது. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமும் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது 50 ரூபாய் நோட்டுக்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 50 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படாது என்றும், அவை புழக்கத்தில் உள்ளது போலவே , புதிய 50 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புதிய 50 ரூபாய் நோட்டில் பழைய ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துக்கு பதிலாக ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்தி காந்ததாஸின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளது.