மும்பை: "மத்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் லாபகரமான சர்வதேச மற்றும் உள்ளூர் வழித்தடங்களை எடுத்துக்கொண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை சிறப்பாக நடத்தலாம்" என அறிவுரை வழங்கி இருக்கிறது அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்
இப்போது வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கி கொள்ளவோ அல்லது அதில் முதலீடு செய்யவோ எந்த ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்லது விமான சேவை நிறுவனமும் முன்வரவில்லை.
எனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது..? எனவும் அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
8500 கோடி
ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 8,500 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த 8,500 கோடி ரூபாயும் ஏற்கனவே வாராக் கடன்களாக அனைத்து வங்கிகளும் அறிவித்து விட்டன. இத்தனை நெருக்கடியான கடன் உள்ள நிறுவனத்திற்கு மேலும் வங்கிகளில் கடன் கொடுப்பதில் அர்த்தமில்லை என அனைத்து இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
லே ஆஃப்
அதோடு ஏர் இந்தியா நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி, ஒரு பகுதி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களை லே ஆஃப் செய்து பெரும்பகுதி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களைக் காப்பாற்றலாம் எனவும் சொல்லி இருக்கிறது அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்.
51% பங்கு
அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை இப்போது வரை, அதன் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் தான் வைத்திருக்கிறார். ஆனால் நிர்வாகரீதியில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தலைமை ஏற்று நடத்துகிறது. எனவே அந்த நிறுவனத்தை நடத்துவதும் அதை யாருக்காவது விற்றுத் தள்ளுவதும் நரேஷ் கோயலின் தனிப்பட்ட பிரச்சினை. இதில் வங்கிகள் ஏன் தலையிட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
தண்டிக்க வேண்டும்
அதோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த நிதி நெருக்கடிக்கு அவர்களின் தவறான நிர்வாக முடிவுகளும், பிரம்மாண்ட விரிவாக்கங்கள் தான் காரணம். எனவே ஜெட் ஏர்வேஸை முழுமையாக விசாரித்து, இந்த மோசமான நிதி நெருக்கடிக்கும், நிர்வாக தவறு செய்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சொல்லியிருக்கிறது.
கண்டு கொள்ளவில்லை
இதையெல்லாம் விட "இப்போது வரை செய்திகளில் வங்கிகள் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மேலும் கடன் கொடுத்து நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் எனச் சொல்கிறார்கள். ஆனால் யாரும் நரேஷ் கோலைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை. உண்மையாகவே அவர் தான் இந்த மோசமான நிதி நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்" எனவும் காட்டமாக குற்றம்சாட்டி இருக்கிறார்கள் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்.
வரவேற்பு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மேலும் கடன் கொடுக்க வற்புறுத்த முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பளித்தது. அதை பகிரங்கமாக வரவேற்றதும் இதே வங்கி ஊழியர்கள் சங்கமும், இதே வெங்கடாசலமும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications