டெல்லி: தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.50 லட்சம் வரையிலும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், கடன் அட்டை, சிறுவணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பாஜக ஆட்சியின் 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ஆளும் பாஜக சார்பில், வணிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் டெல்லியில் ஏப்ரல் 19ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தினம் ஒரு சட்டம் என்ற ரீதியில் தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்ததோடு இதனால் வர்த்தக நடைமுறைகள் மிக எளிமையானதாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகால போராட்டம்
கூட்டத்தில் பேசிய மோடி கடந்த 5 ஆண்டுகளாக எத்தனையோ இடைஞ்சல்கள், போராட்டங்கள், சவால்களை எதிர்கொண்டு அவற்றை முறியடித்து வெற்றி பெற்றதற்கு வணிகர்களான நீங்கள் அளித்த முழு ஒத்துழைப்பே காரணம் என்றார். உங்களுடைய ஒத்துழைப்பு இல்லை என்றால் என்னால் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது என்று கை கூப்பி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பிணையில்லாத கடன் தருவோம்
நடைபெறும் லோக்சபா தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் வரை எந்தவிதமான பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்தார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சட்டம்
காங்கிரஸ் ஆட்சியின் முறையற்ற சட்டதிட்டங்களால் தான் பணவீக்கம் அதிகரித்தது என்ற உண்மையை திரித்துக்கூறி, பணவீக்கம் அதிகரித்ததற்கு வணிகர்களாகிய நீங்கள் தான் காரணம் என்று நியாயமில்லாத ஒரு பொய்யை சொல்லி வணிகர்களை பாதிக்கக்கூடிய பல கடுமையான சட்டங்களை போட்டு உங்களை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டினார்.
மோடி உறுதி
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இதே போன்று வர்த்தகர்கள் கூட்டத்தில் பேசியதை நினைவு கூர்ந்த மோடி அப்போதே வர்த்தகத்தையும் வர்த்தகர்களையும் பாதிக்கும் அனைத்து சட்டங்களும் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்ததையும் அப்போது மறக்காமல் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக நடைமுறைகள்
பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு தான் தினம் ஒரு சட்டம் என்ற வீதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எதற்கும் உதவாத தேவையற்ற 1500 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, இதன் மூலம் வர்த்தக நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளதையும் நினைவு கூர்ந்தார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டோம்
சில அரசியல் கட்சியினர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தேர்தல் முடிந்த கையோடு மறந்துவிடுவார்கள், ஆனால் பாஜக அப்படி கிடையாது என்றும், எத்தனை இடைஞ்சல்கள் வந்தபோதும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி முடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்கம் விளையும் பூமி
மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக உலக அளவில் வர்த்தகத்திற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறி உள்ளது என்றார். ஒரு காலத்தில் தங்கம் விளையும் பூமியாக இந்தியா அழைக்கப்பட்டதாக கூறிய மோடி, அந்த நிலைக்கு நாட்டை உயர்த்துவதே தமது லட்சியம் என்றார்.
ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவோம்
ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பின்னர் வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி விதிப்பு மேலும் எளிமையாக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார். சில்லரை வர்த்தகத்துக்கு தேசியக் கொள்கை வகுக்கப்படும் என்றும், வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் 50 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும் என்றும் மோடி உறுதி அளித்தார். ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், கடன் அட்டை, சிறுவணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.