டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ வரும் மே 25, 2019 முதல் 6 புதிய விமானங்களை இயக்க இருக்கிறார்களாம்.
அந்த 6 விமானங்களும் டெல்லியில் இருந்து இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்க இருக்கிறதாம். டெல்லி முதல் அலஹபாத் வரைக்கு ஒரு விமானம் இயங்க இருக்கிறதாம். இந்த வழிதடத்தில் இண்டிகோ இயக்கும் முதல் விமானம் இது. டெல்லியில் இருந்து காலை 9.55-க்கு புறப்படும் விமானம் காலை 11.20 மணிக்கு அலஹாபாத்தைச் சென்று சேருமாம். அலஹாபாத்தில் மீண்டும் காலை 11.50 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1.20-க்கு டெல்லிக்கு வந்து சேருமாம்.
இப்படி டெல்லியை இண்டிகோ நிறுவனத்தின் கனெக்டிவ் ஹப்பாக மாற்றத் தான் இத்தனை விமானங்களை டெல்லியில் இருது அலஹாபாத், போபால், பாட்னா என பல்வேறு இந்திய நகரங்களுக்கு விமானம் விட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்திய விமானப் பயணிகளை அதிகம் தன் கைவசம் வைத்திருக்கும் நிறுவனமாக இண்டிகோ அதே முதலிடத்தில் இருக்கிறது. மார்ச் 2019-ல் இண்டிகோ நிறுவனம் 54 லட்சம் விமான பயணிகளுக்கு தன் சேவையை வழங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த விமானப் பயணிகள் சந்தையில் இது 46.9 சதவிகிதம். மார்ச் 2019-ல் இரண்டாவது இடத்தில் ஸ்பைஸ் ஜெட் 15.7 லட்சம் பேருக்கு தன் சேவையை வழங்கி 13.6 சதவிகித விமானப் பயணிகள் சந்தையை தன் கைவசம் வைத்திருக்கிறது.
பயணிகள் விமான சேவை இயக்குநரகம் (Director General of Civil Aviation), மார்ச் 2019-ல் விமானங்களில் பயணம் மேற் கொண்ட பயணிகளின் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் 11 உள் நாட்டு விமான சேவை நிறுவனங்களின் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தரவுகளைத் தயார் செய்திருக்கிறார்களாம். மார்ச் 2019-ல் 11.59 மில்லியன் பயணிகள் விமானங்களில் தங்கள் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். கடந்த மார்ச் 2018-ல் 11.58 மில்லியன் பயணிகள் விமானங்களில் பயணம் செய்திருக்கிறார்களாம்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு இரட்டை இலக்கச் சதவிகிதங்களில் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் முதல்முறையாக கடந்த ஜனவரி 2019-ல் விமானப் பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி ஒற்றை இலக்க சதவிகிதங்களில் உயரத் தொடங்கியது.