உலகில் 20-ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து உலகின் மிகப் பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சக்தி என்றால் அது கச்சா எண்ணெய் தான். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பெரியண்ணன்கள் தவிர, கச்சா எண்ணெய் வைத்திருப்பவனும் தாதா லிஸ்டில் வளம் வர முடியும் என்கிற அந்தஸ்தைக் கொடுத்த பரம் பொருள் இந்த கறுப்பு கச்சா எண்ணெய் தான்.
இதற்கு 1973 - Energy Crisis ஒரு அருமையான சான்று. நேரம் கிடைத்தால் கூகுள் ஆண்டவரிடம் கேளுங்கள், நிறையச் சொல்வார். சுருக்கமாக 1973-ம் ஆண்டில் அரபு நாடுகளுக்கும், இஸ்ரேல்-க்கும் (யூதர்களுக்கும்) இடையில் ஒரு 6 நாள் போர் நடந்தது. இதை யோம் கிபார் அல்லது அக்டோபர் யுத்தம் என்கிறர்கள் வரலாற்றாசிரியர்கள்.
நடந்த போரில் ரஷ்யா தவிர பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். போரில் தோல்வியுற்ற அரபு நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து Organization Of Arab Petroleum Exporting Countries (OAPEC) அமைப்பு வழியாக எந்த வளர்ந்த நாட்டுக்கும், குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கும், கச்சா எண்ணெய் சப்ளை செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
உறைந்துவிட்டார்கள்
1950 - 60-களில் தான் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேலை நாடுகளை தங்களை ஒரு தொழில் வளமிக்க நாடாக கட்டமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் தேவை டன் கணக்கில் அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தடை என்றால் தாங்க முடியாது என்றார்கள். உலகின் பல நாடுகளில் தங்கள் காலனி சாம்ராஜ்யங்களை அமைத்து ஆட்சி செய்த இங்கிலாந்து, பிரான்ஸ் அரசுகளே அரபிக்களுக்கு சலாம் போட்டன. அதன் பின் தான் எண்ணெய் சப்ளையானது.
இந்தியா மட்டும் எப்படி
1950 - 60-களில் இங்கிலாந்தும் பிரான்ஸும் எப்படி தங்களை தொழில் வளம் மிக்க நாடாக மாற்றிக் கொண்டதோ, அதே போல இன்று இந்தியாவும், சீனாவும் அப்படி ஒரு வேகத்தில் இருக்கிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கு மேல் இறக்குமதி தான் செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2016 - 17-ல் 214 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தோம், 2017 - 18-ல் 220 மில்லியன் டன், 2018 - 19-ல் சுமாராக 224 மில்லியன் டன் செய்திருக்கிறோம்.
உலகின் மூன்றாவது நாடு
2016 - 17 நிதி ஆண்டில் 103 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்தொம், அடுத்த 2017 - 18 நிதி ஆண்டில் 130 பில்லியன் டாலருக்கு, 2018 - 19 நிதி ஆண்டில் 140.47 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறோம். உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தொழில் வளர்ச்சி
ஒரு நாட்டில் தொழில் பெருக தொழிற்சாலைகள் தேவை. தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகளுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரம் தேவை. உற்பத்தி செய்த பொருட்களை விற்கும் இடத்துக்கு கொண்டு செல்ல போக்குவரத்து வசதி தேவை. அதற்கு பெட்ரோல் தேவை. தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஆலைப் பணியாளர்கள் வேலைக்கு வரப் போக போக்குவரத்து வசதியும், அதற்கு பெட்ரோலும் தேவை. ஆக எண்ணெய் இன்றி அமையாது உலகு. இன்று சுவாசிக்கும் ஏசி காற்றுக்குத் தேவையான மின்சாரம் தொடங்கி, குடிக்கப் பயன்படுத்தும் நீர், சமையல் எண்ணெய், போக்குவரத்து என எல்லாவற்றுக்குமே கச்சா எண்ணெய் தான் ஆதாரம்.
எவ்வளவு வாங்குகிறோம்
இந்தியாவு இறக்குமதி செய்யும் மொத்த கச்சா எண்ணெய்யில் சுமார் 20% சவுதி அரேபியா உடையது. அதற்கடுத்து ஈராக் மற்றும் ஈரான் நாடுகளிடம் தான் அதிக கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம். ஈரானிடம் இருந்து மட்டும் 11.3% கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம். இது தான் பிரச்னையே. திடீரென இந்தியா ஒரு நாட்டிடம் இருந்து வாங்கும் தன் 11% கச்சா எண்ணெய்யை நிறுத்திக் கொள்ளச் சொன்னால் எப்படி..?
ஈரான் ஏன்..?
1. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யைக் கொண்டு வரும் போக்குவரத்துச் செலவுகள் ஈரானிடம் வாங்கினால் பெரிய அளவில் மிச்சமாகும்.
2. பணத்தை கொடுப்பதற்கான காலம் அதிகம். எல்லோரும் 45 நாளில் பணம் கேட்டால் ஈரான் 60 நாட்கள் வரை காலக் கெடு கொடுக்கிறது.
3. ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை இருப்பதால், டாலரில் பேமெண்ட் கொடுக்க வேண்டாம். இந்திய ரூபாயிலேயே கொடுக்கலாம். அதோடு இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் அதிகமாகும். இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால் தான் இந்தியா தொடர்ந்து ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கிறது. இனியும் வாங்கத் துடிக்கிறது.
யார் எல்லாம் வாங்கினார்கள்
ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடம் சீனாவுக்கு, இரண்டாம் இடம் இந்தியாவுக்கு. 2018 - 19 நிதி ஆண்டில் மட்டும் 2.4 கோடி டன் (24 மில்லியன் டன்) கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்து மட்டும் இறக்குமதி செய்திருக்கிறோம். இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மட்டும் 9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்து 2018 - 19 நிதி ஆண்டில் இறக்குமதி செய்திருக்கிறார்கள். இவர்களோடு மங்களூரூ எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என இன்னும் பல பெரிய அரசு நிறுவனங்களும் ஈரானின் வாடிக்கையாளர்கள் தான்.
அந்தத் தடை
கடந்த நவம்பர் 04, 2018 அன்று ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. அப்போது சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தைவான், துருக்கி என 8 நாடுகளும் ஈரானிடம் எண்ணெய் வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எடுத்துச் சொன்னார்கள். அதன் பின் மே 02, 2019 வரை ஈரானிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என ஒரு விலக்கு காலத்தைக் கொடுத்தது அமெரிக்கா. இதில் கிரீஸ், இத்தாலி, தைவான் போன்ற நாடுகள் ஈரானுடனான வியாபாரத்துக்கு நோ சொல்லிவிட்டது. இப்போது சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், துருக்கி ஆகிய ஐந்து நாடுகளும், மீண்டும் இன்னொரு ஆறு மாதங்களுக்காவது பொருளாதார தடை விலக்கு கொடுக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க தரப்பு
இனியும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க எந்த நாட்டுக்கும் அனுமதி கிடையாது எனச் சொல்லி விட்டது அமெரிக்கா. இது தொடர்பான அறிவிப்புகளை அமெரிக்க உள் துறைச் செயலர் (அமெரிக்காவின் உள் துறை அமைச்சர்) மைக் பாம்பியோ அறிவிப்பார் எனவும் சொல்லிவிட்டார்.
பேச்சு வார்த்தை நடத்துவோம்
இந்தியாவோ இன்னமும் ஈரான் எண்ணெய்யை பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கிறதாம். ட்ரம்ப் சொன்னவைகளை எல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல், மீண்டும் அமெரிக்க அரசுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடப் போவதாகச் சொல்கிறார்கள் சில அரசுத் துறை அதிகாரிகள். பேச்சு வார்த்தை எல்லாம் ஒரு பக்கம் போகட்டும், அப்படி இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்கக் கூடாது எனச் சொன்னால், என்ன மாதிரியான பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும்...? பட்டியல் இதொ..!
கச்சா எண்ணெய் விலை
உலகில் கச்சா எண்ணெய்த் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் இங்கு ஒரு நாடு உற்பத்தி செய்வதையே வாங்கக் கூடாது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இதனால் ஈரான், வெனிசுலா தவிர மற்ற நாடுகளிடம் மட்டுமே கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆள் ஆவோம். ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த டிசம்பர் 2018-ல் சுமார் 50 டாலராக இருந்த ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்னெய் தற்போது அதே ஒரு பேரல் விலை 74 டாலராக வியாபாரமாகி வருகிறது. மேலும் ஈரானை விலக்கினால் செயற்கையாக விலை அதிகரிக்கத் தொடங்கும். ஒரு கட்டத்தில் தன் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலர் கூட தொடலாம்.
பெட்ரொல் டீசல் விலை ஏறும்
ஏற்கனவே இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவின் பணவீக்கம் உடனடியாக உயரும் எனக் கணித்திருக்கிறது ஆர்பிஐ. இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அதை அதிக விலை கொடுத்து இந்திய எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் வாங்கும். அந்த விலையை, மக்கள் மீது தான் திணிக்கும். இதனால் அன்றாடச் செலவுகளான காய்கறி, பழங்கள், அரிசி, பருப்பு போன்ற விவசாயப் பொருட்களின் விலை உடனடியாக உயரும். அதன் பின் ஒவ்வொன்றாக பால், பேருந்து கட்டணம், விமானப் பயணச் செலவுகள் என எல்லாமே விலை உயர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே துண்டாடிவிடும். அந்த சக்தி இந்த கச்சா எண்ணெய்க்கும், கச்சா எண்ணெய்யால் உயரும் பணவீக்கத்துக்கும் உண்டு.
அமெரிக்க டாலர்
எல்லா சர்வதேச வர்த்தகங்களும் டாலரில் தான் நடைபெறுகின்றன. எனவே கச்சா எண்ணெய்யை ஈரானிடம் வாங்காமல், அதிக விலை கொடுத்து, வேறு நாடுகளிடம் இருந்து (அதுவும் டாலரில்) வாங்க வேண்டும். அதுவும் இந்தியாவின் கையில் இருக்கும் அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து கொடுக்க வேண்டும். மீண்டும் அந்நிய செலாவணியைக் கொண்டு வர அதிக ரூபாய் கொடுத்து டாலரை வாங்க வேண்டும்.
அதாவது இந்தியாவுக்கு அமெரிக்க டாலர் அதிக அளவில் தேவை இல்லை என்றால், USD VS INR-ல் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69, 68 ,67, 66 என வலுவடைந்து கொண்டே போகும். இதுவே இந்தியாவுக்கு அதிகமாக அமெரிக்க டாலரின் தேவை இருந்தால் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69, 70, 71... என உயர்ந்து கொண்டே போகும்.
கடந்த கால வரலாறு
2018-ல் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் செய்தி வந்த உடனேயே சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது. ஜூன் 2018-ல் சுமார் 67 - 68 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு, உச்சகட்டமாக அக்டோபர் 2018-ல் 74.38 ரூபாய்க்கு அதிகரித்தது. அதே அக்டோபர் 2018-ல் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 86 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது.
சவால்கள் பட்டியல்
ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை தன் பழைய 86 டாலரைத் தொட்டால் மீண்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயைத் தொடலாம். தொட்டால் கச்சா எண்ணெய்யால் பணவீக்கம் (Inflation), இந்திய ரூபாய் மதிப்பு சரிவு (INR Currency Depreciation), அதிகரிக்கும் இறக்குமதி (Increase in Import), அதிக இறக்குமதியால் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை (Increasing Trade Deficit) என வரிசையாக இந்தியப் பொருளாதாரம் மேலும் நிறைய வலிகளை அனுபவிக்கும்.
ஏற்கனவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதை ஆர்பிஐ, பன்னாட்டு நிதியம் சுட்டிக் காட்டுகின்றன. வாகன விற்பனை சரிந்து கொண்டே வருகிறது, தொழில் பெருகாமல் இருக்கிறது, மின்சாரத் தேவை குறைந்து கொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. இப்படி ஏற்கனவே தேக்கத்தில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை இந்த கச்சா எண்ணெய் பிரச்னை வேறு பாதித்தால் அடி கொஞ்சம் பலமாகத் தான் இருக்கும்.