டெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்பு சுமார் 3 லட்சம் கோடியாக உள்ளது என்றும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதமாக உள்ளது என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கிய நிதிக் கொள்கை குறித்து முடிவெடுக்கும் ரிசர்வ் வங்கி தனது தேவைக்கு அதிகமாக உபரி கையிருப்பு வைத்திருந்தாலும் வேறு சிலரோ ரிசர்வ் வங்கி தேவைக்கும் குறைவாகவே ரொக்க கையிருப்பு வைத்திருப்பதாக திரித்துக் கூறுவதாகவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு தொகையில் மத்திய அரசு பட்ஜெட் திட்டங்களுக்கு செலவழிக்க கேட்கும்போது அதில் இருந்து எடுத்துக்கொடுப்பது வழக்கமாகும்.
மத்திய ரிசர்வ் வங்கி
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் மேம்படுத்துவதற்கும், மத்திய அரசுகள் பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கும் உதவிகரமாக இருப்பது அந்தந்த நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் தான்.
பெட்டிக்கடையா என்ன
மத்திய ரிசர்வ் வங்கிகள் இல்லை என்றாலோ அல்லது மத்திய வங்கிகள் ஆளும் அரசுகளின் கைப்பாவையாக இருந்துகொண்டு ஆட்சியாளர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, அவர்கள் கேட்கும்போதெல்லாம் மத்திய வங்கியின் இருப்பில் உள்ள பணத்தை எடுத்து செலவழித்தாலோ, அந்த வங்கி தெரு முனையில் உள்ள பெட்டிக்கடையைப் போல் ஆகிவிடும்.
பொருளாதார வளர்ச்சி
மத்திய வங்கியின் இருப்பில் உள்ள பணத்தை எடுத்து இஷ்டம் போல் செலவழித்தால் அந்த நாடும், நாட்டின் பொருளாதாரமும் அதளபாதாளத்திற்கு சென்றுவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த அடிப்படை உண்மையை உதாசீனப்படுத்திய பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.
பேஸ்மென்ட் ஸ்ட்ராங்
உலக அளவில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டு இருந்தபோது, இந்தியா மட்டும் எந்த பொருளாதார அச்சுறுத்தல்களுக்கும் அசைந்து கொடுக்காமல், ஓங்கி வளர்ந்த பனைமரம் போல் அஸ்திவாரம் பலமாக இருக்க காரணமே, இந்திய ரிசர்வ் வங்கியின் தனிப்பட்ட நிதிக் கொள்கை முடிவுகள் தான்.
தலையீடு கிடையாது
நம் நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி இந்த விசயத்தில் படு புத்திசாலித்தனமாகவே உள்ளது எனலாம். ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து எத்தனையோ ஆட்சியாளர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை விசயத்தில் பெரிதாக தலையிடுவது கிடையாது. அதற்கு காரணம் ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். ரிசர்வ் வங்கியின் விசயத்தில் தலையிட்டால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணும் என்பது.
உபரி கையிருப்பு 3 லட்சம் கோடி
மத்தியில் ஆளும் அரசுகள் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை விசயத்தில் தலையிடாமல் இருப்பதால் தான் ரிசர் வங்கியின் உபரி கையிருப்பு 3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தேவையான பணத்திற்கு திண்டாடும்போது மட்டுமே ரிசர்வ் வங்கி மனம் இரங்கி உபரி கையிருப்பில் இருந்து சிறிதளவு தொகையை வழங்கும்.
இந்த ஆண்டில் 68000 கோடி
நம் நாட்டின் ரிசர்வ் வங்கி எப்போதுமே மற்ற நாடுகளைக் காட்டிலும் கூடுதலாகவே உபரி கையிருப்பு வைத்திருப்பது வழக்கமாகும். மத்திய அரசு பட்ஜெட் திட்டங்களை நிறைவேற்ற பணம் இல்லாமல் திண்டாடும்போது மத்திய அரசு கேட்டால் மட்டுமே உபரியாக உள்ள தொகையை வழங்கும். நடப்பு 2019ஆம் ஆண்டில் இது வரையிலும் 68000 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேங்க் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச்
முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநரான பிமல் ஜலான் தலைமையிலான குழு தயாரித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் வங்கியின் சர்வதேச ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கை அளித்துள்ள தகவலின் படி இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்துள்ள உபரி இருப்பு கிட்டத்தட்ட 2 கோடியே 99 லட்சத்து 843 கோடி ரூபாய் ஆகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதம் ஆகும்.
அவசரகால கையிருப்புதான்
நம் ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்பு என்பது அவசர கால இருப்பாகவே உள்ளது என்றும், ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளின் மொத்த கையிருப்பை விட அதிகம் என்றும் பேங்க் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச் வங்கியின் தலைமை இந்திய பொருளாதார நிபுணர் இந்திரநில் சென் குப்தா தெரிவித்துள்ளார்.
உபரி இருப்பு குறைந்தது
மத்திய அரசின் பட்ஜெட் திட்டங்களுக்கு செலவழிக்க ரிசர்வ் வங்கி அவ்வப்போது தனது கையிருப்பில் உள்ள உபரி தொகையை அளித்து வந்ததால், 6.25 சதவிகிதத்தில் இருந்து தற்போது 3.25 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், மேலும் 1 லட்சத்தி 30ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வழங்கக்கூடும் என்றும் இந்திரநில் சென் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
வங்கிகளுக்கு உதவும் ஆர்பிஐ
கூடுதலாக வழங்கும் உபரி தொகையை வைத்து மத்திய அரசு கடன் பிரச்சனையில் தத்தளிக்கும் வங்கிகளுக்கு வழங்கி அவற்றை மறுசீரமைப்புக்கு உதவக்கூடும் என்றும் சென் குப்தா தெரிவித்துள்ளார்.
தேவையை விட குறைவுதான்
ரிசர்வ் வங்கி தேவைக்கு அதிகமாகவே உபரி இருப்பை வைத்திருந்து மத்திய அரசுக்கு அவ்வப்போது வழங்கி வந்தாலும், சிலர் ரிசர்வ் வங்கியின் உபரி இருப்பு என்பது தேவையை விட குறைவாக உள்ளதாக நினைக்கின்றனர் என்று பேங்க் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச் தனது குறிப்பில் தெரிவித்துள்ளது.
இப்பவே கண்ணை கட்டுதே
மத்திய ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் மூலதன இருப்பில் அந்நியச் செலாவணியாகவும் தங்கமாகவும் உள்ள இருப்பின் மதிப்பு சுமார் 27 லட்சம் கோடி ரூபாய்(அதாவது 400 பில்லியன் டாலர்கள்). கேட்கும் போதே தலையை சுத்துதுரா சாமியோவ்.