டெல்லி: நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டை விட்டு ஓடிவிட்டனர். கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் வெள்ளி ஏற்றுமதி சுமார் 75 சதவிகிதம் சரிந்ததற்கு மோசடி மன்னர்களான நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு ஓடிப்போனதே காரணம் என்று தெரியவந்துள்ளது.
நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் இணைந்து மோசடியாக கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய பின்னர் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் வெள்ளி ஏற்றுமதி வியாபாரம் கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் வெள்ளி ஏற்றுமதியானது சுமார் ரூ.23,692 கோடியாக இருந்துள்ளது. அது 2018-19ஆம் நிதியாண்டில் தடாலடியாக சரிந்து ரூ.5839 கோடியாக குறைந்தது.
விஜய் மல்லைய்யா
கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு மிக மோசமான ஆண்டுகளாக அமைந்துவிட்டது போல. கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு போய் உட்கார்ந்து விட்டார்.
நீரவ் மோடி, மெகுல் சோக்சி
விஜய் மல்லையாவுக்கு அடுத்து, குஜராத்தின் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி ஏற்றுமதி செய்யும் நீரவ் மோடியும் மெகுல் சோக்சியும் மற்றொரு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14000 கோடி ரூபாயை கடன் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர். நீரவ் மோடி மட்டும் லண்டனில் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டவர்கள் எல்லாம் வெளிநாடுகளில், ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது போல, ஹாயாக ஊர் சுற்றிக்கொண்டு நிம்மதியாக உள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டுள்ளது இந்திய மக்களின் வரிப்பணமும் வர்த்தகமும் தான்.
வெள்ளி ஏற்றுமதி
கடன் வாங்கி ஏப்பம் விட்டவர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்கும் தங்க, வைர வெள்ளி ஏற்றுமதிய வியாபரம் செய்தது வந்தனர். இவர்கள் ஓடிப்போனதால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் அவர்கள் ஏற்றுமதி செய்துவந்த வெள்ளி வியாபாரமும் படுத்துவிட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
75 சதவிகிதம் சரிவு
கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் நாட்டின் வெள்ளி ஏற்றுமதி சுமார் 23692 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் அது சுமார் 75 சதவிகிதம் சரிந்து ரூ.5839 கோடியாக குறைந்துவிட்டதாக ஜெம்ஸ் அண்டு ஜூவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (Jems & Jewellery Export Promotion Council-GJEPC) தரவு அறிக்கை தெரிவித்துள்ளது.
மாமன் மருமகன்
ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலின் உயர் அதிகாரிகளும், மாமனும் மருமகனும் (நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி) இணைந்து மோசடியாக கடன் வாங்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டபின்பு, கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் வெள்ளி ஏற்றுமதி வியாபாரம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
பாதிக்கப்பட்ட SEZ மண்டலம்
நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது சூரத் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்கள் தான். ஆனால் அதைப் பற்றிய முழுமையான தரவுகள் எங்களிடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் மழுப்புலாக பதிலளிக்கின்றனர்.
ஜிஎஸ்டி ரீஃபண்டு தாமதம்
ஒட்டுமொத்தமாக தங்கம், வைரம், வெள்ளி ஏற்றுமதியில் சுமார் 17422 கோடி ரூபாய் அதாவது 3 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளதாக ஜிஜேஇபிசி(GJEPC) துணைத் தலைவர் கோலின் ஷா கூறினார். அதோடு ஜிஎஸ்டி ரீஃபண்டு கிடைப்பதில் ஏற்பட்ட கால தாமதமும் ஏற்றுமதி குறையக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.