டெல்லி: ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமால் போனால், மற்ற வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதோடு சாதக, பாதகமான அம்சங்களை அறிந்துகொண்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்
வெனிசுலா மற்றும் ஈரான் நாடுகளின் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஆனால் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு மட்டும் ஈரானிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாகப் பண்டமாற்று முறையில் அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது.
இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை அடுத்து ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவது குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி
இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய் தேவைக்கு கிட்டத்தட்ட 93 சதவிகிதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமே பூர்த்தி செய்கிறது. உள்நாட்டில் சிறிதளவே கச்சா எண்ணெய் கிடைப்பதால் வேறு வழி இல்லாமல் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளோம்.
ரஷ்யாவுக்கு முன்னுரிமை
நம்முடைய கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதியை ரஷ்யா, ஓமன், ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தேவையை பூர்த்தி செய்துகொள்கிறோம். அமெரிக்கா உட்பட பிறநாடுகளில் இருந்து சிறிதளவே இறக்குமதி செய்துவருகிறோம்.
உலகளாவிய போலீஸ்காரன்
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஆகும் பணத்தை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்க டாலரின் மூலமாகவே திருப்பி செலுத்துகின்றன. இது அமெரிக்காவின் அடாவடி மற்றும் சட்டாம்பிள்ளைத்தனத்திற்கு உதாரணமாகும். வேறு வழியில்லாத இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் உத்தரவுக்கு கீழ்படிந்து நடந்துவருகின்றன.
ஈரானிலிருந்து இறக்குமதி
கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தொகையை பணத்தை அமெரிக்க டாலரில் தருவதற்கு மறுப்பு தெரிவித்ததோடு மாற்று வழியாக ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்வோம் என்று அடம் பிடித்தது.
பொருளாதாரத் தடை
இந்தியாவின் பிடிவாதத்தால் சற்று இறங்கி வந்த அமெரிக்காவும் தற்காலிகமாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ள ஒப்புக்கொண்டது. அதுவும் தற்காலிகப் பண்டமாற்று அனுமதியில் பேரில் மட்டுமே. காரணம், ஈரான் அணு ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளதாக நம்பியதால், ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்ததுதான்.
பண்டமாற்று முறை
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததோடு பிற நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடையும் விதித்தது. ஆனால் இந்தியா உட்பட சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அனுமதி தற்காலிகமாகப் பண்டமாற்று முறையில் அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது.
அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்கா அளித்த தற்காலிக பண்டமாற்று முறையிலான அனுமதி வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவதால், அதன் பின்னர் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் ஈரானிடம் இருந்து எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. மீறி ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் அந்த நாட்டின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கச்சா எண்ணெய்க்கு எங்கே போவேன்
அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து பேட்டியளித்த பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ஈரானில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்க்கு இணையாக நமக்குத் தேவையான கச்சா எண்ணெயை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இறக்குமதி சரிந்தது
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு ஈரானிடமிருந்து அதிகளவில் (36.7 சதவிகிதம்) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. இறக்குமதிக்கான பணத்தையும் இந்திய ரூபாயின் மதிப்பிலேயே ஈரானுக்கு அளித்துவந்தது. அமெரிக்காவின் பொருளாதார தடைக்குப் பிறகு ஈரானிடமிருந்து, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது.
ஈரான், வெனிசுலா
தற்போது ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதால், பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இவ்விரண்டு நாடுகளுமே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வலம் அதிகமுள்ள நாடுகள்.
தர்மேந்திர பிரதான் யோசனை
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரான், வெனிசூலா ஆகிய இரண்டு நாடுகளிலிருந்து இந்தியாவால் இனிமேல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யமுடியாது. எனவே மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான அனைத்து சாத்தியக்கூறகளையும் ஆராய்ந்து பரிசீலனை செய்து அதற்கேற்ப முடிவெடுப்போம் என்றும் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.